மும்பை: இந்தியாவில் இறக்கங்கள், சரிவுகளையே காணாத துறை என்றால் அது எஃப்.எம்.சி.ஜி என்றழைக்கப்படும் நுகர்வோர் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் துறை தான். மும்பை பங்குச்சந்தையில் S & P FMCG இண்டெக்ஸில் 74 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை கடந்த 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு பெரிய சரிவுகளைக் காணவில்லை
ஆனால் இப்போது 2008க்குப் பிறகு ஒரு பெரிய சரிவை காணுமோ..? என்கிற பயம், சந்தேகம் பங்குச் சந்தைகளில் நிலவி வருகிறது. இந்த fast moving consumer goods துறையில் சில பெரிய நிறுவனங்களே கடந்த ஐந்து மாதங்களில் இரட்டை இலக்கங்களில் தங்கள் சந்தை மதிப்பை இழந்திருக்கிறார்கள்.
இந்தியாவில் மக்கள் நுகர்வு, தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த நுகர்வு குறைவுக்கு வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் முறையாக அல்லது குறைவாக நெறிமுறைப்படுத்தப்படும் நிதி நிறுவனங்கள் போன்றவைகளில் நிலவும் நிதி நெருக்கடியை காரணமாகச் சொல்கிறார்கள் அனலிஸ்ட்கள்.
கார் முதல் உணவு வரை
ஆரம்பத்தில் கார்கள் இருசக்கர வாகனங்கள் என்று தொடங்கிய நுகர்வுச் சரிவு, தற்போது அடிப்படை பொருட்களான அரிசி பருப்புகள் வரை பரவிவிட்டது. ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சோப்புகளை தான் இந்தியாவில் 10-ல் 9 பேர் பயன்படுத்துகிறார்கள். இவர்களே 2008ஆம் ஆண்டில் கண்ட பங்குச்சந்தை சரிவு போல மீண்டும் பார்ப்போமோ..? என்று பயந்து கொண்டிருக்கிறார்களாம் அந்த அளவுற்கு இந்திய கிராமப்புறங்களில் தேவை குறைந்து இருக்கிறதாம்.
10 வருடங்கள்
கடந்த பத்து வருடங்களில் 2008ம் ஆண்டு தான் இந்தியாவில் fast moving consumer goods துறையின் தேவை குறைந்திருக்கின்றன. அதன் பிறகு 2018 வரை சின்ன சின்ன ஏற்ற இறக்கங்களுடனேயே இருந்திருக்கின்றன. ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்முறையாக 2019-ஆம் ஆண்டில் முதல் மூன்று மாதத்திலேயே எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களின், பொருட்களின் விற்பனைச் சரிவைச் சந்தித்திருக்கிறார்கள்.
7% சரிவு
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் மார்ச் 2019 காலாண்டில் மட்டும் 7 சதவிகிதம் பொருட்களின் விற்பனை அளவு குறைந்திருக்கிறது. மார்ச் 2019-க்கு முன் 5 காலாண்டுகளில் தொடர்ந்து பொருட்களின் விற்பனை அளவு இரட்டை இலக்கங்களில் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஹிந்துஸ்தான் யூனிலிவரைப்போலவே டாபர் இந்தியா, பிரிட்டானியா போன்ற மிகப்பெரிய fast moving consumer goods துறை நிறுவனங்களே தங்கள் பொருட்களின் விற்பனை அளவு குறைந்திருப்பதை வருத்தத்தோடு சொல்கிறார்கள்.
புதிய அரசுக்கு வேலை
இப்படி இந்தியாவின் நுகர்வுத் துறை மளமளவென சரிந்து கொண்டிருக்கும் போது மக்களவைத் தேர்தலும் ஒருபக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. எனவே புதிதாக வரும் அரசு உடனடியாக பொருளாதாரத்தை மேம்படுத்தினால் தான் இந்த நுகர்வுக் குறைவு தடுக்கப்படும். பொருளாதாரம் மேம்படும். அதற்கு நிலம் மற்றும் தொழிலாளர் விதிகளில் சீர்திருத்தம், அந்நிய நேரடி முதலீட்டை இந்தியாவுக்கு கொண்டு வரும் விதிகளில், தேவையான சீர்திருத்தங்கள் என அனைத்தையும் ஒன்றாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். புதிய அரசு செய்ய்யுமா..? இல்லை மோடி என்றால் வளர்ச்சி ராகுல் என்றால் எழுச்சி என வாய் வார்த்தை மட்டும் பேசிக் கொண்டே விட்டு விடார்களா..?