பெங்களூரு பெங்களூரில் பச்சை மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் சமைக்கும் பெரும்பாலான உணவுகளில் பச்சை மிளகாய், பீன்ஸ், தக்காளி சேர்க்கப்படுவது வழக்கம். குறிப்பாக கர்நாடக பிரசித்தமான உணவுகளான புலாவ், பிஸிபெலெபாத், சாம்பார், ப்ளயா உள்ளிட்ட உணவுகளை பீன்ஸ் இல்லாமல் பார்க்க முடியாது.
அப்படி ஒதுக்க முடியாத பீன்ஸ் விலை கிலோ 100 ரூபாயை தாண்டியுள்ளது. மேலும் தக்காளி மற்றும் பச்சை மிளகாயின் விலையும் தீயாய் உயர்ந்துள்ளது.
தக்காளி பச்சைமிளகாய்
ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதேபோல் பச்சை மிளகாய் விலையும் தீயாய் உயர்ந்து கிலோ ரூபாயை எட்டியுள்ளது.
இல்லத்தரசிகள் கவலை
விலை உயர்வு தொடர்பாக பேசிய ரேகா என்ற இல்லத்தரசி தக்காளி, மிளகாய் மற்றும் பீன்ஸ் ஆகியவை இன்றியமையாத பொருட்களாக இருக்கின்றன, இது இல்லாமல் நாம் எதையும் தயாரிக்க முடியாது. ஆனால் கடந்த சில நாட்களாக இதன் விலைகள் உயர்ந்துவிட்டன என சோகமாக கூறியுள்ளார்.
தண்ணீர் பற்றாக்குறை
தக்காளி விலை உயர்வுக்கு தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கடுமையான வெயிலே காரணம் வணிகர்கள் தெரிவித்துள்ளனர். கோலார் பிராந்தியத்தில் அதிகளவு தக்காளி பயிரிடப்பட்டுள்ள நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பயிர்கள் காய்ந்து போயிருப்பதாகவும் இதனால் மகசூல் பாதிக்கப்பட்டதே விலை உயர்வுக்கு காரணம் என்றும் தக்காளி கொள்முதல் செய்யும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
பீன்ஸ் உற்பத்தி குறைவு
நகருக்கு பீன்ஸ் அனேகல், டோடாபல்லாபூர், தேவனஹல்லி ஆகிய பகுதிகளில் இருந்து சப்ளை செய்யப்படும் நிலையில் அங்கும் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் உற்பத்தி பாதியாக குறைந்திருப்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
கணிசமாக உயர்வு
உருளை கிழங்கு மற்றும் வெங்காயத்தை தவிர மற்ற அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு காயும் கிலோ 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.