டெல்லி: அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்த அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ், புதிதாக அமையும் அரசு அமெரிக்க பொருட்களுக்கான வர்த்தக தடைகளை எல்லாம் நீக்குவதற்கு முயற்சி செய்யும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் பைக் உள்பட 29 பொருட்களுக்கு 70 முதல் 120 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு 25 சதவிகிதம் கூடுதலாக இறக்குமதி வரி விதித்தது.
இந்தியாவும், அமெரிக்காவும் போட்டி போட்டு இறக்குமதி வரியை உயர்த்தி வந்ததால் இரு நாடுகளின் வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அமெரிக்கா ஒரு படி மேலே சென்று வர்த்தகத்திற்கு இணக்கமான நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை தள்ளி வைப்பதாக அறிவித்தது.
அமெரிக்காவின் திடீர் முடிவினால், இறக்குமதிக்கான வரி உயர்வை வரும் 16ஆம் தேதி வரையிலும் இந்தியா ஒத்தி வைத்தது. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் கடந்த 6ஆம் தேதி இந்தியா வந்தார்.
பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்த வில்பர் ரோஸ், அமெரிக்க நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வர்த்தகத் தடைகள் அனைத்தையும் இந்தியா நீக்கவேண்டும் என்று கூறினார். மேலும் வர்த்தக செலவினங்களை அதிகரிக்கவும் தரவுகள் பரவலாக்கத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கவும் இந்திய முன் வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.
எங்களது முக்கிய நோக்கமே, அமெரிக்க நிறுவனங்கள் எந்தவித தடையும் இல்லாமல் வர்த்தகம் செய்வதற்கு வழிவகை செய்யப்படவேண்டும் என்றும் நிறுவனங்களுக்கு ஆகும் செலவுகளுக்கான வரம்பை அகற்ற வேண்டும் என்ற வில்பர் ரோஸ் கூறினார்.
டெல்லியில் ட்ரேட் வின்ட்ஸ் ஃபோரம் அண்டு ட்ரேட் மிஷன் (Trade Winds Forum and Trade Mission) கூட்டத்தில் அமெரிக்க தொழில் அதிபர்களுடன் பேசும்போது, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதைப் பற்றி அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், தற்போது அமெரிக்கா உள்பட வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதில் பல தடைக்கற்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதில் இறக்குமதி பொருட்களுக்கான வரி உயர்வு உள்பட பல பாதகமான அம்சங்கள் உள்ளன.
இந்தியாவின் சராசரி இறக்குமதி வரி விகிதம் சுமார் 13.8 சதவிகிதமாகும். இது மற்ற எந்த நாட்டைக் காட்டிலும் அதிகமானதே. உதாரணமாக வாகனங்களுக்கு இந்தியா 60 சதவிகித இறக்குமதி வரி விதிக்கிறது. ஆனால் அமெரிக்கா 2.5 சதவிகிதம் மட்டுமே விதிக்கிறது.
அதேபோல், மோட்டா சைக்கிளுக்கு இந்தியா சுமார் 50 சதவிகித இறக்குமதி வரியும் மது வகைகளுக்கு 150 சதவிகித வரியும் விதிக்கிறது. ஆனால் அமெரிக்காவோ மிகக் குறைவாகவே இறக்குமதி வரி விதிக்கிறது என்று கூறினார்.
நாங்கள் இந்திய அரசடன் தொடர்ந்து இறக்குமதிக்கான கூடுதல் வரி விதிப்பு மற்றும் வர்த்தக தடைகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அமெரிக்க நிறுவனங்கள் இங்கு எதிர்கொள்ளும் சிரமங்களையும் எடுத்துக் கூறியுள்ளோம். புதிதாக ஆட்சிக்கு வரும் அரசு எங்களின் கோரிக்கையை ஏற்று பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிகளை மேற்கொள்ளும் என்று நம்புவதாவும் வில்பர் ரோஸ் கூறினார்.
ஈரான் பெற்ற சலுகைகள் இந்தியாவுக்கு பறிபோகிறது என்பதற்காக, இதை ஈடுகட்டும் வகையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை மலிவு விலையில் சப்ளை செய்ய உத்தரவாதம் தர முடியாது. அமெரிக்காவில் இவை தனியார்வசம் உள்ளன. அவர்களை இந்த விலைக்குதான் சப்ளை செய்ய வேண்டும் என அரசு நிர்பந்திக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.