சென்னை: உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஏற்படும் வேலை இழப்பு, நீங்கள் பணியாற்றிக் கொண்டிருந்த நிறுவனம் எதிர்பாராத விதமாக மூடப்படுவதால் ஏற்படும் வேலை பறிபோதல் அதனால் ஏற்படும் சம்பள இழப்பு போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உங்களை காத்துக்கொள்வது எப்படி என்பதற்கான ஒரு சிறிய விழிப்புணர்வுக்காகவே இந்த கட்டுரை.
கடந்த ஒரு மாதமாகவே அனைத்து நாளிதழ்களிலும் தவறாமல் இடம்பிடித்த செய்தி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவை நிறுத்தமும் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த 16000 ஊழியர்கள் மற்றும் பைலட்களின் வேலை இழப்பும், நிலுவை சம்பளத்தை பெற முடியாமால் நடுத்தெருவுக்கு வந்த அவலமும் தான்.
ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள், பைலட்களின் நான்கு மாத சம்பள பாக்கியை இப்போதைக்கு தரமுடியாது என்று நிர்வாகம் கைவிரித்துவிட்டதால், அனைவரும் அதிர்ச்சியும் துக்கமும் அடைந்தனர். விமான நிறுவனம் மூடப்பட்டதால் ஊழியர்கள் அனைவரும் நடுத்தெருவிற்கு வந்து விட்டனர். வேறு இடத்திற்கு வேலைக்குப் போனாலும் மதிப்பும் மரியாதையும் கிடைப்பதில்லை என்பதுதான் வேதனை.
பரிதாப நிலைமை
தங்களின் சம்பளத்தை நம்பியே அனைவரும் தங்களின் மாதாந்திரச் செலவுகள் மற்றும் கடனக்கான இஎம்ஐ போன்றவற்றுக்கு திட்டமிட்டிருப்பார்கள். எதிர்பாராதவிதமாக சம்பளம் நின்றுபோனதால் வேறு வழி தெரியாமல் அனைவரும் வீதியில் இறங்கி போராடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.
காணாமல் போன சுயமரியாதை
நேற்று வரையிலும் தங்களை பார்ப்பவர்கள் மரியாதை கலந்த வணக்கத்தை செலுத்தும்போது, அதை சற்று கர்வத்துடனும் கவுரவத்துடனும் ஏற்றுக்கொண்டவர்கள், இன்றைக்கு அந்த கவுரவம் காணாமல் போனதால் ஏற்பட்ட ஆற்றாமையின் காரணமாக தங்களையே மாய்த்துக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்படுவது ஜீரணிப்பதற்கு சற்று சிரமமாகத்தான் இருக்கும்.
திட்டமிடல் இல்லை
இந்த எதிர்பாராத இழப்பு என்பது, ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிர்பாராத விதமாக ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் இந்த பரிதாப நிலைமைக்கு முக்கிய காரணம், அவர்களில் பெரும்பாலானவர்களிடம் சரியான நிதித் திட்டமிடல் இல்லாதது தான். இந்த தவறை நம்மில் அனைவரும் பாகுபாடு இல்லாமல் செய்வதுதான் வேதனையான உண்மையும் கூட.
எப்படி செலவழிப்பது
மாதச் சம்பளம் வாங்குவோரில் பெரும்பாலானவர்கள் சம்பளம் வாங்கிய கையோடு அதை உடனடியாக எந்த வழியில் எல்லாம் செலவழிப்பது என்று போட்டி போட்டு செலவழிக்கின்றனரே தவிர, அதை விட்டுவிட்டு, ஏன் அந்த செலவை மேற்கொள்ளவேண்டும், அதனால் நமக்கு என்ன பயன் என்று சிந்திக்காமல் அசட்டையாக இருந்துவிடுவதுதான். இதற்கு காரணம் சரியான நிதித் திட்டமிடல்தான் இல்லாததுதான்.
தயார் நிலை
நிதிச் சிக்கல் என்பது வேலையிழப்பு ஒன்று மட்டுமே கிடையாது. எதிர்பாராத விதமாக ஏற்படும் மருத்துவச் செலவு, நம் சொந்த பந்தங்களில் ஏற்படும் எதிர்பாராத உயிரிழப்பு போன்றவற்றால் ஏற்படும் செலவுகளுக்கும் நம்மை தயார்படுத்திக் கொள்வதற்கு நாம் சரியான முறையில் திட்டமிட்டு செலவும், முதலீட்டையும் செய்திருந்தால், இக்கட்டான சூழ்நிலையில் அது நமக்கு பேருதவியாக இருக்கும்.
