டெல்லி: நடப்பு 2019-20ஆம் நிதியாண்டின் முதல் மாதத்திலேயே நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் 7.6 சதவிகிதமாக அதிகரித்துவிட்டதாக மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் இறுதிமாதமான மார்ச் மாதத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 6.71 சதவிகிதமாக இருந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் இது நிச்சயமாக குறைந்திருக்கும் என்று அனைவருமே எதிர்பார்த்திருந்தனர்.
பிரதமர் மோடியும் நடப்பு நிதியாண்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்த நிலையில் நிதியாண்டின் தொடக்கமே சறுக்கலாக உள்ளது பாஜக வுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பாஜகவுக்கு பின்னடைவு
கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து மார்ச் மாதம் வரையிலுள்ள காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 6.71 சதவிகிதமே அதிகபட்சமாக இருந்த வேளையில் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 7.6 சதவிகிதத்தை எட்டியுள்ளதாக மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளிவிவரத்தை வெளியிட்டு ஆளும் பாஜகவுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.
பொருளாதார மந்த நிலைதான்
கடந்த மார்ச் மாதத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து காணப்பட்டாலும், ஏப்ரலில் நிச்சயம் குறைந்திருக்கும் என்று அனைவரும் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக அதிகரித்திருப்பது வேலை வாய்ப்பு மந்த நிலையில் உள்ளதையே காட்டுகிறது என்று பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைவர் மகேஷ் வியாஸ் கூறினார்.
தேர்தல் பிரச்சாரம் தீவிரம்
தற்போது லோக்சபா தேர்தல் பரபரப்பில் அனைவரும் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்தச் சூழ்நிலையில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக கடந்த புதன் கிழமையன்று, மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளிவிவரத்தை வெளியிட்டு பாஜகவுக்கு பீதியைக் கிளப்பி உள்ளது.
எதிர்கட்சிகளுக்கு கொண்டாட்டம்
ஏப்ரல் மாதத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டதை சுட்டிக்காட்டி, எதிர்கட்சிகள் அனைத்தும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஆளும் பாஜகவை உலுக்க ஆரம்பித்துவிட்டனர். இது பாஜகவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாக கருதப்படுகிறது.
மே 19ஆம் தேதி
பணவீக்கம், விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் ஏறும் பெட்ரோல் டீசல் விலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் என அனைத்து பிரச்சனைகளையும் பட்டியலிட்டு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. தற்போது நிலவிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் எதிர் வினை வரும் 19ஆம் தேதியன்று நடைபெறும் வாக்குப்பதிவின் போது தெரியவரும் என்று எதிர்கட்சிகள் கூறிவருகின்றனர்.
உற்பத்தியில் சுனக்கம்
ஏப்ரல் மாதத்தில் தொழிற்சாலைகளின் உற்பத்தி சற்று வேகமெடுத்த நிலையில், புதிய ஆர்டர்களும் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் உற்பத்தியில் சுனக்கத்தை ஏற்படுத்தி விட்டதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதிய தொழில் கொள்கை
வாக்குப் பதிவு முடிந்து மே மாத இறுதிக்குள் புதிய அரசு பதவியேற்றவுடன் புதிய தொழில் கொள்கையை ஏற்படுத்தி நாட்டின் தொழில் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அதன் பின்னர் வேலையில்லாத் திண்டாட்டம் நிச்சயம் குறையும் என்று அனைத்து தொழில் துறையினரும் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.
புள்ளிவிவரம் நிறுத்திவைப்பு
சமீபத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்தது. புள்ளிவிவரப் பட்டியலில் குளறுபடி உள்ளது என்றும் அதை சரிபார்க்கவேண்டும் என்று தட்டிக் கழித்தது. பொதுவாக வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய புள்ளி விவரத்தை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மத்திய அரசு வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
45 ஆண்டுகளில் இல்லாத சரிவு
கடந்த டிசம்பர் மாதத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய தகவல் நாளிதழில் வெளியானது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே மத்திய அரசு அதை வெளியிடாமல் தடுத்துவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய புள்ளிவிவரம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு மறுத்தது.
வேலையில்லாவர்கள் 1.10 கோடி பேர்
மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் சுமார் 1.10 கோடி பேர் வேலையில்லாமல் தவித்து வருவதாகவும், 2016ஆம் ஆண்டு இறுதியில் கொண்டுவரப்பட்ட செல்லாத நோட்டு அறிவிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ஜூலையில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்க முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரிமுறை
இதை மறுத்த மத்திய அரசு லோக்சபாவில் தாக்கல் செய்த அறிக்கையில் செல்லாத நோட்டு அறிவிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்ட பின்பு தான் வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்திருப்பதாகவும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.