தேனி: ஏலக்காய்க்கு நல்ல விலை கிடைத்தும் விலைச்சல் குறைவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஏலக்காய்களை வாங்கி இருப்பு வைத்து ஆன்லைனில் விற்பனை செய்பவர்கள் விலை அதிகரிப்பால் உற்சாகமடைந்துள்ளனர்.
ரம்ஜான் கால விலை உயர்வை எதிர்பார்த்து ஏலக்காய் வர்த்தகம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கேரளாவில் பெய்த பலத்த மழையால் ஏலக்காய் செடிகளில் அழுகல் நோய் ஏற்பட்டு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பருவநிலை மாற்றத்தால் சுட்டெரிக்கும் வெயிலாலும், மழை இல்லாமலும் ஏலச் செடிகள் கருகிப் போனதால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஏக்கரில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் அகமலை, மேகமலை, டாப் ஸ்டேசன், சென்ட்ரல் ஸ்டேசன் ஆகிய பகுதிகளிலும் ஏலக்காய் விவசாயம் செய்யப்படுகிறது. கேரளாவின் மொத்த ஏலக்காய் உற்பத்தியில் சுமார் 60 சதவிகிதம் இடுக்கி மாவட்டத்தில் மட்டுமே விளைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏலக்காய் ஏல விற்பனை நிறுவனங்கள்
இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய், வாசனைப் பொருள் வாரியத்தின் கட்டுப்பாட்டில், அந்த மாவட்டத்தில் உள்ள குமுளி, வண்டன் மேடு, புத்தடி மற்றும் தேனி மாவட்டத்தில் போடி ஆகிய இடங்களில் உள்ள 12 ஏலக்காய் ஏல விற்பனை நிறுவனங்கள் மூலம் இணைய ஏலம் (e-trading) முறையில் விற்பனை செய்யப்படுகிறது. கேரளத்தில் விளையும் ஏலக்காய் வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், சவூதி அரேபியா, துபாய், குவைத் போன்ற அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.
வெள்ளமும் கடுமையான வெயிலும்
கேரளாவில் கடந்த அக்டோபரில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஏலக்காய் தோட்டங்களில் செடிகள் மற்றும் விளைந்திருந்த காய்கள் அழுகி சேதமடைந்தன. இதனால் ஏலக்காய் தோட்டங்களில் காய் எடுப்பு பருவத்தில், வழக்கத்தை விட 70 சதவிகிதம் குறைவாக மகசூல் கிடைத்தது. இந்நிலையில், தற்போது கேரளத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வழக்கமாக வெயில் காலங்களில் கேரளாவில் 32 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்தது இல்லை. ஆனால் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக எப்போதும் இல்லாத வகையில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரித்து வருகிறது.
கருகிய ஏலக்காய் செடிகள்
கடும் வெயிலால் ஏலக்காய் செடிகளில் காய்கள் கருகியும், உதிர்ந்தும் மகசூல் மேலும் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மழையே பெய்யாததால் செடிகளுக்கு நீர் பாய்ச்ச முடியவில்லை. ஒரு சில விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் அமைத்து வைத்திருந்த கிணறுகள் மூலம் செடிகளுக்கு மோட்டார் வைத்து நீர் பாய்ச்சி வந்தனர். இதனால் ஒரு சில பகுதிகளில் குறிப்பிட்ட சதவிகித செடிகள் கருகாமல் காப்பாற்றப்பட்டுள்ளன.
காய் எடுப்பு குறைந்தது
கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் மழை இல்லாததால் கிணறுகளிலிருந்து தண்ணீர் முற்றிலும் வற்றி விட்ட நிலையில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இன்னும் சில நாட்கள் மழை பெய்யாமல் போனால் ஏலச்செடிகள் முற்றிலும் கருகி விடும் அபாயமும் உள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் 6 அல்லது 7 முறை கேரள ஏலக்காய் தோட்டங்களில் காய் எடுப்பு நடைபெறுவது வழக்கம். தற்போது மூன்று சுற்று காய் கூட எடுக்க முடியாத நிலை உள்ளது.
விவசாயிகள் கவலை
வழக்கமாக ஏக்கருக்கு சுமார் 150 கிலோ ஏலக்காய் கிடைக்கும். ஆனால் தற்போது ஏக்கருக்கு 50 கிலோவிற்கும் குறைவாகவே காய் கிடைக்கிறது. இந்த ஆண்டு மழை வெள்ளம் மற்றும் வெயில் பாதிப்பால் ஏலக்காய் தோட்டங்களில் 3ஆவது சுற்றுக்கு மேல் காய் எடுப்பிற்கு வாய்ப்பு இல்லை என்று விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர். மேலும் பெரும்பாலான விவசாயிகளின் தோட்டங்களில் கடும் வெயில் காரணமாக 20 முதல் 40 சதவிகித செடிகள் கருகி விட்டன.
