சிவகங்கை: ஆட்டுப்பால் குடிச்சா அறிவு அழிஞ்சு போகுமுன்னு, எரும பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு சொல்லும் வேளையில், கழுதைப்பால் குடிச்சா நோய் குறைஞ்சு போகுமுன்னு கருதப்படுகிறது.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் கழுதைப் பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 50 மில்லி, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அழிந்து வரும் கழுதைகளைக் கொண்டு கடலூர் மாவட்டம் தொழுதூர் பகுதியைச் சேர்ந்த 5 குடும்பத்தினர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, 12 கழுதைகளோடு சிவகங்கை மாவட்ட கிராம பகுதியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் கிராம பகுதிகளுக்கு சென்று 50 ரூபாய்க்கு கழுதைப் பாலை விற்பனை செய்து வருகின்றனர். நோய்தொற்று தடுக்கவும், ஆரோக்கியம் கிடைக்கவும் கழுதைப் பால் உதவும் என்ற நம்பிக்கையில் ஏராளமானோர் கழுதைப் பாலை வாங்கி குடித்து வருகின்றனர்.
வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்
இதுகுறித்து பேசிய கழுதைப் பால் விற்பனையாளர்கள் கூறுகையில், நாங்கள், தமிழகம் முழுவதும் சென்று, கழுதைப் பால் விற்று வருகிறோம். மேலும், கழுதைப் பால் மருத்துவ குணம் கொண்டது. வெறும் வயிற்றில், ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்தால் ஜீரண சக்தி, மஞ்சள் காமாலை ஆஸ்துமா நோய்கள் வராது. சிறிய குழந்தைகள் என்றால், ஒரு சங்கு போதும். பெரியவர்களுக்கு, 50 மில்லி கொடுக்க வேண்டும்.
50 ரூபாய்க்கு விற்பனை
50 மில்லி, 50 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம். நாங்கள், பால் விற்பனைக்காகவே கழுதை வளர்க்கிறோம். கழுதையை கிராமப் பகுதிகளுக்கு கொண்டு சென்று, கலப்படம் இல்லாமல், அங்கேயே கறந்து விற்கிறோம். மேலும், ஒரு பருவத்தில் மட்டும்தான் கழுதையிடம் இருந்து பால் கறக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அமோக வரவேற்பு
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த தொழிலை செய்து வருகிறோம். செல்லும் ஊர்களில் எல்லாம் கழுதை பாலுக்கு அமோக வரவேற்பு உள்ளதோடு, அருந்தி மகிழவும் ஆட்கள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். கழுதைகளை பொதி சுமைக்க வைக்காமல், பசுமாட்டைப் போல், பராமரித்து வருகின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தி
கழுதைப் பால், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, மருத்துவ குணம் கொண்டது என, சித்த மருத்துவ புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாள்பட்ட நோய்களை தீர்க்கும் என்பது நிரூபிக்கப் படவில்லை. குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர, வேறு எந்தப் பாலும் கொடுக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.