நாம் எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளுக்கு ஏற்ப நம்மை தயார்படுத்திகொள்ள எவ்வகையிலான திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை காணலாம்.காப்பீட்டு திட்டங்கள்
காப்பீட்டுத் திட்டங்களிலும் பல வகைகள் உண்டு. அவற்றில் நமக்கு தேவையானதைத் தேர்ந்தெடுத்து அவற்றில் நம்முடைய பணத்தைப் போட்டால் எதிர்பாராத செலவுகளுக்கு அது சமயத்தில் கை கொடுக்கும் என்பது நிச்சயம்.
ஆயுள் காப்பீடு
உங்கள் குடும்பத்தில் நீங்கள் மட்டுமே சம்பாதிப்பவராக இருந்தால் அதற்கேற்ப ஆயுள் காப்பீடு செய்வது மிக அவசியமாகும். எதிர்பாராதவிதமாக ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அப்போது நீங்கள் செய்த காப்பீட்டுத் தொகை உங்கள் குடும்பத்தை காப்பாற்றும் என்பது நிச்சயம்.
நீங்கள் எடுக்கும் ஆயுள் காப்பீட்டு குறைந்த அளவிலான பிரீமியம் தொகையாவும் உங்களின் ஓய்வூதிய காலம் வரையிலும் தொடர்ந்து கட்டும் வரையிலும் இருக்க வேண்டியது அவசியம். மேலும் நீங்கள் எடுக்கும் காப்பீட்டுத் தொகையானது உங்களின் மாதாந்திர செலவுகளைக் காட்டிலும் குறைந்தது 15 மடங்காக இருக்கவேண்டும். அதேபோல் வீட்டுக்கடன் போல் அதிக தொகையாகவும் இருக்கவேண்டும் என்று ஆரோக்கியம், வாழ்க்கை முறை மற்றும் திட்டமிடல் ஆகியவற்றை நடத்தும் கவர்ஃபாக்ஸ் (Coverfox) நிறுவனத்தின் இயக்குநர் மஹாவீர் சோப்ரா தெரிவித்தார்.
மருத்துவக் காப்பீடு
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மருத்துவக் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும் அசட்டையான காரணங்களால் காப்பீடு எடுப்பதை தள்ளிப்போடுகின்றனர். தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அளிக்கின்றன. ஆனால் இதில் உள்ள குறைபாடு என்னவெனில், ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டாலோ அல்லது நின்றுவிட்டாலோ அந்த மருத்துவக் காப்பீடு ரத்து செய்யப்பட்டுவிடும். அப்போது உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் மருத்துவச் செலவுக்கு இரண்டு மடங்காக செலவு செய்ய நேரிடும். ஆகவே இதுபோல் சமயங்களில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ள நீங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தனியாக மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால் உங்களுக்கு தக்க சமயத்தில் அது கடவுளாக நின்று காப்பாற்றும்.
அவசரகால நிதி
நீங்கள் வேலையில் இருக்கும்போதே சிறிது சிறிதாக குறிப்பிட்ட தொகையை தனியாக வங்கிக் கணக்கிலோ அல்லது ஏதாவது ஒரு நிதித் திட்டத்திலோ முதலீடு செய்துவரவேண்டியது அவசியம். நீங்கள் செய்யும் முதலீடு நீங்கள் வேலையை விட்டு நிற்கும் போது நீங்கள் பெற்ற மாத சம்பளத்தைக் காட்டிலும் 3 மடங்கு கூடுதலாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். அதிலும் நீங்கள் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுபவராக இருக்கும் பட்சத்தில் 4 மாத சம்பளத்தை அவசரகால நிதியாக சேர்த்துவைக்கவேண்டியது அவசியம் என்கிறார் சர்வதேச நிதித் திட்டமிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான லொவாய் நவ்லக்கி. ஆகவே பணியில் இருக்கும்போதே மேற்கண்ட நிதித் திட்டங்களை தேர்ந்தெடுத்து அவற்றில் உங்கள் பணத்தை முதலீடு செய்திருந்தால் சுனாமியே வந்தாலும் கலங்காமல் நின்று உங்களை காப்பாற்றிக் கொள்ளலாம்.