டெல்லி: முன்னாள் பிரதமர் மற்றும் பொருளாதார மேதை Manmohan singh "மோடி இந்தியப் பொருளாதாரம் குறித்த ஒரு தெளிவான பொருளாதாரப் பார்வை இல்லாமல், ஒட்டு மொத்த இந்தியப் பொருளாதாரத்தையும், மோசமான நிலைக்கு தள்ளி விட்டார்" என காரசாரமாகப் பேசி இருக்கிறார்.
அதோடு தற்போது இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதற்கும் மோடியும், அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அரசும் தான் காரணம் என்றும் தில்லாக குற்றம்சாட்டி இருக்கிறார் மன்மோகன் சிங்.
தற்போது இந்தியப் பொருளாதாரம், மிகக் கடினமான நெறிமுறைகளாலலும், மோசமான கழுத்தை நெறிக்கும் கட்டுப்பாடாலும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. அரசின் கட்டுப்பாடுகளும், தலையீடுகளும் மிக அதிக அளவில் இருக்கிறது. இது எப்படி இருக்கிறது என்றால் நெறிமுறைப்படுத்துபவர்கள் கூட ஒரு கட்டுப்பாட்டாளர்களைப் போல சுயமாக சிந்திக்காமல் செயல்படுகிறார்கள்.
அதீத கட்டுப்பாடு
ஒரு சந்தையை நெறிமுறைப்படுத்துவதற்கும், அதை கட்டுப்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதை மோடியோ அல்லது மோடியின் அரசாங்கமோ உணரவில்லை எனக் குற்றம் சாட்டி இருக்கிறார். இதில் இந்திய நீதிமன்றங்களும் அடக்கம் எனவும் சொல்லி இருக்கிறார் மன்மோகன் சிங். இது ஒரு வகையான நம்பிக்கை துரோகம் தான். பாஜகவை இத்தனை கோடி மக்கள், இந்திய பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக ஜெயிக்க வைத்தார்கள். ஆனால் பாஜக மக்களை ஏமாற்றிவிட்டது. இதுவும் ஒரு வகையான கிரிமினல் நடவடிக்கை என பிளந்து எடுத்திருக்கிறார் மன்மோகன் சிங்.
பேட்டி
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் "மோடியின் பணமதிப்பிழப்பே மோடிக்கும் அவரது அரசாங்கத்துக்கும், பொருளாதாரம் பற்றி ஆழ்ந்த அறிவு இல்லாததற்கு சான்று. அதோடு இவர்களின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் தான், ஜனவரி 2019 முதல் ஏப்ரல் 2019 வரைக்குமான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பு, வெறும் 6.5 சதவிகிதமாக சரிந்திருக்கிறது. இதை நான் சொல்லவில்லை. இந்தியாவின் மத்திய நிதி அமைச்சகமே சொல்கிறது" என மோடியை விளாசுகிறார் மன்மோகன் சிங்.
பெரிய ஊழல்
தனியார் நுகர்வு குறைந்திருப்பது, மந்தமான நிரந்தர முதலீடுகள், மோடி ஆட்சிக் காலத்தில் குறைந்திருக்கும் ஏற்றுமதி எல்லாமே தற்போதைய இந்திய பொருளாதார மந்த நிலைக்கு முக்கியக் காரணங்கள் என்கிறார் மன்மோகன் சிங். இதை எல்லாம் விட மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான் சுதந்திர இந்தியாவிலேயே நடந்த மிகப் பெரிய ஊழலாக இருக்கும் என ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் அடித்திருக்கிறார் மன்மோகன் சிங்.
பொருளாதார சீர்குலைவு
பணமதிப்பிழப்பு என்கிற ஒரு விஷயத்தால் இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டார் மோடி. அமைப்பு சாராத மற்றும் முறையான இந்திய வணிக சட்ட திட்டங்களில் அடங்காத நிறுவனங்களுக்கு தேவையான பணம் இல்லாமல் திண்டாட வைத்தது, வணிகர்களுக்கான அன்றாட பணம் கிடைக்கச் செய்யாமல் அவர்களின் பிழைப்பையே கெடுத்துக் குட்டிசுவர் ஆக்கியது, முத்துக்கு முத்தாக, மகுடத்தில் மணி வைத்தாற் போல இந்த ஒரு நடவடிக்கையால் ஒட்டு மொத்த இந்தியாவிலும் பல கோடி பேரின் வேலையை பறித்தது என பணமதிப்பிழப்பின் பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அத்தனை பெருமையும் மோடிக்கும், மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையையேச் சேரும் எனவும் வஞ்சப் புகழ்ச்சியில் வறுத்தெடுத்து இருக்கிறார்.