பெய்ஜிங்: சீனாவின் வைஸ் பிரீமியராக இருக்கும் லியு ஹி (Liu He) வரும் மே 09 மற்றும் 10 தேதிகளில் அமெரிக்காவுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப் போவதாக சீனாவின் வணிக அமைச்சகம் வட்டாரங்களில் இருந்து அதிகார பூர்வ செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த 2018-ம் ஆண்டில், இரு நாடுகளும் இரு நாட்டின் பொருட்கள் மீதும் பரஸ்பரம் வரிகளை சரமாரியாக விதித்துக் கொண்டார்கள். அதன் பின் இரண்டு நாடுகளுமே, ஒற்றுமையாக பேச்சு வார்த்தைக்கு உடன் பட்டு பேசியும் வந்தார்கள்.
ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 05, 2019) அன்று "200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்களுக்கு சொன்ன படி 10 சதவிகிதமாக இருந்த இறக்குமதி வரியை, 25 சதவிகிதமாக வரும் வார இறுதிக்குள் உயர்த்துவோம். அதோடு மற்ற சீன பொருட்களுக்கும் இறக்குமதி வரி விதிப்போம்" என அசால்டாக ட்விட்டி மொத்த உலகத்தையும் பதற வைத்துவிட்டார் ட்ரம்ப்.
இதனால் சுமூகத் தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வர்த்தப் போர் தொடர்பான சமாதானப் பேச்சுகள் அப்படியே ஸ்தம்பித்துவிட்டன. ட்ரம்ப் மேலும் கூடுதலாக வரி விதித்ததால், ஒட்டு மொத்த உலக சந்தைகளும் ஒரு பெரிய ஆட்டம் கண்டு விட்டது, சீனாவின் ஷாங்காய் காம்போசைட் எல்லாம் ஒரே நாளில் சுமார் 5.5 சதவிகிதம் சரிவைக் கண்டு உலகையே நடுங்க வைத்தது. இந்திய சந்தைகளிலும், சுமார் ஒரு சதவிகித இறக்கத்தை பார்க்க முடிந்தது.
அமெரிக்கா சார்பாக லியு ஹி உடன் பேச்சு வார்த்தை நடத்தும் ராபர்ட் லித்தைசர் (Robert Lighthizer)தன் கருத்தையும் பதிவு செய்திருக்கிறார். சீனா தான் சொன்ன சொல்லில் நிற்பதில்லை. எனவே ஒப்பந்தங்களில் பலதும் மாறிக் கொண்டே இருக்கின்றன. அதோடு சீனாவில் கடுமையான சட்ட திட்டங்கள் இருப்பதையும் வெளிப்படையாக கண்டிக்கிறார். வரும் வெள்ளிக்கிழமைக்குள் சீன பொருட்கள் மீது வரி விதிக்கப் போகிறோம் தான், ஆனால் பேச்சு வார்த்தைக்கு எந்த தடையும் இல்லை எனச் சொல்லி இருக்கிறார்.
அமெரிக்க கருவூளச் செயலர் ஸ்டீவன், சீனாவோடு அத்தனை கடுமையாக இல்லை. அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு சுமூகமான முடிவு எட்ட வேண்டும் அல்லது சொன்ன படி இறக்குமதி வரியை விதித்து விட வேண்டும் என்று தான் முடிவு செய்திருந்தோம். ஒரு நல்ல முடிவுக்கு வரவில்லை, பேசி இருந்த படி தற்போது வரியை விதிக்கிறோம் என அசால்ட் காட்டுகிறார்.
கடந்த ஐந்து மாத காலமாக சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் போய்க் கொண்டிருந்த பேச்சு வார்த்தைக்கு ஒரே அடியில் முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது இந்த வரி விதிப்பு. இந்த இரண்டு நாடுகளுக்கும் பில்லியன் கணக்கில் நஷ்டம் கண்டது ஒரு பக்கம் என்றால், இந்த இரண்டு நாடுகள் சண்டை போட்டுக் கொள்வதால், ஒட்டு மொத்த உலகப் பொருளாதாரமே மந்த நிலையில் தேங்கி நிற்கிறது.