டெல்லி: கோடைகாலத்தில் வழக்கமாக கைகொடுக்கும் மழையின் அளவு இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பெய்யாததால் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக தென்மேற்கு பருவ மழைக்கு முந்தைய காலமான மார்ச் முதல் மே மாத இறுதி வரையிலான கோடை காலத்தில் நாடு முழுவதும் பரவலாக 59.6 மில்லிமீட்டர் மழைபொழிவு இருக்கும்.நடப்பு ஆண்டில் கோடையில் வழக்கமாக பெய்யும் மழையின் அளவைவிட 27 சதவிகிதம் குறைந்துள்ளதால் கோடை மழையை நம்பிய விவசாயிகள் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர்.
விவசாய உற்பத்தி பாதிப்படைந்து பயிறு, பருப்பு உற்பத்தி குறைந்து போனால் விலைவாசி உயரும் அபாயம் எழுந்துள்ளது. தென்மேற்கு, வடகிழக்குப் பருவழைகள் கை கொடுத்தால் மட்டுமே விலைவாசி உயர்வை தடுக்க முடியும்.
3ஆவது இடத்தில் இந்தியா
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது விவசாய உற்பத்தியை சார்ந்துள்ளது. மழையை நம்பித்தான் நாட்டின் பெரும்பாலான பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர். ஆசியக்கண்டத்தில் 3ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவில் பருவமழைதான் விவசாயத்திற்கு தேவையான 70 சதவிகித நீரைத் தருகிறது.
ஏமாற்றும் பருவ மழை
ஆண்டு தோறும் தொடர்ந்து ஒரே அளவு மழைப்பொழிவு இருப்பதில்லை. ஒரு ஆண்டு அதிக அளவில் மழை பொழிந்து விவசாயத்தை பதம் பார்த்து பேரழிவை உண்டாக்குகிறது. அடுத்த ஆண்டு எதிர்பார்த்த மழையில்லாமல் விவசாய நிலங்கள் காய்ந்து வறண்ட பாலைவனம் போல் மாறிவிடுகிறது. பருவமழை சாதாரண அளவில் பெய்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும்.
அதிக மழையும், அதிக வறட்சியும்
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்ததால், பாகமண்டலம் எனப்படும் கேரளா, கர்நாடகாவின் குடகு பகுதிகளில் வழக்கமாக பெய்யும் மழையைவிட அதிக அளவில் பெய்து அனைத்து அனைகளும் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி விளைநிலங்களை பாழடித்தது. ஆனால் மற்றொரு பக்கம் மழையில்லாமல் தண்ணீரில்லாமல் விவசாயமும் பாதிக்கப்பட்டது.
அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்
கடந்த ஆண்டு ஏமாற்றிய வடகிழக்கு பருவழையின் பாதிப்பு இந்த ஆண்டும் தொடர்கிறது. வழக்கமாக ஏப்ரல் மாத இறுதி வாக்கில் எட்டிப்பார்க்கும் தண்ணீர் பிரச்சனை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. அதோடு வெய்யிலின் தாக்கமும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.
கோடை மழை 27% குறைவு
வெய்யிலின் தாக்கம் மண்டையை காயவைக்கும் அளவில் இருக்கும்போது, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கோடை மழை பற்றிய கணிப்பில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவை விட 27 சதவிகிதம் குறைவாகவே பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்
வழக்கமாக மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரையிலான காலத்தில் நாடு முழுவதும் சுமார் 59.6 மில்லிமீட்டர் மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால், வானிலை ஆய்வு மையைத்தின் கணிப்பை வழக்கம் போல பொய்யாக்கிவிட்டு இந்த ஆண்டும் கோடை மழை எதிர்பார்த்த அளவைவிட சுமார் 27 சதவிகிதம் அதாவது 43.3 மில்லிமீட்டர் அளவே பெய்துள்ளது. இதனால் கோடை மழையை எதிர்பார்த்து விவசாயம் செய்திருந்த சிறு, குறு விவசாயிகள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
வடமாநிலங்களில் கோடை மழை
வடமேற்கு மண்டலமான உத்தரப் பிரதேசம், டெல்லி, பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களை உள்ளடக்கிய பகுதிகளில் கோடை மழை அதிக அளவு பற்றாக்குறையாக 38 சதவிகிதம் குறைவாக பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர பகுதிகளில் மழை
தென்னிந்தியப் தீபகற்ப பகுதிகளான 5 மாநிலங்கள் மற்றும் பாண்டிச்சேரி, கோவா, மஹாராஷ்ட்டிராவின் கடலோர பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் மழையின் அளவு 31 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் தகவல்
கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் 23 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது. ஆனால், அதே சமயத்தில் மத்திய பகுதிகளில் வழக்கமாக பெய்யும் மழையின் அளவைவிட 5 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை மழைக்கு 50 பேர் பலி
கோடை மழை காலத்தில் வழக்கமாக ஏற்படும் கோடை இடி மற்றும் மின்னல் தாக்கி மத்தியப் பிரதேசம், மஹாராஷ்ட்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 50க்கும் கூடுதலானவர்கள் உயிரிழந்தனர்.
கோடை மழை எதிர்பார்ப்பு
இந்தியாவின் பல பகுதிகள் பருவமழைக்கு முந்தைய மழையை பெரிதும் எதிர்நோக்கியே உள்ளன. இது அந்த பகுதிகளில் தட்பவெப்பநிலையை குறைக்க உதவுகின்றன. இதனால் பருவமழை தொடங்குவதற்கான முந்தைய மார்ச் முதல் மே மாத இறுதி வரையிலும் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கு உதவும்.
விவசாய தொழிலுக்கு உதவி
பருவ மழைக்கு முந்தைய கோடை மழையானது ஒடிசா போன்ற மாநிலங்களில் தோட்டக்கலைப் பயிர்களின் விளைச்சலுக்கு உதவியாக உள்ளன. உழவு மற்றும் களை பரித்தல் போன்ற வேலைகளுக்கு கோடை மழையே ஏற்றதாக உள்ளது என்று வானிலை ஆய்வு மைய கூடுதல் இயக்குநர் மிருதுன்ஜெய் மொகபத்ரா தெரிவித்தார்.
பயிர் சாகுபடிக்கு உதவி
கோடை மழை என்பது வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் சாகுபடிக்கு பெரிதும் உதவியாக உள்ளது என்று வானிலை ஆய்வு மயை முன்னாள் பொது இயக்குநர் லக்ஷ்மன் சிங் ரத்தோர் தெரிவித்தார்.
விவசாய பணிக்கு பாதிப்பு
நடப்பு ஆண்டில் கோடையில் வழக்கமாக பெய்யும் மழையின் அளவைவிட 27 சதவிகிதம் குறைந்துள்ளதால் கோடை மழையை நம்பிய விவசாயிகள் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர். கோடை மழையை எதிர்பார்த்து விவசாயம் செய்திருந்த சிறு, குறு விவசாயிகள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.