டெல்லி: இந்தியாவின் கார் சந்தையில் 50 சதவிகிதத்துக்கு மேல் ஒரே நிறுவனம் வைத்திருக்கிறது என்றால் அது Maruti Suzuki தான். அப்படிப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளரான Maruti Suzuki நிறுவனத்தின் 2019 ஏப்ரல் மாத விற்பனை, 2018 ஏப்ரல் மாத விற்பனையை விட 17.2% சரிந்திருக்கிறதாம்.
2019 ஏப்ரல் மாதத்தில் 1,43,245 கார்கள் மட்டுமே விற்பனை ஆகி இருக்கின்றனவாம். ஆனால் கடந்த ஏப்ரல் 2018-ல் 1,72,986 கார்கள் விற்பனை ஆகி இருந்தனவாம். Maruti Suzuki நிறுவனத்தின் பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 19.6 சதவிகிதம் சரிந்திருக்கிறதாம். 2019 ஏப்ரலில் Maruti Suzuki நிறுவனத்தின் பயணிகள் கார்களின் விற்பனை 1,31,385 ஆக சரிந்திருக்கிறது. கடந்த 2018 ஏப்ரலில் 1,63,434 ஆக இருந்தது.
ஒரு கதவு அடைத்துக் கொண்டாலும் மறு கதவு திறக்கப் படுவது போல கார்களின் விற்பனை சரிந்திருக்கின்ற போது, Maruti Suzuki நிறுவனத்தின் வணிக பயன்பாட்டு வாகனமான சூப்பர் கேரியின் விற்பனை 50.2 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம். ஏப்ரல் 2018-ல் 1,544 வாகனங்களை விற்றவர்கள் இந்த 2019 ஏப்ரலில் 2,319 வாகனங்களை விற்று இருக்கிறார்கள்.
மினி பிரிவு
Maruti Suzuki நிறுவனத்தின் மினி பிரிவில் 22,766 கார்களை ஏப்ரல் 2019-ல் விற்று இருக்கிறார்கள். 2018-ல் இந்த பிரிவில் விற்ற கார்களின் எண்ணிக்கை 37,794 ஆக இருந்தது. அதே போல காம்பெக்ட் பிரிவில் 72,146 கார்களை விற்று இருக்கிறார்கள். கடந்த ஏப்ரல் 2018-ல் 83,834 ஆக இருந்தது.
நடுத்தர பிரிவு
நடுத்தர பிரிவில் 2,789 கார்களை விற்று இருக்கிறார்கள். ஆனால் கடந்த பிப்ரவரி 2019-ல் இந்த பிரிவில் 5,116 கார்களை விற்று இருக்கிறார்கள். யுடிலிட்டி பிரிவில் 22,035 கார்களை விற்று இருக்கிறார்கள். இது கடந்த ஏப்ரல் 2018-ஐ விட 6 சதவிகித கூடுதல் விற்பனை. அதே போல Maruti Suzuki நிறுவனத்தின் வேன்கள் பிரிவில் 11,649 வேன்களை விற்று இருக்கிறார்கள். கடந்த ஏப்ரல் 2018-ல் 15,886 வேன்கள் விற்று இருந்தார்களாம்.
ஏற்றுமதி
என்ன தான் உள் நாட்டில் விற்பனை குறைந்திருந்தாலும், ஏற்றுமதியும் கொஞ்சம் கை கொடுத்திருக்கிறது. 2019 ஏப்ரலில் 9,177 Maruti Suzuki நிறுவன வாகனங்களை ஏற்றுமதி செய்திருக்கிறார்களாம். கடந்த ஏப்ரல் 2018-ல் 8,008 வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தார்களாம்.
பொருளாதார மந்தநிலை
ஏற்கனவே ஆட்டோமொபைல் துறையில் சரியான விற்பனை இல்லை என்பதே இந்தியப் பொருளாதாரத்தின் மந்த நிலையைக் காட்டுவதாக பல அனலிஸ்டுகளும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அதை மீண்டும் நிரூபிக்கும் விதத்தில், ஏப்ரல் 2019-லில் இத்தனை பெரிய சரிவைச் சந்தித்திருக்கிறது இந்திய கார் சந்தையின் ராஜாவான Maruti Suzuki.
போச்சே
ஒருவருக்கு கிடைக்கும் பணத்தில் முதலில் தன் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். அதன் பின் சில ஆயிரம் ரூபாயில் பூர்த்தியாகும் செல் போன், டிவி, ஃப்ரிட்ஜ், வாசிங் மிஷின், பள்ளிக் கட்டணம், கல்லூரிக் கட்டணம்.... போன்றவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். அதுவும் பூர்த்தி ஆகும் பட்சத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்குள் சரியாகும் பிரச்னைகள், இருசக்கர வாகனங்களை எல்லாம் பூர்த்தி செய்து கொள்வார்கள். அத்தனையும் பூர்த்தி ஆன பின்னும் உபரிப் பணம் இருந்தால் தான் காருக்குச் செல்வார்கள். ஆக கார் விற்பனை தொடர்ந்து சில மாதங்கள் குறைகிறது என்றால், இந்தியாவில் பண புழக்கம் குறைகிறது, அதனால் ஒட்டு மொத்தப் பொருளாதாரமுமே கொஞ்சம் பெரிய அடிவாங்கப் போகிறது என்று பொருள்.
பங்கு விலை
இந்த செய்திகளை எதிர்பார்த்துக் காத்திருந்த இந்திய பங்குச் சந்தைகள் இப்போது Maruti Suzuki மீது பெரிய ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருக்கிறது. கடந்த ஏப்ரல் 16, 2019-ல் Maruti Suzuki நிறுவன பங்குகளின் விலை 7,458 ரூபாயாக வர்த்தகமானது. அன்றில் இருந்து இன்று வரை பங்கு விலை இறக்கம் கண்டு கொண்டே தான் இருக்கிறது. தற்போது 6,658 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.