இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுஸிகி தான். கடந்த 2018-ல் மொத்த இந்தியா கார் சந்தைகளில் 51 சதவிகிதத்தை தனி ஒரு நிறுவனமாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் நடுத்தர மற்றும் பட்ஜெட் க்ளாஸ் மக்களுக்கான கார்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனம் வரும் ஏப்ரல் 2020 முதல் டீசல் கார்களைத் தயாரிக்கப் போவதில்லை எனச் சொல்லி அதிர்ச்சி கிளப்பி இருக்கிறார்கள்.
என்ன காரணம் எனக் கேட்டால் "டீசல் கார்களைத் தயாரிக்கும் செலவு பெட்ரோல் கார் தயாரிப்புச் செலவை விட கூடுதலாக இருக்கிறதாம். அதோடு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பாரத் ஸ்டேஜ் 6 விதிமுறைகளும் மிகக் கடுமையாக இருக்கிறது. இந்த கடுமையான பாரத் ஸ்டேஜ் 6 எமிஷன் விதிமுறைகள் வேறு காரின் உற்பத்தி செலவை மேலும் அதிகப்படுத்துகின்றனவாம். இத்தனை செலவுகளைத் தாங்கிக் கொண்டு டீசல் கார்களை உற்பத்தி செய்து விற்று லாபம் பார்க்க முடியாது. " என்கிறது மாருதி.
முதல் கார்
1999-ம் ஆண்டில், இந்தியாவில், ஜென் மினி (Zen Mini) காரை மாருதி சுஸிகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அது தான் மாருதி சுஸிகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் டீசல் கார். இப்போது வரை மாருதி சுஸிகி நிறுவனம் எட்டு மாடல்களில் டீசல் கார்களை தயாரிக்கின்றன.அந்த எட்டில் இரண்டு ரக கார்களுக்கு டீசல் வேரியண்ட்கள் மட்டுமே.
அந்த 8 மாடல்கள்
இந்த எட்டு மாடல்களில் மாருதி சுஸிகியின் பிரியமான விட்டாரா ப்ரெஸ்ஸா மற்றும் எஸ் க்ராஸு என இரண்டு எஸ்யூவிக்களும் அடக்கம். இந்த இரண்டு காருக்கும் பெட்ரோல் வேரியண்ட்களே கிடையாது. ஆக மீண்டும் இந்த கார்களுக்கான பெட்ரோல் வேரியண்ட்களை அறிமுகப்படுத்த வேண்டும். மற்ற ஆறு ரக வாகனங்களான Swift, Baleno, Dzire mini sedan, Ertiga MPV, Ciaz sedan மற்றும் வணிக வாகனமாக பயன்படுத்தப்படும் Super Carry light போன்ற வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்கள் இருக்கின்றன.
இது தான் காரணம்
வரும் ஏப்ரல் 01, 2020-க்குப் பிறகு பாரத் ஸ்டேஜ் 4 எமிஷன் வாகனங்களுக்கு முழு தடையும் விதித்திருக்கிறது இந்திய அரசு. இந்த தடை உத்தரவு, மாருதி சுஸிகி நிறுவனத்தின் டீசல் கார் விற்பனை எண்ணிக்கைகளில் பிரதிபலிக்கிறது. 2012- 13 நிதி ஆண்டில் இந்தியாவில், மாருதி சுஸிகியின் மொத்த கார் விற்பனையில் 47% டீசல் கார்கள் தான். ஆனால் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் மாருதி சுஸிகியின் மொத்த கார்கள் விற்பனையில் 19% மட்டுமே டீசல் கார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
விலை பிரச்னை
சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கான விலை வித்தியாசம் சுமாராக 1 லட்சம் ரூபாயாக இருக்கிறது. ஏப்ரல் 01, 2020-க்குப் பிறகு டீசல் கார்களின் விலை இன்னும் உயரும். அதோடு டெல்லி போன்ற பெருநகரங்களில் டீசல் கார்களுக்கான ஆயுட்காலம் 10 ஆண்டுகளாக குறைத்திருக்கிறார்கள். ஆனால் பெட்ரோலுக்கு இன்னும் 15 ஆண்டுகளாக இருக்கிறது. இப்படி சில காரணங்களால் மக்கள் டீசல் கார்களை விடுத்து பெட்ரோலுக்கு டிக் அடித்து விடுகிறார்கள்.
டீசலை நம்பியா
இந்தியாவில் ஆழமாக கால் பதித்திருக்கும் மாருதியே தன் டீசல் கார்களுக்கு நோ சொல்லிவிட்டது. ஆனால் இப்போது தான் இந்திய கார் சந்தைகளில், தவளத் தொடங்கி இருக்கும் மஹிந்திரா & மஹிந்திரா, டொயோட்டா, டாடா மோட்டார்ஸ் என பலரும் டீசல் கார்களை நம்பித் தான் பிழைப்பையே நடத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.