Jet Airways நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் நிறுவனத்தை எப்படி இயக்குவது என முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது எஸ்பிஐ வங்கி. மற்றொரு பக்கம் Jet Airways நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் ஜெட் ஏர்வேல் நிறுவனத்தின் பிரச்னைகள் வொவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. முதலில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கி இருந்த 8,500 கோடி ரூபாய் கடன் செலுத்தவில்லை எனத் தொடங்கிய பிரச்னை படிப்படியாக இன்று வரை வளர்ந்து கொண்டிருக்கிறது.
சம்பளப் பிரச்னை, விமான எரிபொருளுக்கு கடன் பாக்கி, ஹெச் எஸ் பி சி (HSBC) வங்கியிடம் வாங்கிய 140 மில்லியன் டாலர் கடன் பாக்கி, விமானங்களுக்கான குத்தகைத் தொகை பாக்கி, பயணிகளுக்கான ரீஃபண்ட் தொகை பாக்கி என நொந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் இந்த சம்பவங்களுக்கு அனைவரும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் இந்திய விமான சேவை நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை ஷார்ப்பாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு பாகமாக Jet Airways-ன் விமானிகளை இண்டிகோவும், ஸ்பைஸ் ஜெட்டும் வேலைக்கு எடுத்து வருகிறார்கள்.
நேர்காணல்
தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் சுமார் 1,300 விமானிகள் வேலை இன்றி தவிக்கிறார்கள். ஏற்கனவே நான்கு மாத சம்பள பாக்கி வேறு. இதனால் சில விமானிகள் தற்காலிகமாக நிலைமையை சரி செய்ய இண்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் போன்ற போட்டி நிறுவனங்களுக்கே வேலைக்கு செல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.
சுத்தமாக வேலை இல்லை
கடந்த ஏப்ரல் 17, 2019-ல் இருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்காலிகமாக தன் அனைத்து விமானங்களை தரை இறக்கியதில் இருந்து, சுத்தமாக வேலை இல்லாமல் தவிக்கிறார்கள் விமானிகள் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள். ஆக நிலைமையை சரி செய்ய, சில ஜெட் ஏர்வேஸ் விமானிகள், ஸ்பைஸ் ஜெட் நடத்திய விமானிகள் நேர்காணலில் கலந்து கொண்டார்களாம்.
எல்லாம் தர்ம காரியம் தான்
அங்கு சில ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன அதிகாரிகள் நேர்காணலின் போதே "உங்களை எல்லாம் வேலைக்கு எடுத்து தர்ம காரியம் செய்கிறோம். பாவம் அதிகம் சிராமப்படுகிறீர்கள் தானே. ஜெட் ஏர்வேஸ் விமானிகளை அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுப்பதற்கு பதிலாக, பயிற்சி மாணவர்களை களம் இறக்கினால், எங்கள் நிறுவனத்துக்கு 25 லட்சம் பணமும், 25 லட்சம் ரூபாய்க்கு மேற்கொண்டு பத்திரமும் எழுதிக் கொடுத்து வேலை பார்ப்பார்கள். இத்தனை வருவாய் மற்றும் வருமானங்களைத் தாண்டி உங்களை (ஜெட் ஏர்வேஸ் விமானிகளை) நிறைய சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம்" எனச் சொல்லி இருக்கிறாராம்.
தேசிய விமானிகள் சங்கம்
இந்த செய்தி உண்மையாக இருந்தால், இப்படிப்பட்ட நாகரீகமில்லாத நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே பண நெருக்கடியில் இருக்கும் எங்கள் சக ஊழியர்களை இந்த வார்த்தைகள் மேலும் காயப்படுத்துவதாகவும், அவமானப்படுத்துவதாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட நாகரீகமற்ற வார்த்தைகள் எங்களுக்கு அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார்கள் தேசிய விமானச் சங்கத்தினர்.
ஸ்பைஸ் ஜெட் தரப்பு
இது முற்றிலும் பொய்யான தகவல். நாங்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகளை வேலைக்கு எடுக்கத் தான் ஏப்ரல் 23, 2019 அன்று மும்பைக்கு வந்தோம். எந்த ஒரு விமானியையும் காயப்படுத்துவதற்கோ, அவர்கள் நிலையை கேலி பேசவோ நாங்கள் வரவில்லை. அதே போல் இப்போது வேலைக்கு சேரும் விமானிகளிடமும் 25 லட்ச ரூபாய்க்கு பாண்ட் எழுதுகிறோம். இது எங்கள் மனித வள மேம்பாட்டு துறையின் சாதாரண நடவடிக்கைகள் தான். இது வழக்கமாக வேலைக்கு எடுக்கும் போது கடைபிடிக்கப்படும் கொள்கைகள் தான் என பதில் அளித்திருக்கிறார்கள் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தினர்.