டெல்லி : பங்கு மற்றும் கடன் பத்திரங்கள் மூலம் 3500 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் திட்டமிட்டுள்ளதாம்.
ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒர் அங்கமான ஆதித்யா பிர்லா பிர்லா கேப்பிட்டல் நிறுவனம், காப்பீடு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், இதோடு நிதித் சேவையும் வழங்கி வருகிறது.
குறிப்பாக இந்த நிதிச் சேவையில் வீட்டுவசதி மற்றும் தனிநபர் கடன் வழங்குதல் உள்பட பல சேவைகளையும் வழங்கி வருகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் நிர்வாக குழுவும் இந்த திரட்டலுக்கு தேவையான ஒப்புதலை அளித்துள்ளது.
பங்கு & கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டல்
இந்த நிதி பங்கு மற்றும் பங்கு சார்ந்த உபகரணங்கள், கடன் மற்றும் கடன் சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்டவை வாயிலாக நிதி திரட்டப்படுகிறது. பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள் என்பது கடன் சார்ந்த ஆவணங்கள் ஆகும். இந்த குறிப்பிட்ட ஆவணங்களை பங்குகளாக மாற்ற முடியாது. மேலும் பொதுவாகவே இந்த கடன் பத்திரங்களுக்கு வட்டி வருவாய் அதிகம் கிடைக்கும் என்பது கவனிக்கதக்கது.
எந்த பிரச்சனையும் இல்லை
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், பங்குகளைப் போல் இதில் எந்த இடர்பாடுகளும் இல்லை என்பதால் முதலீட்டாளர்களை எளிதில் ஈர்க்க முடிகிறது. ஏற்கனவே நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பங்கு சார்ந்த வெளியீட்டு கடன் பத்திரங்களுக்கு பங்குதாரர்களின் அனுமதி பெற நிர்வாக குழு முடிவெடுத்துள்ளதாக மும்பை பங்கு சந்தையிடம் ஆதித்யா பிர்லா நிறுவனம் அறிவித்துள்ளது.
தெளிவான தகவல் ஏதும் இல்லை
எனினும் ஏன் இந்த நிதி திரட்டல், எதற்காக செய்யப்படுகிறது என்பது குறித்து எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. எனினும் கடந்த சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட காலாண்டு முடிவுகளும் சாதகமான ஒன்றாகத் தான் இருக்கின்றன.
நிகரலாபம் 52% அதிகரிப்பு
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் நிறுவனத்தின் வளர்ச்சி 52 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கடந்த காலாண்டில் மட்டும் நிகர லாபமாக 258.40 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.
கடந்த நிதியாண்டில் 25% வளர்ச்சி
இதுவே ஆதித்யா பிர்லா குழுமத்தின் நிகர லாபம் 169.45 கோடி ரூபாயாகும். மேலும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர இலாபம் 25 சதவிகிதம் வளர்ச்சி கண்டு 870.94 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பங்கு சந்தையின் மூலம் வருவாய்
இதில் கவனிக்க தக்க விஷயமென்னவெனில் கடந்த காலாண்டில் மட்டும் பங்கு சந்தையின் மூலம் கிடைத்த வருவாய் 3,578.44 கோடி ரூபாயிலிருந்து 4,730.80 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.