டெல்லி: ரிலையன்ஸ் ஜியோவின் அசுரத் தனமான வளர்ச்சி, அள்ளித் தெளிக்கும் ஆஃபர்கள் மற்றும் மலிவு விலை டேட்டா போன்ற அஸ்திரங்களால், பலமான அடி வாங்கி இருந்தது பார்தி ஏர்டெல் நிறுவனம்.
ஜியோ என்கிற ஒரு நிறுவனம் இந்திய டெலிகாமில் விலை குறைத்ததால், இந்தியாவில் இருக்கின்ற மற்ற டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் திட்டங்களுக்கான கட்டணங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். இந்த கால கட்டத்தில் தான், வோடாஃபோன் நிறுவனம் தனித்துப் போட்டியிடாமல், ஐடியா நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. ஏர்டெல் தன் பல திட்டங்களுக்கான விலையை கூடுமான வரை குறைத்துக் கொண்டது.
ஒரு கட்டத்துக்கு மேல் ஏர்டெல் நிறுவனத்தால் தன், கட்டணங்களைக் குறைத்துக் கொள்ள முடியவில்லை. வெளிப்படையாக ஜியோவை விமர்சிக்கத் தொடங்கினார்கள். குற்றம் சாட்டத் தொடங்கினார்கள். கதறிய கதறல்கள் எல்லாம் அத்தனை உண்மையாக இருந்தது. இப்போது மார்ச் 2019 காலாண்டில் கொஞ்சம் லாபமும் பார்த்துவிட்டது.
மார்ச் 2019 காலாண்டில் மட்டும் ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் 29 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம். மார்ச் 2019-ல் ஏர்டெல்லின் நிகர லாபம் 107.2 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த மார்ச் 2018-ல் ஏர்டெல்லின் நிகர லாபம் 82.9 கோடி ரூபாயாக இருந்தது.
நிகர லாபம் அதிகரிக்கும் அதே நேரத்தில், வருவாயும் 6.22 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம். மார்ச் 2019 காலாண்டில் 20,602 கோடி ரூபாயாக இருக்கிறது ஏர்டெல்லின் வருவாய். ஆனால் கடந்த மார்ச் 2018-ல் ஏர்டெல்லின் வருவாய் 19,394 கோடி ரூபாயாக இருந்தது.
2018 - 19 நிதி ஆண்டுக்கான நிகர லாபம் 62.7 சதவிகிதம் சரிந்திருக்கிறதாம். கடந்த 2018 - 2019 நிதி ஆண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் 409.5 கோடி ரூபாயாக இருக்கிறது. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டு 2017 -18 நிதி ஆண்டில் ஏர்டெல்லின் நிகர லாபம் 1,099 கோடி ரூபாயாக இருந்தது.
ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாப சரிவு, இந்திய டெலிகாம் துறையில் இருக்கும் அழுத்தமான போட்டி மற்றும் பிசினஸ் வேகத்தைக் காட்டுகிறது. கடந்த 2016-ல் இருந்து இந்திய டெலிகாம் சந்தைகளில் மலிவான விலையில் டேட்டா வசதிகள் கொடுத்து அதிக டேட்டாக்களை நுகர வைப்பது மற்றும் அதிக அளவில் வாய்ஸ் சேவைகளை நுகர வைப்பத்தில் தான் கவனமாக இருந்தார்கள் டெலிகாம் நிறுவனங்கள்.
ஆனால் இப்போது ஜியோ உட்பட எல்லா நிறுவனமும், தங்கள் நிதி நிலைகளைப் பார்க்கத் தொடங்கி இருக்கின்றன. ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா மற்றும் ஜியோ உட்பட அனைவருமே கொஞ்சமாவது சம்பாதிக்க வேண்டும் என யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இனி இந்திய டெலிகாம் துறையில் நடந்த ரத்தக்களரியான சண்டை முடிவுக்கு வந்துவிட்டது. இனி ஒழுங்காக ஒரு குழுவாக ஜியோ, டோவாஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஒற்றுமையாக வியாபாரம் செய்வார்கள். எனவே இனி கொஞ்சம் கொஞ்சமாக டெலிகாம் துறையின் திட்டங்கள், டேட்டா பேக்குகள், வாய்ஸ் கால்களுக்கான கட்டணங்கள் நாசூக்காக உயரும் என எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் டெலிகாம் துறை அனலிஸ்டுகள்.