டெல்லி : முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வெளிநாட்டை சேர்ந்த தனியார் விமான நிறுவனங்களுக்கு இடைத்தரகராக பணிபுரிந்து மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய ஊழலில் தீபக் தல்வார் கைது செய்யப்பட்டிருப்பதும், தற்போது ஜாமீன் மறுக்கப்பட்டிருப்பதும் அனைவரும் அறிந்த விஷயமாகவே இருந்தாலும் அப்படி அவர் என்னதான் செய்தார். இன்னும் கீழே படியுங்கள் புரியும்.
கடந்த 2008 - 2009-ல் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சாதகமான போக்குவரத்து உரிமையைப் பெறுவதற்கு பதிலாக ரூ.272 கோடி ரூபாயை தீபக் தல்வார் பெற்றுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த ஊழலுக்காக கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தீபக் தல்வார் மீது ஊழல் புகாரில் ஈடுபட்ட வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில், முன்னாள் உள்நாட்டு விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல் தீபக் ஒரு அன்பார்ந்த நண்பர் என்று தெரிவித்திருப்பது சர்ச்சைக் கிளப்பியுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடைத்தரகர்
இந்த நிலையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வெளிநாட்டை சேர்ந்த தனியார் விமான நிறுவனங்களுக்கு இடைத்தரகராக பணிபுரிந்து மத்திய அரசின் ஏர் இந்தியாவுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தியது, மேலும் ஆம்புலன்ஸ் வாங்குவதற்காக அனுப்பப்பட்ட 90.72 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியை மோசடி செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தீபக் தல்வார் மீது அமலாக்கத்துறை சிபிஐ மற்றும் வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்தது.
தீபக் தல்வார் கைது
இந்த வழக்குகள் தொடர்பாக தீபக் தல்வார் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் வைத்து விசாரிக்க டில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தீபக் தல்வாரின் மனைவி தீபா தல்வாரிடமும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறதாம்.
ஆதித்திய தல்வாருக்கு சம்மன்
இந்த நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் தீபக் தல்வாரின் மகன் ஆதித்தியா தல்வாரை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாம். ஆனால் இதுவரை ஆதித்தியா தல்வார் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதே உண்மை. இதையடுத்து ஆதித்தியா தல்வாருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் பிணையம் இல்லா பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
தீபக் ஜாமீன் தள்ளுபடி
இந்த நிலையில் தீபக் தல்வார் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை பரிசீலித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 29ம் தேதி அன்று தீபக் தல்வாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.