Jet Airways நிறுவனத்தின் நிதி நெருக்கடி பற்றி புதிதாக ஒன்றும் சொல்லத் தேவை இல்லை. கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக போராடி இப்போது நிறுவனத்தையே நடத்த முடியாமல் கடையை பூட்டி விட்டு சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு பண நெருக்கடி.
ஒரு பக்கம் கடன் காரர்கள் என்றால், இன்னொரு பக்கம் மாதச் சம்பளத்துக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்கத்தினர். இதில் மாதம் சில ஆயிரம் கமிஷனுக்கு வேலை பார்க்கும் ஆயிரக் கணக்கான ஏழைகளும் அடக்கம்.
சம்பளப் பிரச்னை, விமான எரிபொருளுக்கு கடன் பாக்கி, ஹெச் எஸ் பி சி (HSBC) வங்கியிடம் வாங்கிய 140 மில்லியன் டாலர் கடன் பாக்கி, விமானங்களுக்கான குத்தகைத் தொகை பாக்கி, பயணிகளுக்கான ரீஃபண்ட் தொகை பாக்கி என நொந்து கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது இந்த நிறுவனத்தை ஒருவருக்கு விற்று விட்டு தன் கடன் பிரச்னையில் இருந்து மீண்டு விட முக்கிக் கொண்டிருக்கிறது எஸ்பிஐ. இப்போது அதிலும் ஒரு தடை வந்திருக்கிறது.
ஏலம்
Jet Airways நிறுவனத்தில் முதலீடு செய்ய இருந்த Etihad Airways, TPG Capital and Indigo Partners என அனைவருமே ஒரு முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருக்கிறார்களாம். இப்படி ஒரு நிறுவனத்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது வழக்கமாக Non disclosure Agreement என ஒன்றைக் காட்டி கையெழுத்து வாங்குவார்கள்.
Non Disclosure Agreement
ஒரு நிறுவனம் தொடர்பாக தங்கள் கவனத்துக்கு வரும் முக்கியமான விஷயங்கள், வர்த்தக ரகசியங்கள், சந்தை தொடர்பான தரவுகள் என எதையும் வெளியில் சொல்லக் கூடாது என எழுதி இருப்பார்கள். வேண்டுமானால் கூடுதலாக குறிப்பிட்டு இந்த சில விஷயங்களைப் பற்றி வாயே திறக்கக் கூடாது எனவும் சொல்வார்கள். இந்த பத்திரத்தில் கையெழுத்துபோட்டால் தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
அமைதி காக்கும் 3 நிறுவனங்கள்
Etihad Airways, TPG Capital and Indigo Partners இந்த மூன்று நிறுவனங்களுமே, இது வரை மேலே சொன்ன ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை என்பதை வெளிப்படையாக பல பத்திரிகைகள் பேசத் தொடங்கிய பின்னும் இதுவரை ஜெட் ஏர்வேஸ் தொடர்பாக எந்த ஒரு பதிலையும் சொல்லவில்லை. குறைந்தபட்சம் நாங்கள் இந்த தேதியில் கையெழுத்து போடப் போகிறோம் என்று கூட மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆக இந்த 3 நிறுவனங்களுக்கும் ஜெட் ஏர்வேஸை வாங்கும் எண்ணம் அத்தனை வலுவாக இல்லை என்பது போலவே தெரிகிறது.
நம்பிக்கை இல்லை
இதுவரை எல்லா முயற்சிகளையும் எடுத்துவிட்டோம். வரும் மே 10, 2019-க்குள் ஒரு நிறுவனம் அல்லது ஒரு முதலீட்டாளர் ஜெட் ஏர்வேஸில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் நாங்கள் கொடுத்த கடன் தொகை எதுவுமே திரும்பக் கிடைக்காது போலிருக்கிறது என வெளிப்படையாக ஒரு வங்கி அதிகாரி புலம்பி இருக்கிறாராம்.
ஜேஸன் அன்ஸ்வொர்த்
ஒரு காலத்தில், இந்திய வானங்களின் ராஜாவாக சுற்றித் திரிந்த ஜெட் ஏர்வேஸ் இன்று சீண்டுவார் இல்லாமல், தன்னுடைய விமானங்களைக் கூட இயக்க முடியாமல் ஸ்தம்பித்து நிற்கிறது. குறிப்பாக யாராவது ஒரு 1500 கோடி ரூபாய் கடன் கொடுத்து உதவமாட்டார்களா எனவும் வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்கள். ஆனால் வாங்க எவரும் முன் வரவில்லை என்பது தான் கசப்பான உண்மை. அப்படி வாங்க வந்த நான்கு பேரில் 3 நிறுவனங்கள் பின் வாங்கிவிட்டார்கள். இப்போது ஜேஸன் அன்ஸ்வொர்த் மட்டுமே ஜெட் ஏர்வேஸின் நம்பிக்கை நாயகனாக நம் முன் இருக்கிறார்.