சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த நிலையத்தில்தான் கேன்சலும் செய்யவேண்டும் என்று ரயில்வே துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த நிலையத்தில்தான் இனிமேல் கேன்சலும் செய்யவேண்டும் என ரயில்வே நிர்வாகம் கெடுபிடி செய்வதாக பயணிகள் குறை கூறுகின்றனர்.
இப்போதெல்லாம் பல ரயில்களில் டிக்கெட்டுகள் கிடைப்பது என்பது லாட்டரியில் பரிசு விழுவது போலாகிவிட்டது. இப்படி இருந்தாலும் ரயிலில் உள்ள சவுகரியம் காரணமாக குடும்பத்துடன் வெளியூர் செல்லும் பயணிகள் ரயில்களையே அதிகம் நாடுகின்றனர். அரக்கோணம் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் சில ரயில்க ரத்து செய்யப்பட்டன.
3 நாட்களுக்குள் ரத்து செய்க
சில ரயில்கள் காட்பாடி, மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்பட்டுள்ளன. இதில் ரத்து செய்யப்பட ரயில்கள் குறித்து பயணிகளுக்கு குறைந்த கால அவகாசத்திலேயே தெரிவிக்கப்பட்டதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். அதோடு முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை மூன்று நாட்களுக்குள் ரத்து செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
வேறு நிலையங்களில் கூடாது
இதனையடுத்து அந்த ரயில்களுக்காக முன்பதிவு செய்த பயணிகள் மாற்று போக்குவரத்து மூலம் தங்களது பயணங்களை மேற்கொண்டுள்ளனர். பின்னர் ஏற்கனவே தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை வேறு நிலையங்களில் கொண்டு சென்று ரத்து செய்ய முயன்றபோது அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் டிக்கெட்டுகள் எந்த ஊரில் எடுக்கப்பட்டதோ அந்தந்த ஊர்களில்தான் டிக்கெட்டுகளை கேன்சலும் செய்ய முடியும் என்று கூறியுள்ளார்கள்.
முறைகேடுகளைத் தடுக்க
டிக்கெட்டுகளை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கவே இந்த முறை பின்பற்றப்படுவதாகவும் ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கவுண்டர்களில் எடுத்த டிக்கெட்டுகளை குறிப்பிட்ட ரயில்கள் ரத்தாகும் நிலையில் அந்த டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி இணையதளத்திலும் கேன்சல் செய்யும் வசதி இல்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாயினர்.
கவுண்டர்கள் திறப்பு
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அரக்கோணத்தில் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்பட ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்காக 5 நாட்கள் வரை சென்னையில் கவுண்டர்கள் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் வெளியூர் என்று குறிப்பிடும் அந்த பயணிகள் வெளிமாநிலத்தில் சென்று டிக்கெட்டுகளை கேன்சல் செய்ய முயற்சித்து இருப்பார்கள். அப்படி செய்தால் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் வசதி கிடையாது என்பதையே ரயில்வே ஊழியர்கள் கூறியிருப்பார்கள் என்று நம்மிடம் தெரிவித்தார்.
இருந்தாலும் இப்படி ரயில்கள் ரத்து செய்யும் சூழலில் குறைந்தது 10 நாட்களாவது அவகாசம் அளிக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கை.


Click it and Unblock the Notifications