டெல்லி : ஃபெடரல் வங்கி கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டு முடிவுகளை கடந்த சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வங்கியின் நிகரலாபம் 381.51 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 144.99 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவே கடந்த 2018 - 2019-ம் நிதியாண்டில், இந்த வங்கியின் நிகரலாபம் 1,243.89 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த 2017 - 2018ல் 878.85 கோடி ரூபாயாக மட்டுமே இருந்துள்ளது கவனிக்கதக்கது. ஆக சுமார் 41.5 சதவிகிதம் இந்த வங்கியின் ஆண்டு நிகரலாபம் அதிகரித்துள்ளது.
இந்த தனியார் வங்கியின் கடந்த நிதியாண்டின் செயல்பாட்டு லாபம் 20 சதவிகிதம் அதிகரித்து 2,763.10 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே காலாண்டு விகிதத்தில் இதன் லாபம் 28.23 சதவிகிதம் அதிகரித்து 754.75 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வருவாய் அதிகரிப்பு
மேலும் இந்த வங்கியின் கடந்த மார்ச் 2019-வுடன் முடிவடைந்த காலாண்டின் மொத்த வருவாய் 3,444 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 2,862 கோடி ரூபாயாக இருந்துள்ளது கவனிக்கதக்கது.
வாராக்கடன் குறைந்துள்ளது.
இதுவே கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வாராக்கடன் 177.76 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது 2017 - 2018-ம் நிதியாண்டில் 371.53 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது. நடப்பு நிதியாண்டில் லாப அதிகரிப்புக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமே என்கிறதாம் இந்த வங்கி.
வீட்டுக்கடன் அதிகம்
மேலும் இந்த காலாண்டு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அறிக்கை என்னவெனில் வாகன கடன், 62.04 சதவிகிதம் அதிகரித்தும், தனிநபர் கடன் மற்றும் வீட்டுக் கடன் 143.08 சதவிகிதமும், 32.16 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாம்.
வட்டி வருவாய் அதிகரிப்பு
கடந்த ஜனவரி - மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் வட்டி வருவாய் 2,413 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 1,951 கோடி ரூபாயாகவும் இருந்தது.
மொத்த வணிகம் 20% வளர்ச்சி
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த நிறுவனத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் படி, வங்கியின் மொத்த வணிகம் 20.28 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாம். இது கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டில் 2,46,783.61 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் 2,05,165 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது கவனிக்கதக்கது.
டெபாசிட் அதிகரிப்பு
கடந்த மார்ச் 31 2019- வுடன் வங்கியின் மொத்த டெபாசிட் இந்த காலாண்டில் மட்டும் 20.50 சதவிகிதம் வளர்ச்சி கண்டு 1,34,954.34 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இதுவே கடந்த மார்ச் 2018வுடன் முடிவடைந்த காலாண்டில் 1,11,992.49 கோடி ரூபாயாக டெபாசிட் பெற்றிருந்தது கவனிக்கதக்க விஷயம்.
டிவிடெண்ட் ரூ1.40 அறிவிப்பு
இதையடுத்து இந்த வங்கியின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் டிவிடெண்ட் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். கடந்த மார்ச்-2019-வுடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான டிவிடெண்ட் 1.40 ரூபாயாகவும், இதுவே இதன் முகமதிப்பு 2 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு பின்னர் வழங்கப்படும் என்றும் இந்த வங்கி அறிவித்துள்ளது.
வலுவான வளர்ச்சி
இந்த வளர்ச்சி பற்றி, இந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஷியாம் ஸ்ரீநிவாசன் கூறியதாவது, வங்கி மீண்டும் ஒரு வலுவான செயல்பாட்டு செயல்திறனை வழங்கியுள்ளது, கடன் மற்றும் பொறுப்புகள் இரண்டிலும் வலுவான வளர்ச்சி வேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ஆக மொத்தம் இது ஒரு ஊக்குவிக்கும் எண்களின் தொகுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.