மும்பை: மும்பையில் உள்ள ஏர்-இந்தியா கட்டிடத்தை 1,400 கோடி ரூபாய்க்கு வாங்க மகாராஷ்டிரா அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர்-இந்தியா நிறுவனம் 50,000 கோடி ரூபாய் கடன் சுமையில் உள்ளது. இதனால் ஏர் இந்தியாவை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டது.
ஆனால் அத்திட்டம் நிறைவேறாததையடுத்து, நிதி நிலைமையை சமாளிக்க மத்திய நிதியமைச்சகத்திடம் ஏர்-இந்தியா நிதி உதவி கேட்டது. அதுவும் கிடைக்காத நிலையில் இந்த நிலையில், இதையடுத்து கடனை அடைக்க ஏர்-இந்தியாவிற்கு நாடு முழுவதும் இருக்கும் தனது சொத்துக்களை விற்பனை செய்து அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏர்-இந்தியா தலைமையக கட்டிடம் விற்பனை
இதையடுத்து தென் மும்பையில் உள்ள பழைய ஏர்-இந்தியா தலைமையக கட்டிடத்தை விற்பனை செய்ய ஏர்-இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக டெண்டரும் கூட விடப்பட்டது. அரசு நிறுவனம் மட்டுமே வாங்க வேண்டும் என்றும் ஏர்-இந்தியா கட்டிடம் தொடர்ந்து அதே பெயரில் இருக்கும் என்பது உட்பட சில நிபந்தனைகளுடன் டெண்டர் விடப்பட்டது.
ரூ.1,400 கோடிக்கு வாங்க தயார்-மஹாராஷ்டிரா அரசு
டெண்டரில் குறைந்தபட்ச விலையாக 1,600 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டிடத்தை மகாராஷ்டிரா அரசு வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இதில், ஏர்-இந்தியா கட்டிடத்தை ரூ.1,400 கோடி கொடுத்து வாங்கத் தயாராக இருப்பதாக மாநில தலைமை செயலாளர் மதன் தெரிவித்தார்.
காலி செய்து கொடுக்க வேண்டும்
மேலும் விலைக்கு வாங்கி விட்டால் கட்டிடம் முழுவதையும் காலி செய்து கொடுக்க வேண்டும் என்றும் ஏர் இந்தியா நிர்வாகம் தனக்கு குறிப்பிட்ட பகுதியை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தார். ஏற்கனவே கட்டிடத்தில் இருப்பவர்களின் லைசென்ஸ் காலம் முடிந்த பிறகு அனைவரையும் காலி செய்து விடவேண்டும் என்றும் தெரிவித்தார்.
மஹாராஷ்டிரா தான் அதிக தொகைக்கு கேட்டுள்ளது
மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுக நிர்வாகம் 1,375 கோடி ரூபாய்க்கும், எல்.ஐ.சி. நிர்வாகம் 1,200 கோடி ரூபாய்க்கும் ஏர்-இந்தியா கட்டிடத்தை கேட்டன. ஆனால் மகாராஷ்டிரா அரசு தான் அதிகபட்ச தொகைக்கு கேட்டுள்ளதாம்.
அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
இக்கட்டிடம் கிடைத்தால் மும்பை முழுவதும் பல்வேறு இடங்களில் தனித்தனியாக செயல்படும் அரசு அலுவலகங்கள் அனைத்தையும் ஒரே இடத்திற்கு கொண்டு வந்து விட முடியும் என்று மகாராஷ்டிரா அரசு கருதுகிறதாம். 2013ம் ஆண்டு வரை ஏர்-இந்தியா தலைமையகம் இந்த கட்டிடத்தில் தான் செயல்பட்டது. அதன் பிறகு ஏர்-இந்தியா தலைமையகம் டெல்லிக்கு மாற்றப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
23 அடுக்குமாடிகள்
மேலும் மும்பையிலுள்ள இந்த அடுக்குமாடி கட்டிடம் 23 அடுக்குமாடிகளை கொண்டுள்ளதும், இது 5 லட்சம் சதுர அடி கொண்டதாகவும், மொத்த 23 அடுக்குமாடிகளில் 17 மாடிகள் அலுவலக பயன்பாட்டுக்கு பயன்படும் வகையிலும் உள்ளது கவனிக்கதக்கது.