மும்பை: மார்ச் 2019 நிலவரப்படி, 28.85 லட்சம் கோடி ரூபாய் தொழிற்துறையினருக்கு கடனாகக் கொடுத்திருக்கிறார்கள். இந்த தொழிற்துறையிலும் மூன்று பிரிவு இருக்கிறது. 1. சிறு குறு தொழில் 2. நடுத்தர தொழில் முனைவோர்கள். 3. பெரிய தொழிற்கூடங்கள் மற்றும் ஆலைகள்
அதில் நம்பர் 1 சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள், குடிசைத் தொழில் செய்பவர்கள், சிறிய அளவில் வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்பவர்களுக்கு 3,75,500 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கிறார்கள்.
நம்பர் 2 ஓரளவுக்கு தொழில் செய்து வளர்ந்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு 1,06,400 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கிறார்கள். நம்பர் 3 பெரு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் 24,03,900 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுக்கிறார்கள்.
19 பிரிவுகள்
மேலே தொழிற்துறையினருக்கு கொடுத்த 28.85 கோடி ரூபாயை 3 பெரும் பிரிவாக பிரித்தார்கள் இல்லையா..? இப்போது அதே 19 தொழிற் துறைகளாக மத்திய ரிசர்வ் வங்கி, துறை வாரியாகவும் பிரித்துக் கொடுத்திருக்கிறது. இனி ஒவ்வொரு துறையினரும் எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறார்கள் என விரிவாகப் பார்ப்போம்.
பெரிய துறைகள்
இருப்பதிலேயே அதிகமாக உள் கட்டமைப்புத் துறைக்கு தான் அதிக கடன் கொடுத்திருக்கிறார்கள். உள்கட்டமைப்புத் துறையில் தான் மின்சாரம், தொலைத் தொடர்பு, சாலைகள் போன்ற அனைத்து கட்டுமானங்களும் வருகின்றன. இந்த துறைக்கு மட்டும் சுமார் 10,55,900 கோடி ரூபாயைக் கடனாக வாங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே இந்தியாவின் மின்சாரத் துறை சார்ந்த நிறுவனங்கள் வாங்கிய கடன்களை ஒழுங்காகச் செலுத்துவதில்லை என வழக்கே நடந்தது.
இரும்பு மற்றும் உலோகம்
உள்கட்டமைப்புத் துறைக்குப் பிறகு இரும்பு, ஸ்டீல், பித்தளை, காப்பர் போன்ற உலோகங்களைச் சார்ந்த தொழிற்துறையினருக்கு, நம் இந்திய வங்கிகள் சுமார் 3,71,600 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்களாம். இரும்பு மற்றும் ஸ்டீல் போன்ற அடிப்படை உலோகங்களுக்கு கடன் கொடுத்தது போக, இந்திய டெக்ஸ்டைல் துறையினருக்கு அதிகம் கடன் கொடுத்திருக்கிறார்களாம். சுமார் 2,03,500 கோடி ரூபாயை இந்த துறையினர் கடன் வாங்கித் தள்ளி இருக்கிறார்கள்.
ரசாயனம், பொறியியல், உணவு
முதல் மூன்று இடங்கள் முறையே உள் கட்டமைப்பு, உலோகம், டெக்ஸ்டைலுக்குக் கொடுத்த பின், நான்காவது இடத்தில் தனிக்காட்டு ராஜாவாக ரசாயனத் துறையினர் கடன் வாங்கித் தள்ளி இருக்கிறார்கள். இந்த ஒரு துறையினருக்கு மட்டும் 1,91,500 கோடி ரூபாயைக் கடனாக வாங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்து பொறியியல் துறையினர் 1,68,600 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்கள். ஆறாவது இடத்தில் உணவுப் பதப்படுத்துதல் துறை 1,57,100 கோடி ரூபாய் கடன் வாங்கி பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
கடன் வளர்ச்சி
ஆனால் முந்தைய மார்ச் 2018-ம் ஆண்டில் வாங்கிய கடன் அளவோடு மார்ச் 2019-ஐ ஒப்பிட்டு கடன் வளர்ச்சி விகிதத்தில் கணக்கிட்டாலும் உள் கட்டமைப்புத் துறை தான் மார்ச் 2018-ல் கடன் வாங்கியதை விட 18.5% கூடுதலாக கடன் வாங்கி முதலிடத்தில் இருக்கிறது. 17.5 சதவிகிதம் கூடுதல் கடன் வாங்கி ரசாயனத் துறை இரண்டாமிடத்திலும், மார்ச் 2018-ஐ விட 17 சதவிகிதம் கூடுதல் கடன் வாங்கி, மார்ச் 2019-ல் எதிர்பாராத விதமாக கண்ணாடித் துறை மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள்.