டெல்லி: இந்தியாவில் பல்வேறு நீதிமன்ற வழக்குகள் மற்றும் விசாரணைகளின் போது டிக்டாக் (TikTok)செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றம் இந்த, செயலிக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் விலக்கப்பட்ட பின், கடந்த வாரத்தில் இருந்து தான் பொது மக்கள் பதிவிறக்கம் செய்ய்யும் வகையில், மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர் மற்றும் ஆண்டிராய்டு செயலிகளில் பதிவிரக்கம் செய்ய உதவும் கூகுள் ப்ளே ஸ்டோர்களில் கிடைக்கத் தொடங்கியது டிக்டாக் (TikTok) செயலி.
மீண்டும் சந்தைக்கு வந்த ஒரே வாரத்தில், தன்னுடைய முதல் இடத்தை அசால்டாக பிடித்திருக்கிறது டிக்டாக் (TikTok). ஆம் இலவச அப்ளிகேஷன்கள் பட்டியலில் ஆப்பிளில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அதே போல கூகுள் ப்ளே ஸ்டோரில் டாப் ஃப்ரீ சோஷியல் பிரிவில் முதலிடம் பிடித்திருக்கிறதாம்.
இதற்கு சாட்சியாக டிக்டாக் (TikTok) நிறுவனமே #ReturnOfTikTok என ஒரு ஹேஸ்டேகையே டிரெண்ட் செய்து கொண்டிருந்தார்களாம். தற்போதைய நிலவரப்படி ஒரு நிமிடத்தில், உலகம் முழுக்க 50.40 கோடி பார்வையாளர்கள் டிக்டாக் (TikTok) செயலியில் இருப்பதைப் பெருமையோடு சொல்கிறது டிக்டாக் (TikTok) நிறுவனம்.
டிக் டாக் அப்ளிகேஷன் மீது தடை விதித்த காரணத்தால் ஒரு நாளைக்கு 3.48 கோடி ரூபாய் நஷ்டமடைவதாக அந்நிறுவனம் புலம்பி இருந்தது. அதனாலேயே தங்கள் அப்ளிகேஷன் மீதான, தடையை நீக்கக் கோரி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்திடமே வாதாடியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்போது மீண்டும் இந்தியாவில் செயல்படத் தொடங்கிய உடனேயே அந்த பணத்தில் கொஞ்சமே கொஞ்சம் செலவழித்து அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கி இருக்கிறது டிக் டாக்.
இந்தியாவில் அதிக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ஏப்ரல் 30-ம் தேதி 90-வது இடத்தில் இருந்த டிக்டாக், மறுநாளில் டாப் இடத்துக்கு வந்தது. இதற்கு டிக்டாக் நிறுவனம் கொடுத்த ஒரே ஒரு அறிவிப்பு தான் காரணம் என்கிறார்கள் இணையவாசிகள். மே 1 முதல் மே 16 வரை தினமும் மூன்று யூசர்களுக்கு டிக்டாக் நிறுவனம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவித்தது. அதன் படி பரிசுகளைக் கொடுக்கிறார்களோ இல்லையோ, டிக்டாக் தான் விட்ட இடத்தை மீண்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆக ஒரு நாளைக்கு டிக்டாக் நிறுவனம், இந்தியாவில் சம்பாதிக்கும் 3.48 கோடி ரூபாயில், ஒரு மூன்று லட்சத்தை மட்டும் தங்கள் ப்ரொமோஷன்களுக்கு பயன்படுத்திக் கொண்டு, மீண்டும் இந்தியாவில் நம்பர் 1 ஆகி விட்டார்கள் என நெட்டிசன்களும் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.