டெல்லி: Mothers Dairy என்கிற பால் மற்றும் பால் பொருட்களை உற்பத்தி செய்து விற்கும் நிறுவனத்தில், கடந்த 2017-ல் இருந்து இப்போது வரைக்குமான இரண்டு ஆண்டு காலங்களில் இரண்டு நிர்வாக இயக்குநர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
கடந்த ஜூன் 2017-ல் தான் Mothers Dairy நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த எஸ் நாகராஜன் பதவி விலகினார். அவர் இடத்தை நிரப்பத் தான் சஞ்சீவ் கன்னா அழைத்து வரப்பட்டார்.
ஆனால் இன்று சஞ்சீவ் கன்னாவும் தன் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார். கடந்த 2009 முதல் 2010 வரையான இரண்டு ஆண்டு காலத்தில் சஞ்சீவ் கன்னா தான் Mothers Dairy நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
தயாரிப்பு நிறுவனம்
2010-க்குப் பிறகு பெப்ஸிகோ நிறுவனத்தின் குளிர்பானங்களைத் தயார் செய்யும் எஸ்பிசி பிவரேஜஸ் கானா என்கிற நிறுவனத்தில் முதன்மைச் செயல் அதிகாரியாக பதவி ஏற்று நடத்தி வந்தார். சரி இப்போது ஏன் Mothers Dairy நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறார் எனக் கேட்டால், அவர் எடுத்த முதலீட்டு முடிவுகள் என்கிறார்கள்.
சொதப்பிய முதலீடு
சஞ்சீவ் கன்னா சமீபத்தில் திவால் ஆன Infrastructure Leasing & Financial Services - IL&FS நிறுவனத்தில் சுமார் 190 கோடி ரூபாயை, Mothers Dairy நிறுவனப் பணத்தை, நல்ல லாபம் கிடைக்கும் என ஆக்ஸ்ட் 2018-ல் முதலீடு செய்துவிட்டாராம். இப்போது தான் மொத்த நிறுவனமும் ஊத்தி முழுகிவிட்டதே, அதன் பின் எப்படி போட்ட பணம் வரும். இந்த கடுப்பில் தான் சில உள் பிரச்னைகள் எழுந்திருக்கிறதாம். அதை சமாளிக்க சஞ்சீவ் கன்னா ராஜினாமா செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
உடல் நிலை
ஆனால் Mothers Dairy நிறுவனத்திடம் கேட்டால் கடந்த பிப்ரவரி 01, 2019 அன்றே சஞ்சீவ் கன்னா ராஜினாமா செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். காரணம் அவருக்கு சில உடல் நலக் கோளாறு இருந்ததாம். அதனால் தான் ராஜினாமா செய்தார் என்று சொல்கிறார்கள். இதை வரும் இயக்குநர் குழுக் கூட்டத்தில் பேசி ஒரு முடிவுக்கு வர இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
பெரிய தலைகள் ராஜினாமா
கடந்த 1974-ல் இருந்து Mothers Dairy நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆனால் 2017-ல் நாகராஜன் ராஜினாமா செய்த பின் பல்வேறு பெரிய பிரச்னைகள், ராஜினாமாக்களில் பெயர் அடிபட்டுக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த நிறுவனத்தின் பால் விற்பனைத் துறையின் தலைவர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைத் தலைவர், முதன்மை நிதி அதிகாரி என பலரும் ராஜினாமா செய்தார்கள். இவர்கள் அனைவருமே ந்சொல்லி வைத்தாற் போல நாகராஜனின் ராஜினாமாவுக்குப் பிறகு ஒவ்வொருவராக பதவி விலகி வருகிறார்கள். இன்னும் என்ன பிரச்னைகள் எல்லாம் காத்திருக்கிறதோ தெரியவில்லை.