மும்பை: வங்கிகள் மீதான வாடிக்கையாளர்களின் புகார்கள் கடந்த, 2018- ஜூன் வரையிலான ஓராண்டு காலத்தில் வங்கி குறைதீர்ப்பு மையங்களில் (banking ombudsman) மட்டும் 1.63 லட்சம் புகார்கள் குவிந்துள்ளன.
இது முந்தைய ஆண்டை விட, 24 சதவிகிதம் அதிகமாகும். இதில் 96 சதவிகித புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இவ்வாறு அளிக்கப்பட்ட புகார்களில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக இவ்வங்கி மீது 47ஆயிரம் புகார்கள் குவிந்துள்ளனவாம்.
இரண்டாவது இடத்தில் ஹெச்.டி.எப்.சி. வங்கியாகும். சுமார் 12 ஆயிரம் புகார்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சிட்டி பேங்க் மீது 1,450 புகார்களும் கூறப்பட்டுள்ளன. இதற்கு காரணம் வங்கிகள், விதிகளின்படி வெளிப்படையாக நடந்து கொள்வதில்லை என புகார்கள் எழுந்துள்ளன. நியாயமான நடைமுறை இல்லை என 22.1 சதவிகித புகார்கள் வந்துள்ளன.
ஏ.டி.எம் & கிரெடிட் கார்டு புகார்கள்
இதையடுத்து, ஏ.டி.எம் மற்றும் டெபிட் கார்டு தொடர்பாக, 15.1 சதவிகிதமும். கிரெடிட் கார்டு தொடர்பாக 7.7 சதவிகிதமும், இணையதள வாயிலான நெட் பேங்கிக் வங்கிச் சேவை குறித்து 5.2 சதவிகித புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.
அறிவிப்பில்லாத சேவைக் கட்டண புகார்கள்
ஓய்வூதியம் குறித்த புகார்கள், முன்கூட்டியே தெரிவிக்காமல் எடுக்கப்படும் சேவைக் கட்டணம் வசூலிப்பது, கடன், டெபாசிட், நேரடி விற்பனையில் ஈடுபட்டுள்ள முகவர்கள், வாராக் கடன் மீட்பு நடவடிக்கைகள், வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல்களை அளிப்பது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக தலா 5 சதவிகித புகார்களூம் வந்துள்ளன.
தீர்வு காணப்பட்ட புகார்கள்
மத்தியஸ்தம் மூலம் தீர்வு காணப்பட்ட புகார்கள் 65.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது, இது இதற்கு முன்னர் 42.4 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கி குறைதீர்ப்பாயங்கள், வாடிக்கையாளர்களின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
பரிசீலனை செலவும் குறைந்து வருகிறது
இதனால், வங்கிகள் மீதான புகார் பரிசீலனை செலவினங்கள் குறைந்து வருகின்றன. ஒரு புகாரை பரிசீலிக்க ஆகும் சராசரி செலவு, 3,626 ரூபாயிலிருந்து, 3,504 ரூபாயாக குறைந்துள்ளது. எப்படியோ மக்களின் சேவைக்கு வித்திட்டால் சரியே.