டெல்லி: கடன் நெருக்கடி அதிகரித்து வருவதால் ஏர் இந்தியா தனது ஊழியர்களுக்கு செய்யும் செலவுகளையும் வசதிகளையும் குறைத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக டெல்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆடம்பர பங்களாக்களில் இருந்து 676 ஏர் இந்தியா ஊழியர்கள் வெளியேற்றப்பட உள்ளனர். பிரச்சினைகள் குறித்து ஊழியர்கள் பேச நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனம் பல ஆண்டுகளாக கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் சுமை மட்டும் ரூ.55,000 கோடியாக இருக்கிறது. கடனில் மூழ்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை மீட்கும் நடவடிக்கையில் அரசு மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக விமான சேவை நிறுவனத்தை டாடா குழுமம் தான் தொடங்கியது. பின்னர் 1953-ம் ஆண்டில் மத்திய அரசால் அந்நிறுவனம் கையகப்படுத்தப்பட்டு, ஏர் இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிறுவனமாக உள்ள ஏர் இந்தியா, கடந்த சில ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் இயங்கிவருகிறது.
பெருகி வரும் நிர்வாக செலவுகள், லாபமற்ற வர்த்தக நடைமுறைகள் ஆகியவற்றால் சுமார் ரூ. 55000 கோடி கடன் சுமையில் தத்தளிக்கிறது. நிறுவனத்தை சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் சுமையிலிருந்து ரூ.29 ஆயிரம் கோடி ஏர் இந்தியா அசெட் ஹோல்டிங் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் சுமை ரூ.55 ஆயிரம் கோடியாகும்.
இதனால், இந்நிறுவனத்தை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
எனினும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உறுதியாக தெரிவித்தது. ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தது.
இதேபோல ஏர் இந்தியா சாட்ஸ் ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தில் 50 சதவிகித பங்குகளை விலக்கிக்கொள்வது தொடர்பான விளக்க அறிக்கையினையும் மத்திய அரசு வெளியிட்டது. ஏர் இந்தியாவில் மத்திய அரசின் வசமுள்ள பங்குகளை வாங்க டாடா குழுமம், இண்டிகோ விமான நிறுவனம் ஆகியன முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. காலெக்கெடு முடிந்த நிலையிலும் யாரும் பங்குகளை வாங்க முன்வராததால் மத்திய அரசே கடன்களை சுமக்கும் நிலை ஏற்பட்டது.
நஷ்டத்தில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை சீரமைக்கும் நடவடிக்கை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியிலிருந்த போதே மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனத்தை சீரமைக்க 10 ஆண்டு அடிப்படையிலான முதலீட்டு திட்டம் உருவாக்கப்பட்டு, அந்த நடவடிக்கையானது 2012ஆம் ஆண்டில் தொடங்கியது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ. 500 கோடி அவசர நிதியாக அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.2100 கோடியை மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவாத கடனாக அளித்துள்ளது. ரூ. 30,231 கோடியை இதுவரை மத்திய அரசிடமிருந்து ஏர் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.
நிதிச்சிக்கல் மேலும் அதிகரிக்கவே கடந்த மாதம் 20 விமானங்கள் தரையிறக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஏர்இந்தியா நிறுவனத்தில் நிலவும் பிரச்சினை பற்றி ஊடகங்களில் யாரும் பேசக்கூடாது என்று நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடன் நெருக்கடி அதிகரித்து வருவதால் ஊழியர்களுக்கு செய்யும் செலவுகளைவும் வசதிகளையும் குறைத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக டெல்லியில் உள்ள வசந்த விஹார் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆடம்பர பங்களாக்களில் இருந்து 676 ஏர் இந்தியா ஊழியர்கள் வெளியேற்றப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்ற நிதிச்கிக்கல் காரணமாகவே, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த மாதம் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.