டெல்லி : கடந்த 2014- ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து 200 டன் தங்கத்தை ரகசியமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இவ்வாறு பரவி வரும் இந்த செய்தி எந்த அளவில் உண்மை, என அறிய விரும்புவதாக பல்வேறு ஆர்வலகளும் தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு அறிக்கைகள் வந்த வண்ணமே உள்ளன.
இதில் அறிவிக்கப்பட்ட மற்றொரு மிகப் பெரிய விஷயம், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து 200 டன் தங்கம் திருடப்பட்டுள்ளது என்று பரப்பப்பட்டு வரும் செய்தி. மோடி அரசு ரகசியமாக ரிசர்வ் வங்கியின் 200 டன் தங்கத்தை சுவிட்சர்லாந்திற்கு 2014ஆம் ஆண்டு கொண்டு சென்றதா, அந்த தங்கத்தை பரிமாறிக் கொண்டதற்கு இணையாக அரசு திரும்ப பெற்றது என்ன? இது போன்ற பல கேள்விகள் மனதில் எழுந்த வண்ணமே உள்ளன. மேலும் இந்த தங்க பரிவர்த்தனை பற்றிய தகவல் அறிவிக்கப்படாதது ஏன்? இதன் பின்னணி என்ன? என இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
தங்கம் பாதுகாப்பாக இருக்கிறது
பத்திரிக்கையாளர் நவ்நீத், கடந்த 2018ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் நான் எழுப்பிய கேள்விக்கு கிடைத்த பதிலின் அடிப்படையிலேயே இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். அதாவது, இந்தியாவுக்கு சொந்தமான 268.01 டன் தங்கம் மிகவும் பாதுகாப்பாக பேங்க் ஆஃப் இங்கிலாந்து, பேங்க் ஆஃப் இன்டர்நேஷனல் சென்டில்மென்டில் வைக்கப்பட்டிருப்பதாக எனக்கு அளித்த பதிலில் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
ரிசர்வ் வங்கி இணையதளத்தில் வெளியிட்டது
ஆனால், இந்த தகவல் ரகசியம் பாதுகாக்கப்பட்டு வரும் ஒன்றல்ல. இது குறித்த தகவல்களை 2018ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி தனது இணையதளத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு குறித்த கணக்கு மேலாண்மை முறையில் 2014 - 2015க்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே இந்த குழப்பத்திற்கும் காரணம் என்று தெரிகிறது.
திடீரென 200 டன்னுக்கு எப்படி அதிகரிக்கும்?
2014ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் வெளிநாடுகளில் இந்தியா வைத்துள்ள தங்கத்தின் எடை பூஜ்யமாக இருந்த நிலையில், அதற்கு பிறகு திடீரென 200 டன்னுக்கு மேலாக எப்படி அதிகரிக்கும்?" என்று நவ்நீத் கேள்வி எழுப்பியுள்ளார்.
மையவங்கிகளில் வைத்திருப்பது நடைமுறையே
மேலும் இந்த விவகாரம் தொடர்ந்து பெரிதாகவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. ஒரு நாட்டின் மைய வங்கி, பாதுகாப்பு காரணங்களுக்கான மற்ற நாடுகளின் மைய வங்கிகளில் தங்களது தங்க கையிருப்புகளை வைத்திருப்பது என்பது சாதாரண நடைமுறை என்றும் தனது அறிக்கையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தங்கத்தை சேமித்தும் வைக்கலாம்
ஆனால் சில நிபுனர்களிடம் கருத்து கேட்டபோது ஒரு நாடு தனக்கு சொந்தமான தங்கத்தை மற்ற நாடுகளின் மைய வங்கிகளில் வைத்திருப்பது என்பது ஒரு சாதாரணமான நடைமுறை தான். அவ்வாறு வைக்கப்படும் தங்கம் அடமானம் செய்யப்பட்டதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்ற நாடுகளில் இருந்து வாங்கும் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அவசியமில்லை. அந்தந்த நாடுகளின் மைய வங்கிகளிலேயே அதை வைக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.
தங்கம் இருப்பு
2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாத ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, இந்தியா 586.44 டன் தங்க இருப்புகளை கொண்டிருந்தது. இதில் சுமார் 298 டன் பாதுகாப்பாக வெளிநாடுகளில் வைக்கப்பட்டிருந்தது.