அங்கோலா: எந்த வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில் என்பது போல், எண்ணெய் எடுக்கும் நிலங்களாக இருந்த மத்திய ஆப்ரிக்கா நாடான அங்கோலா, பச்சை தங்கத்தை உற்பத்தி செய்யும் செல்வ பூமியாக மாறியுள்ளது.
எண்ணெய் எடுப்பதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய், கடந்த சில ஆண்டுகளாக குறைந்துவிட்டன. இதனால், அங்கோலா நாடு தனது பொருளாதாரத்தைத் மீட்க, இயற்கை வளங்களை பயன்படுத்தி, விவசாயம் பக்கம் கவனத்தை செலுத்தி வருகிறது.
வறட்சிக்கு பெயர் போன ஆப்ரிக்கா நாடுகளில், அங்கோலா தனித்துவம் பெற்று, விவசாயத்தில் கொடிக் கட்டி பறக்கிறது. தங்களின் சொந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் தரமான விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர் விவசாயிகள் .
அங்கோலாவில், வாழைப்பழம் என்பது பச்சைத் தங்கமாக பார்க்கப்படுகிறது. தண்ணீர் பழம், கொய்யாப் பழம், பப்பாளி என பல பழவகைகளை உற்பத்தி செய்து அசத்தி வருகின்றனர். இதனால், பழச்சாறு உற்பத்தி நிறுவனங்கள் ஏராளம் வரத் தொடங்கி உள்ளன.
நாட்டுக் கோழி வளர்ப்பு, முட்டை உற்பத்தியிலும் விவசாயிகள் பெரும் அளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கோலாவில் சூப்பர் மார்க்கெட்டுகள் அதிகரித்துள்ளன. நாட்டின் பொருளாதாரமும் உயர்ந்து வருகிறது.
அயல்நாடுகளில் கையேந்துவதற்கு பதிலாக தங்களது தேவைகளை, தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் விதமாக, சொந்த மண்ணில், வியர்வை சிந்தி உழைக்கும் மக்களின் நம்பிக்கை என்றைக்கும் வீண் போகாது. இயற்கையும் வஞ்சிக்காது என்றே சொல்லலாம்.