டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்னும் ஜிடிபி வளர்ச்சிக்கு முக்கிய காரணியான உள்கட்டமைப்புத் துறையின் வளர்ச்சியானது கடந்த 2018-19ஆம் நிதியாண்டின் மார்ச் மாதத்தில் 4.7 சதவிகிதத்தை எட்டியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2017-18ஆம் நிதியாண்டின் மார்ச் மாதத்தில் உள்கட்டமைப்புத் துறையின் வளர்ச்சியானது 4.5 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்கட்டமைப்பின் அங்கமான நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள், உரங்கள், இரும்பு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகள் அதிக வளர்ச்சி பெற்றுள்ளன என்று அதிகார பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய காரணி
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பது உள்கட்டமைப்புத் துறைதான். தொழில் துறை வளர்ச்சியும் வீழ்ச்சியும் உள்கட்டமைப்பை சார்ந்தே உள்ளது. நாட்டின் வளர்ச்சி அதிகரிக்க வேண்டுமானால் முதலில் கவனம் செலுத்தவேண்டியது உள்கட்டமைப்புதான். பணவீக்க விகிதத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் இதுவும் ஒன்றாகும்.
எட்டு துறைகள்
உள்கட்டமைப்புத் துறை என்பது தனியாக இல்லை. சிமெண்ட் உற்பத்தி, எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்தி, இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் உற்பத்தி, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, நிலக்கரி உற்பத்தி, இரும்பு மற்றும் உருக்கு உற்பத்தி, விவசாயத்திற்கு தேவையான உர உற்பத்தி என முக்கிய துறைகளை உள்ளடக்கி உள்ளது.
மார்ச் மாத வளர்ச்சி 4.7 சதவிகிதம்
மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் பொருளாதார வளர்ச்சி விகிதம், பணவீக்க விகிதம் மற்றும் தொழில் துறை வளர்ச்சி விகிதம் என தனித்தனியாக வளர்ச்சி விகிதத்தை வெளியிடுவது வழக்கம். தற்போது கடந்த மார்ச் மாதத்திற்கான உள்கட்டமைப்பு வளர்ச்சி விகிதத்தை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் மாதத்தில் உள்கட்டமைப்புத் துறை 4.7 சதவிகிதத்தை எட்டி உள்ளதாக அதிகாரபூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல்
கடந்த 2018ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 0.2 சதவிகிதம் மட்டுமே கூடுதலாகும். கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் உள்கட்டமைப்பு வளர்ச்சி விகிதமானது. 4.5 சதவிகிதமாக இருந்தது. தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் சாலைப் பணிகள், உள்கட்டமைப்பு பணிகள் என எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ள முடியாது என்பதால் மார்ச் மாதத்தில் இத்துறையின் வளர்ச்சி சற்று மந்தமாகவே இருந்தது.
நிலக்கரி உற்பத்தி
உள்கட்டமைப்பின் முக்கிய அங்கமான நிலக்கரி உற்பத்தியானது கடந்த மார்ச் மாதத்தில் 9.1 சதவிகிதமாக இருந்தது. ஒட்டு மொத்தமாக 2018-19ஆம் நிதியாண்டில் 7.3 சதவிகிதமாக இருந்தது.
இயற்கை எரிவாயு
இயற்கை எரிவாயு உற்பத்தியானது கடந்த மார்ச் மாதத்தில் 1.4 சவிகிதம் அதிகரித்து காணப்பட்டது. அதே போல் ஒட்டுமொத்தமாக முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 2018-19ஆம் நிதியாண்டில் 0.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் உற்பத்தி மார்ச் மாதத்தில் 6.2 சதவிகிமாக குறைந்துவிட்டது. அதே போல் 2018-19ஆம் நிதியாண்டின் முழுவதுமாக 4.1 சதவிகிதம் சரிந்து விட்டது. இது முந்தைய நிதியாண்டை விடவும் குறைவாகும்.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு
கச்சா எண்ணெய் சுத்திகரிப்ப துறை கடந்த மார்ச் மாதத்தில் 4.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதேபோல் 2018-19ஆம் நிதியாண்டில் 3.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டைக்காட்டிலும் கூடுதலாகும்.
உர உற்பத்தி
உர உற்பத்தித் துறையின் வளர்ச்சியானது கடந்த மார்ச் மாதத்தில் 4.3 சதவிகிதமாக கூடியுள்ளது. ஒட்டுமொத்தமாக 2018-19ஆம் நிதியாண்டின் முடிவில் 0.3 சதவிதிம் அதிகரித்து காணப்பட்டது.
சிமென்ட் உற்பத்தி
உள்கட்டமைப்புத்துறையின் மற்றொரு முக்கிய அங்கமான சிமென்ட் உற்பத்தியானது கடந்த மார்ச் மாதத்தில் 15.7 சதவிகிதத்தை எட்டியுள்ளது. மேலும் 2018-19ஆம் ஆண்டு முழுவதுமாக 13.3 சதவிகிதமாக கூடியுள்ளது.
இரும்பு உற்பத்தி
இரும்பு உற்பத்தியானது கடந்த மார்ச் மாதத்தில் 6.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் 2018-19ஆம் நிதியாண்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியானது 4.7 சதகிவிதமாகவும் உயர்ந்துள்ளது.
மின் உற்பத்தி
மின் உற்பத்தியானது சென்ற மார்ச் மாதத்தில் 1.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2018-19ஆம் ஆண்டில் இது ஒட்டுமொத்தமாக 5.1 சதவிகிமாக அதிகரித்துள்ளது. நாட்டின் தொழில் துறை வளர்ச்சியை (Index of Industrial Production) தீர்மானிக்கும் 145 காரணிகளில் உள்கட்டமைப்பை உள்ளடக்கிய 8 துறைகளின் பங்கானது 41 சதவிகிதமாகும்.