டெல்லி: 2018-19ஆம் நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்ததால் ரிட்டன் தாக்கல் செய்வது 1 சதவிகிதம் குறைந்துள்ளதாக கோட்டக் செக்யூரிட்டீஸ் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிக்கும் வேளையில் வரி செலுத்துவோரின் ஆர்வம் குறைந்ததாலேயே வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதை தவிர்த்து வருகின்றனர்.
சமீபகாலத்தில் நாட்டின் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாகவும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வது சரிவடைந்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
2018ஆம் ஆண்டில் வரி செலுத்துவோர் 6.75 கோடி
கடந்த 2016ஆம் ஆண்டு இறுதியில் செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின்னர் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கேற்ப கடந்த 2018ஆம் நிதியாண்டின் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 6.75 கோடியாக அதிகரித்தது.
2019ஆம் ஆண்டில் 6.68 கோடிதான்
கடந்த 2019ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் மத்திய அரசின் எதிர்பார்ப்பையும் மீறி அதிகமாக வசூலானது. இதன் காரணமாக 2019ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கலும் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பை மீற 2019ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் 6.68 கோடி ரிட்டன் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 1 சதவிகிதம் குறைவாகும்.
ஆய்வறிக்கை அதிர்ச்சி
செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின்னர் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு நம்பிக்கொண்டிருக்கும் போது, ரிட்டன் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என்று கோட்டக் செக்யூரிட்டீஸ் ஆய்வரிக்கை தெரிவிக்கிறது.
சீர்திருத்த நடவடிக்கை திருப்தியில்லை
வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை குறையக் காரணம் செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின்னர் எடுக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளும் மந்த நிலைமையும் மக்களுக்கு திருப்தி அளிக்காததால் வருமான வரி செலுத்துவதை தவிர்த்து வருவதாக கோட்டக் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பொருளாதார வளர்ச்சியில் சிக்கல்
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைக்கா மேற்கொள்ளப்பட்ட செல்லாத நோட்டு அறிவிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிமுறை அமல் போன்றவற்றை தீவிரமாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வரி வசூலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அரசு எதிர்பார்க்கும் நடுத்தர கால பொருளாதார வளர்ச்சியில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் கோட்டக் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோரில் குறிப்பாக அதிக வருவாய் பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.