டெல்லி: மத்திய அரசின் தொலைத்தொடர்பு டெலிகாம் நிறுவனமான BSNL-ன் வாடிக்கையாளர்கள் சந்தை, 10.63 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறதாம். இதற்கு BSNL நிறுவனம் மேற்கொண்ட விரிவாக்கப் பணிகள் தான் காரணம் என BSNL நிறுவனமே பெருமையாகச் சொல்லி இருக்கிறார்கள்.
BSNL நிறுவனம் இந்தியாவின் 22 டெலிகாம் சர்க்கில்களில் 20 சர்க்கிளில் தன் சேவையை வழங்கி வருகிறது. கடந்த மார்ச் 2018-ல் BSNL நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சந்தை 10.22 சதவிகிதமாக இருந்தததாம். இப்போது 10.63 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறதாம்.
கடந்த பிப்ரவரி 2019-ல் BSNL நிறுவனத்தின் கூடுதலாக 9 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்த 9 லட்சம் புது வாடிக்கையாளர்கள் BSNL-ல் இணைந்ததை, இந்திய டெலிகாம் சந்தையை நெறிமுறைப்படுத்தும் டிராய் அமைப்பின் அறிக்கைகளும் உறுதிப்படுத்துகின்றன.
அதோடு கடந்த ஒரு நிதி ஆண்டில் (2018 - 19)-ல் மட்டும் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்ககள் BSNL நிறுவனத்தின் சேவைக்கு மாறி இருக்கிறார்களாம். அதையும் BSNL நிறுவனத்தின் அதிகாரிகள் அடிக்கோடு போட்டுக் காட்டுகிறார்கள்.
கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் BSNL நிறுவனம் 54,000 புதிய டவர்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததிருக்கிறார்களாம். ஏப்ரல் 2019 கணக்குப் படி BSNL நிறுவனத்துக்கு இந்தியாவில் 5,340 நான்காம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் (4G) டவர்கள் இருப்பதாகவும் பெருமையாகச் சொல்லி இருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமே BSNL நிறுவனம் நான்காம் தலைமுறை டவர்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததே 2018 - 19 நிதி ஆண்டில் தான்.
இத்தனை நாள் இந்திய டெலிகாம் துறைக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை, என்பது போல சும்மா இருந்த நிறுவனம், இப்போது மற்ற டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோவைப் போல இலவச ஆன்லைன் ஸ்ட்ரீமிங், கவர்ச்சிகரமான டேட்டா திட்டங்கள் என அள்ளித் தெளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். எது எப்படியோ இப்போதாவது BSNL தன்னை ஒரு இந்திய டெலிகாம் நிறுவனமாக உணர்ந்து, போட்டியில் இறங்கி இருக்கிறதே, அதை நினைக்கும் போதே கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது.