டெல்லி: வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவைகளுக்காக வங்கிகள் பிடித்தம் செய்யும் சேவைக் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், ஏன், எதற்கு என்பதற்கான காரணத்தைக் கூடி வங்கிகள் தங்களுக்கு தெரிவிக்க மறுத்து அடாவடி செய்வதாக ஆர்பிஐ நடத்திய ஆய்வில் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வெளிப்படைத் தன்மை இல்லாமல் நடந்துகொள்கின்றன என்றும் கட்டணம் என்ற பெயரில் அநியாய வசூல் செய்கின்றன என்றும் குமுறியுள்ளனர். சேவைக் கட்டணம் பிடித்தம் செய்த காரணத்தை அறிய வங்கிகளை தொடர்பு கொண்டால் அதற்கும் கூட சேவைக் கட்டணம் பிடித்தம் செய்வதாகவும் வாடிக்கையாளர்கள் ஆய்வில் கவலைப்பட்டுள்ளனர்.
வங்கிகள் வாடிக்கையார்களிடம் வசூலிக்கும் சேவைக்கட்டணம் குறித்து புகார்கள் மத்திய ரிசர்வ் வங்கிக்கு தொடர்ந்து வந்தது. இதனையடுத்து, மும்பையில் பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்களிடம் ரிசர்வ் வங்கி மாதிரி ஆய்வு நடத்தியது. ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான வாடிக்கையாளர்கள், அனைத்து வங்கிகளும் பல்வேறு சேவைகளுக்காக அதிகமாக சேவைக்கட்டணம் வசூலிப்பதாக அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
வங்கிகளில் பொன் மொழி
பெரும்பாலான வங்கிகளில் நீங்கள் நுழைந்த உடன் உங்கள் கண்ணுக்கு தென்படுவது மஹாத்மா காந்தியடிகளின் பொன்மொழிகள் தான். அதில்,
"வாடிக்கையாளர் என்பவர் நமது வளாகத்திற்கு வந்துள்ள முக்கிய வருகையாளர், அவர் நம்மை சார்ந்து இல்லை, நாம் தான் அவரைச் சார்ந்து இருக்கிறோம், அவர் நமது பணிக்கு இடையூறாக இல்லை, நமது பணியின் குறிக்கோளே அவர்தான், அவர் நமக்கு வெளியாள் கிடையாது, மாறாக அவர் நமது வணிகத்தின் ஒரு பகுதியே, நாம் அவருக்கு சேவை செய்வதன் மூலம் சலுகை எதுவும் செய்வதில்லை, அவருக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு தருவதன் மூலம் அவர் தான் நமக்கு சலுகை செய்கிறார்" என்று எழுதப்பட்டிருக்கும்.
வாடிக்கையாளர்களுக்கு மதிப்பில்லை
அனைத்து வங்கிகளிலும் பொன்மொழிகள் கண்டிப்பாக இருந்தாலும், பெரும்பாலான வங்கிகள் அதை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அதுவும் சில பொதுத் துறை வங்கிகளில் என்றால் கேட்கவே வேண்டாம், வாடிக்கையாளர்கள் வங்கிகளில் நுழைந்தவுடன் ஏதோ வேற்று கிரக வாசிகள் உள்ளே நுழைந்ததைப்போல் விநோதமாக பார்ப்பார்கள்.
பணம் சேமிப்பு
நம்முடைய பணம் வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்ற விசயமே அவர்களுக்கு மறந்துவிடும் போல். அதுவும் பாமர மக்கள் வங்கிகளுக்கு சென்றால் அவர்களை ஏறெடுத்தும் பார்க்க விரும்புவதில்லை. அவர்கள் தங்களின் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்காக வங்கி ஊழியர்களை அனுகினால் சட்டை செய்வதில்லை. ஆனால் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து அதற்காக சேவைக்கட்டணம் மட்டும் பிடித்தம் செய்து கொள்வதுண்டு.
சேவைக்கட்டணம் வசூல்
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ளும் அனுகுமுறை பற்றி வேடிக்கையாகச் சொல்வதுண்டு. மழைக்காக வங்கியின் அருகில் ஒதுங்கி நின்றால் அதுக்கு கூட சேவைக்கட்டணமும், அதற்கு ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து பிடித்துக்கொள்கிறார்கள் என்பது தான். வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இப்படித்தான் நடந்துகொள்கின்றன.
ரிசர்வ் வங்கி ஆய்வு
வங்கிகள் வாடிக்கையார்களிடம் வசூலிக்கும் சேவைக்கட்டணம் குறித்து புகார்கள் மத்திய ரிசர்வ் வங்கிக்கு தொடர்ந்து வந்தது. இதனையடுத்து, மும்பையில் பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்களிடம் ரிசர்வ் வங்கி மாதிரி ஆய்வு நடத்தியது. ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான வாடிக்கையாளர்கள், அனைத்து வங்கிகளும் பல்வேறு சேவைகளுக்காக அதிகமாக சேவைக்கட்டணம் வசூலிப்பதாக அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
சேவைக்கட்டணம் அதிகம்
வாடிக்கையாளர்கள் தங்களின் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதது, உள்ளுர் மற்றும் வெளியூர்களில் இருக்கும் வங்கி கிளைகளின் மூலம் பணத்தை டெபாசிட் செய்வது, கையெழுத்து சரிபார்ப்பு, காசோலை திரும்புவது என அனைத்துக்கும் வங்கிகள் வசூலிக்கும் சேவைக்கட்டணம் அதிகம் என்று சுமார் 25 சதவிகிதம் பேர் தெரிவித்து உள்ளனர்.
கட்டணப்பிடித்தம் எதற்கு
தங்களுடைய கணக்கில் இருந்து எதற்காக கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது என்பதைக் கூட எங்களுக்கு தெரிவிப்பதில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளை அணுகினால் தான் விபரம் தெரிகிறது என்று சுமார் 72 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.
வெளிப்படைத்தன்மை இல்லை
வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் சேவைக் கட்டணம் குறித்த விபரங்களில் தெரிவிப்பதில் வங்கிகளிடம் வெளிப்படைத் தன்மை கிடையாது. அதே போல் வங்கிக் கணக்கு தொடங்கும் போது, எந்தெந்த சேவைகளுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்று விபரங்களை வங்கிகள் தெரிவிப்பதில்லை என்று சமார் 30 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். அதேபோல், சில சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தினாலும் கூட, அது குறித்த விபரத்தையும் வங்கிகள் தெரியப்படுத்துவதில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
பயிற்சி தேவை
வாடிக்கையாளர்களின் குறைகளுக்கு வங்கிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும். வங்கி அலுவலர்கள் குறிப்பாக கிளைகளில் வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பில் உள்ள அலுவலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி
எஸ்பிஐ வங்கிக் கணக்கில், மாதாந்திர குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காத, நகர்ப்புற வாடிக்கையாளர்களிடம் அதிகபட்சமாக ரூ.50 வசூலித்து வந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததையடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அபராதம் 15 ரூபாயாக குறைக்கப்பட்டது. இதுவே புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் முறையே, 12 மற்றும் 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ. 6ஆயிரம் கோடி அபராதம்
கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகள், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.6,000 கோடி அபராதம் வசூலித்துள்ளன. இதில் ஏடிஎம் பயன்பாடு போன்றவற்றுக்கான கட்டணம் எதுவும் சேர்க்கப்படவில்லை.
வங்கிக் குறை தீர்ப்பாயத்தில் புகார்
வங்கி செயல்பாடுகளில் காணப்படும் குறைகள் குறித்து வங்கிக் குறை தீர்ப்பாயத்தில் வாடிக்கையாளர்கள் முறையிடலாம். இந்த வகையில் மதிப்பீட்டு நிதியாண்டில் குவிந்த புகார்களில் சுமார் 22.1 சதவிகிதம் வங்கிகளிடம் வெளிப்படையான அணுகு முறை இல்லை என்பது தான். விதிமுறைகளை சரிவர பின்பற்றுவதில்லை உறுதியளித்தபடி நடந்து கொள்வது இல்லை என சுமார் 31.3 சதவிகித புகார்கள் வந்துள்ளன.