மும்பை : ஒரு வங்கியில் கடன் பெற்ற ஒரு நிறுவனம், அந்த வங்கிக்கு தெரியாமல் வேறொரு வங்கியில் நடப்பு கணக்கு மூலம், நிதி பரிவர்த்தனையில் ஈடுபடுவதை தடுக்க, நடப்பு கணக்கு தொடர்பான விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி மேலும் கடுமையாக்க உள்ளது.
இதுபோன்ற புதிய விதிமுறைகள் தொடர்பான புதிய வரைவு அறிக்கையை, ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ளது. இதில் பல நிறுவனங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நடப்பு கணக்கு துவக்குகின்றன. அவற்றில் ஏதேனும் ஒரு வங்கியில் கடன் பெறுவதற்கு ஒரு கணக்கை தொடங்கி கடன் வாங்கிவிட்டு, விற்பனை உள்ளிட்ட வருவாய் இனங்களுக்கு பிற கணக்குகளையும் பயன்படுத்துகின்றன.
இது போன்ற பல நிறுவனங்கள் கடன் வாங்கிய வங்கிக்கு வட்டியும் கட்டாமல் கடனையும் கட்டாமல் பிற வங்கி நடப்பு கணக்குகளில் வரவு, செலவுகளை கையாள்கின்றன.
இடர்பாட்டு கடன் பிரிவில் உள்ள நிறுவனங்கள்
குறிப்பாக, வங்கிகளின் இடர்பாட்டு கடன் பிரிவில் உள்ள நிறுவனங்கள், இந்த முறையை பின்பற்றுகின்றன. இதனால் இது போன்ற நிறுவனங்களின் அனைத்து வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளையும், கடன் கொடுத்த வங்கி அறியும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது. இதனால் கடன் வாங்கியவரும் கடனை கட்ட முயல்வார். வங்கிகளுக்கும் கடனை பெற்றது போல் இருக்கும். இதோடு அனைத்து பரிவர்த்தனைகளும் ஒழுங்காக நடக்கும் என்றும் வங்கிகள் எதிர்பார்க்கின்றன.
கடன் வழங்கிய வங்கிக்கு வருவாயையும் அனுப்ப வேண்டும்
இந்த நிலையில் இது குறித்து, வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள இந்த வரைவு அறிக்கையில், கடன் வழங்கிய வங்கிகள் கூட்டமைப்பில் உள்ள, வங்கியிடம் தான் நிறுவனம் நடப்பு கணக்கு துவக்க வேண்டும். அந்த நிறுவனம் இதர வங்கிகளில் வைத்துள்ள கணக்குகளில் உள்ள பணம் தினமும் அலுவலக நேரம் முடிவில், முதன்மை வங்கிக்கு மாற்றப்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் வழங்கிய வங்கி வருவாயை அறிய முடியும்
இதனால் ஒரு நிறுவனத்திற்கு பிற வங்கிகள் வாயிலாக கிடைக்கும் வருவாய் விபரங்களை கடன் வழங்கிய வங்கி அறியும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் வட்டி செலுத்த தவறும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கவோ அல்லது வட்டியை கழித்துக் கொள்ளவோ முடியும்.
ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற்ற நிறுவனங்களுக்கு பொருந்தும்
எனினும், இந்த நடைமுறை, 50 கோடி ரூபாய்க்கு மேல் வங்கியில் கடன் பெற்ற நிறுவனங்களுக்குத் தான் பொருந்தும் என்பதால், இதனால் சிறு குறு நிறுவனங்களை பாதிக்காது என்றும் கூறுகின்றனர்.
அனைத்தும் முதன்மை வங்கி மூலமாக நடைபெறும்
ஒரு நிறுவனம், வருவாய் இனங்களை பராமரிக்க, கடன் வழங்கிய வங்கிகள் கூட்டமைப்பைச் சாராத வங்கிகளில், பல கணக்குகளை துவக்கலாம். ஆனால் அந்த வருவாயில் இருந்து செய்யும் செலவுகள், கடன் வழங்கிய வங்கிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த, முதன்மை வங்கி மூலமாகவே நடைபெறும். இதனால், கடன் வழங்கிய வங்கிகள் கூட்டமைப்பின் முதன்மை வங்கியை தவிர்த்து, பிற வங்கிகளில் ஒரு நிறுவனம் வைத்துள்ள நடப்பு கணக்குகள் அனைத்தையும், வருவாய் கணக்காக மாற்ற வேண்டும் அல்லது அந்த கணக்குகளை மூட வேண்டும்.
சிறிய வங்கிகள் பாதிக்கப்படலாம்
அந்த நிறுவனங்களுக்கு, புதிய விதிமுறைகள் தொடர்பான இறுதி அறிக்கை வெளியான மூன்று மாதங்களுக்குள் நோட்டீஸ் அளித்து, கணக்குகளை மாற்ற வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு நிறுவனங்கள் கையாளும் வங்கி நடப்பு கணக்கில், ஒழுக்கத்தை கொண்டு வரவே ரிசர்வ் வங்கி விரும்புகிறது. இதேசமயம் புதிய விதிமுறை அமலுக்கு வந்தால், கடன் வழங்கிய வங்கிகள் கூட்டமைப்பைச் சாராத பல சிறிய நடுத்தர வங்கிகளின் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகள் குறையும் ஆபத்தும் உள்ளது. ஆனால் கடனை வாங்கி விட்டு ஏமாற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறையும். இதனால் வாராக் கடனும் குறையும். நிறுவனங்களும் கடனை அடைக்க வேண்டும் என்று விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள்.


Click it and Unblock the Notifications