புதிய செடிகள் நடவு
கருகிய செடிகளை முற்றிலும் அகற்றி விட்டு புதிதாக குழிகள் வெட்டி புதிய ஏலச் செடிகள் நடவு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு ஏலக்காய் மூலம் வருமானம் கிடைக்காத நிலையில் புதிய செடிகள் கடன் வாங்கி நடவு செய்யும் சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். புதிய செடிகள் நடவு செய்த போதிலும் அதற்கும் முறையாக தண்ணீர் கிடைக்கப் பெற்று உரம் பூச்சி மருந்து போன்றவை முறையாக கொடுக்கப்பட்டாலும் அது பலனுக்கு வருவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை இழந்த தமிழக தொழிலாளர்
தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிப்பது இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலத் தோட்டங்கள் தான். இடுக்கி மாவட்டத்தில் 60 சதவிகித ஏலத் தோட்டங்கள் தமிழர்களின் வசமே உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான தமிழக தோட்டத் தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்திற்கு சென்று அங்கு குடும்பத்துடன் தங்கி தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தினமும் நூற்றுக்கணக்கான ஜீப்களில் தினமும் காலையில் கேரளப் பகுதிக்கு சென்று தோட்டங்களில் வேலை செய்து முடித்துவிட்டு மாலையில் வீடு திரும்பும் பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த தோட்ட வேலையை மட்டுமே நம்பி உள்ளனர். மேலும் இவர்களை பணிக்கு அழைத்துச் சென்று திரும்பும் 500க்கும் மேற்பட்ட ஜீப் வைத்து இயக்கும் தொழிலாளர்களும் ஏலத் தோட்டங்களை நம்பியே உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
வர்த்தகம் சூப்பர்
ஏலக்காய் தோட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஏலக்காய் வர்த்தகம் கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்தில் உள்ளது. ஏலக்காய் ஏல விற்பனை நிலையங்களுக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் ஏலக்காய் அளவு கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், வியாபாரிகள், தாங்கள் கொள்முதல் செய்த ஏலக்காய்களை மறு விற்பனைக்கு அனுப்பாமல், தரம் பிரித்தும், சுத்தப்படுத்தியும் மீண்டும் ஏலக்காய் விற்பனை நிலையத்தில் விற்பனைக்குப் பதிவு செய்கின்றனர். இதனால் கடந்த சில நாள்களாக ஏலக்காய் விற்பனை நிலையங்களில் தினமும் சாராசரியாக சுமார் ஒரு லட்சம் கிலோவிற்கும் மேல் ஏலக்காய் விற்பனைக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதனால் ஏலக்காய் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் கிலோ 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஏலக்காய் தற்போது கிலோவுக்கு ரூ.2,658 (இன்றைய விலை) ஆக உயர்ந்து உள்ளது.
விலை சீராக உயர்வு
ஏலக்காய் தோட்டங்களில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தைக்கு ஏலக்காய் வரத்து மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பண்டிகை காலத் தேவை மற்றும் விலை உயர்வை உத்தேசித்து, ஏலக்காய் விலை சீராக உயர்ந்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும், வரும் மாதங்களில் ஏலக்காய் விலை புதிய உச்சத்தை தொடும் என்று எதிர்பார்ப்பு உள்ளதால், வியாபாரிகள் தாங்கள் கொள்முதல் செய்த ஏலக்காய்களை இருப்பு வைத்தும், மறு விற்பனைக்குப் பதிவு செய்தும் சீரான விலை உயர்வை உறுதி செய்து வருகின்றனர்.
விலை மேலும் அதிகரிக்கும்
ஏலக்காய் விலை உயர்வால் ஏற்றுமதி முகவர்கள் தற்போது தேவையான அளவு மட்டும் ஏலக்காய்களை கொள்முதல் செய்கின்றனர். ஆனால், வரும் மாதங்களில் ஏலக்காய் விலை மேலும் அதிகரிக்கும் என்பதால், தங்களது கொள்முதலையும் அதிகரித்து ஏலக்காய்களை இருப்பு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி முகவர்கள் கூறுகின்றனர்.
ஏலக்காய் விலை நிலவரம்
வண்டமேடு, மாஸ் எண்டர்பிரைசஸ் ஏல விற்பனை நிலையத்தில் கடந்த சனிக்கிழமை 41,173 கிலோ ஏலக்காய் விற்பனைக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஏலக்காய் சராசரி விலை கிலோவுக்கு ரூ.2,467 ஆகவும், அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ4,000 ஆகவும் இருந்தது. கிலோவிற்கு ரூ4000 என்பது ஏலக்காய் விலையில் புதிய உச்சமாகும்.
விலை உயர வாய்ப்பு
06.05.2019 நடைபெற்ற ஏலத்தில் 26,009 கிலோ ஏலக்காய் விற்பனைக்கு வந்த நிலையில் அதிக பட்சமாக விலை ரூ.2,946 க்கும் சராசரியாக ரூ.2,658 க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் ஏலக்காய் விலை சராசரியாக ரூ.3000ஐ தாண்டி விடும். கிலோ ரூ 3,500 வரை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏலக்காயில் முதலீடு
ஏலக்காய் விவசாயம் செய்யும் விவசாயிகள் கவலையடைந்தாலும் அவர்களிடம் வாங்கி விற்பனை செய்கின்ற வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த காலம் முதல் ஏலக்காய்களை வாங்கி இருப்பு வைத்து இருந்த ஒரு சில பெரிய வியாபாரிகள் தற்போது மிகப் பெரிய கோடீஸ்வரர்களாக மாறி வருகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. தற்போது தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அதைவிடுத்து ஏலக்காயில் முதலீடு செய்யலாம் என்று எண்ணுகிற அளவிற்கு ஏலக்காய் விலை புதிய உச்சத்தை நாள்தோறும் தொட்டு வருகிறது என்பதே கள நிலவரம்
செய்தி படங்கள் உதவி : தேனி கே. ராதாகிருஷ்ணன்