மும்பை: ஒரு நாடு தன்னுடைய பெரும்பகுதியான எண்ணெய்த் தேவைகளை இறக்குமதி செய்து கொள்கிறது என்றால், கச்சா எண்ணெய் விலை ஏற்றம் ஒரு மோசமான செய்தி தான். இந்தியா அப்படி ஒரு கச்சா எண்ணெய் இறக்குமதி நாடு தான்.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய்த் தேவைகளில் 80 சதவிகிதத்துக்கு மேல் இறக்குமதி செய்து தான் நாட்டையே ஓட வைக்கிறோம். இப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் (பிரண்ட் கச்சா எண்ணெய்) விலை 75 அமெரிக்க டாலருக்கு மேல் இருக்கிறது.
2016 - 17 நிதி ஆண்டில் 103 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்தோம். அடுத்த 2017 - 18 நிதி ஆண்டில் 130 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்திருக்கிறோம். 2018 - 19 நிதி ஆண்டில் 140.47 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்திருக்கிறோம். உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதனால் என்ன மாதிரியான பிரச்னைகளை நாம் எதிர் கொள்வோம்..?
சந்தை சரியும்
என் எஸ் இ-ன் வாலிடைலிட்டி இண்டெக்ஸ் கடந்த 3 வருடங்களில் இல்லாத அளவுக்கு 24.6 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை அனாமத்தாக அதிகரித்தால் பரவாயில்லை., கூடவே மக்களவைத் தேர்தல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து 70 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாவது, மார்ச் 2019 காலாண்டு முடிவுகள் கொஞ்சம் சுமாராக இருப்பது, வேலையில்லா திண்டாட்டம், உள்நாட்டு நுகர்வு சரிந்திருப்பது, தென் மேற்கு பரவமழை குறையும் என்கிற பயம், தனியார் நிறுவனங்கள் தங்களின் முதலீட்டு செலவீனங்களை குறைத்துக் கொள்வது என எல்லா ராகு கேதுகளையும், சனி பகவான்களையும் அழைத்துக் கொண்டு விலை ஏறுகிறது. எனவே சந்தை சரமாரியாக அடிவாங்கலாம் என்கிறார்கள் அனலிஸ்டுகள்.
இன்னும் கச்சா எண்ணெய் விலை உயரும்
மேக்ரோ முதலீட்டாளரான ரித்தேஷ் ஜெயின் "தற்போது கச்சா எண்ணெய் விலை என்பது ஒரு புவியியல் சார்ந்த பிரச்னையாக பரிணமித்துவிட்டது. எனவே கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் மிகக் கடுமையாக இருக்கும். கச்சா எண்ணெய் விலைக்கான சப்போட்டுகள் அதிக விலையில் மிகவும் அழுத்தமாக வலு பெறுகின்றன. ஆக இனி கச்சா எண்ணெய் விலை குறைவது என்பது கொஞ்சம் சிரமம் தான். தற்போது கச்சா எண்ணெய் சந்தையில் நாள் ஒன்றுக்கு, 1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சப்ளை செய்து வந்த ஈரானை முடக்கிவிட்டது அமெரிக்கா. ஆனால் ஈரானின் 1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சப்ளையை லிபியா தன் 1.1 மில்லியன் பேரலால் நிரப்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறது" என்கிறார்.
எண்ணெய் வள நாடுகள் முடிவு
சவுதி அரேபியாவும் மற்ற ஒபெக் நாடுகளும் அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்துமா..? அல்லது கண்டும் காணாமல் விட்டு, கச்சா எண்ணெய் விலையை உயரச் செய்யுமா..? என்பதையும் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த ஒரு முடிவால் இந்தியாவின் எதிர்கால பொருளாதாரமே அடங்கி இருக்கிறது. அப்படி ஒருவேளை கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்றால் என்ன ஆகும்..?
இந்தியப் பொருளாதாரம்
ஏற்கனவே சொன்னது போல, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை, வர்த்தக பற்றாக்குற எல்லாமே அதிகரிக்கும். பணவீக்கம் விரைவாக அதிகரிக்கும். இந்த ஒரு பயத்திலேயே சென்செக்ஸ் 40,000-த்தை தொடாது, நிஃப்டி 11,800-ஐக் கடக்காது, இந்தியாவில் நுகர்வு இன்னும் குறைந்துவிடும், நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்திலேயே முதலீடு செய்யமாட்டார்கள், Capital Expenditure குறைந்துவிடும். மொத்த இந்தியப் பொருளாதாரமும் அடிவாங்கும். ஜிடிபி வளர்ச்சி பாதாளத்துக்குச் செல்லும் என பயமுறுத்துகிறார்கள், அனலிஸ்டுகள்.