டெல்லி: நாட்டின் சூரியசக்தி மின் உற்பத்தி நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் 15 சதவிகிதம் வரையிலும் அதிகரித்து 7000 முதல் 7500 மெகாவாட் ஆக உயரக்கூடும் என்று இக்ரா நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
கடந்த 12 முதல் 15 மாதங்களில் நடைபெற்று வரும் சூரிய சக்தி மின் திட்டங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் நடைபெற்று வரும் திட்டப்பணிகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் சூரிய சக்தி மின்உற்பத்தி திட்டங்களை நடத்துவதில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக மின் உற்பத்தி 6000 முதல் 6500 மெகா வாட் வரை இருந்தது என இக்ரா நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
தடையில்லா மின்சாரம்
நாட்டில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப மின் உற்பத்தி திட்டங்களையும் அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகும். மத்திய அரசும் வெகு விரைவில் அனைத்து கிராமங்களுக்கும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சார வசதி அளிக்க உறுதி பூண்டுள்ளது.
மின் உற்பத்தி திட்டங்கள்
நாட்டின் உள்கட்டமைப்பு பணிகளுக்கும், புதிய தொழிற்சாலைகளை தொடங்கி நடத்துவதற்கு ஆகும் மின்சாரத் தேவையின் அளவையும் உத்தேசமாகக் கணக்கிட்டு அதற்கேற்ப புதிய மின் உற்பத்தி திட்டங்களை தீட்டுவதும் அவசியமாகும். புதிய தொழில்களில் முதலீடு செய்ய முன்வருவோர் முதலில் யோசிப்பது, தொழிற்சாலைகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்குமா என்பதுதான்.
சூரிய சக்தி மின்சாரம்
நிலக்கரியின் மூலம் உற்பத்தி செய்யப்படும் அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கிடைப்பதில் அடிக்கடி சிக்கல் ஏற்படுகிறது. நீர்மின்சக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ஆண்டு முழுவதும் போதுமான மழை பெய்வதில்லை. மத்திய அரசும் இதையெல்லாம் நன்கு பரிசீலித்து தான் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்துவருகிறது.
தென் மாநிலங்கள் முன்னோடி
நம் நாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்கள் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை நிறுவி நடத்துவதில் நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றன. மத்திய அரசும் வரும் 2022ஆம் ஆண்டுக்குள் சூரியசக்தி மின் உற்பத்தித் திறனை 1 லட்சம் மெகா வாட்டாக உயர்த்த திட்டமிட்டு இலக்கு நிர்ணயித்துள்ளது.
70000 மெகா வாட்
கிரிசில் (CRISIL) தர நிர்ணய நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி நாட்டின் சூரியசக்தி மின் உற்பத்தி திறன் வரும் 2022ஆம் ஆண்டில் 60000 மெகா வாட்டாகவும், 2023ஆம் ஆண்டில் 70000 மெகா வாட்டாகவும் மட்டுமே உயரும் என்று தெரிகிறது.
கூடுதல் மின்உற்பத்தி
கடந்த 2018ஆம் ஆண்டில் 11 கிகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதுவே கடந்த 2017ஆம் ஆண்டில் 4.5 கிகாவாட் திறன் கொண்ட உற்பத்தி திட்டங்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் அதிக அழுத்தத்தை தாங்கும் மின் கம்பிகளின் மூலம் கூடுதலாக மின்உற்பத்தி செய்யப்படும் என்று உற்பத்தி திறன் அதிகரிப்பில் மேற்கூரை சூரியமின் தகடுகளின் பங்கு 1,000 மெகா வாட்டாக இருக்கும் என்றும் இக்ரா நிறுனத்தின் துணைத் தலைவர் கிரிஷ்குமார் கதம் கூறினார்.
தெளில்லாத அரசு கொள்கை
மத்திய அரசு சூரிய மின்சக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிப்பதாகச் சொன்னாலும், சூரிய மின்சக்தி உற்பத்திக்கு தேவையான சூரிய மின் தகடுகளை இறக்குமதி செய்வதற்கு உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பு வரி (Domestic Business Security Tax) விதித்துள்ளது. அதோடு இந்தப் பிரிவில் அடிக்கடி ரத்து செய்யப்படும் ஒப்பந்தங்கள், அரசுக் கொள்கைகளில் தெளிவில்லாத தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சூரியசக்தி மின் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் பின்னடைவு ஏற்படும் என கிரிசில் நிறுவனம் கூறி இருக்கிறது.
ஆண்டுக்கு 10000 மெகா வாட் அதிகரிக்கும்
2017-18ஆம் நிதி ஆண்டில் சூரியசக்தி மின் உற்பத்தி துறையின் திறன் 9000 மெகா வாட் அதிகரித்தது. கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் இது 6000 முதல் 6500 மெகா வாட்டாக குறைந்து இருக்கும் என இக்ரா தர நிர்ணய நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் (2019-20) சுமார் 7500 மெகா வாட் அதிகரித்து, பிறகு 2022-23 வரை ஆண்டுக்கு 10,000 மெகா வாட் அதிகரிக்கும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
மின் உற்பத்தி உயரும்
இந்நிலையில், கடன் தகுதி தர நிர்ணய நிறுவனமான இக்ரா மாறுபட்ட மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் நாட்டின் சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 7,000 முதல் 7,500 மெகா வாட் வரை உயரும் என மதிப்பீடு செய்துள்ளது.