மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுஸிகி (Maruti Suzuki), தன் உற்பத்தியைக் கடந்த மார்ச் 2018-ஐ விட மார்ச் 2019-ல் சுமார் 27 சதவிகிதம் வரை குறைத்துக் கொண்டது. கடந்த மார்ச் 2018-ல் 1,72,000 வாகனங்களைத் தயாரித்தது மாருதி. ஆனால் இந்த மார்ச் 2019-ல் 1,26,000 கார்களை மட்டுமே உற்பத்தி செய்யப் போவதாகச் செய்திகள் வெளியாயின.
இப்போது மீண்டும் மார்ச் மாதம் போல, ஏப்ரல் 2019-ல் தன் மொத்த கார் உற்பத்தியில் 10 சதவிகிதத்தை குறைத்துக் கொண்டதாகச் சொல்கிறது மாருதி சுஸிகி (Maruti Suzuki). ஆக கடந்த பிப்ரவரி 2019, மார்ச் 2019 மற்றும் ஏப்ரல் 2019 என தொடர்ந்து மூன்று மாதங்களாக தன் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டே வருகிறது மாருதி சுஸிகி (Maruti Suzuki).
கடந்த ஏப்ரல் 2019-ல் மாருதி சுஸிகி (Maruti Suzuki) நிறுவனத்தின் வணிக வாகனமான சூப்பர் கேரி உட்பட இந்தியாவில் 1,47,669 வாகனங்களைத் தான் உற்பத்தி செய்தது. இது கடந்த ஏப்ரல் 2018-ல் உற்பத்தி செய்த 1,63,368 வாகனங்களை விட சுமார் 10 சதவிகித குறைவு என மாருதி சுஸிகி (Maruti Suzuki) நிறுவனமே அதிகார பூர்வமாக ஒரு அரசுப் படிவத்தில் சொல்லி இருக்கிறது.
ஆல்டோ, ஸ்விஃப்ட் மற்றும் டிசயர் போன்ற கார்களின் உற்பத்தியை சுமார் 10 சதவிகிதம் வரை மாருதி சுஸிகி (Maruti Suzuki) நிறுவனத்தினர் குறைத்திருக்கிறார்களாம். இந்த ரக கார்கள் ஏப்ரல் 2018-ல் 1,61,370 எண்ணிக்கை தயாரித்தார்களாம். ஆனால் இந்த ஏப்ரல் 2019-ல் வெறும் 1,44,702 கார்களை மட்டும் தான் தயாரித்ததாம்.
மாருதி சுஸிகி (Maruti Suzuki) நிறுவனத்துக்கு இந்தியாவின் குருகிராம் மற்றும் மானேசர் அகிய இடங்களில் ஆண்டுக்கு 15.5 லட்சம் கார்களைத் தயாரிக்கும் அளவுக்கு வசதிகள் இருக்கின்றன. அதே போல மாருதி சுஸிகி நிறுவனத்துக்கு குஜராத்தின் ஹன்சல்பூர் ஆலையில் ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களைத் தயாரிக்கும் அளவுக்கு ஆலை வசதிகள் இருக்கின்றனவாம்.
இதை மாருதி நிறுவனம் தன் இரண்டாம் உற்பத்தி ஆலை எனச் சொல்கிறார்கள். இன்னும் மாருதி சுஸிகி (Maruti Suzuki) நிறுவனத்தின் ஹன்சல்பூரில் இருக்கும் ஆலை முழு வீச்சில் இயங்கத் தொடங்கவில்லையாம். இந்த இரண்டாவது உற்பத்தி ஆலையின் அதிகபட்ச உற்பத்தி அளவு ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களாம். அதை இன்னும் எட்டவில்லை அதற்குள் இந்தியாவில் கார்களுக்கான தேவை குறையத் தொடங்கிவிட்டது. நாங்களும் உற்பத்தியைக் குறைத்துவிட்டோம் என மாருதி சுஸிகி (Maruti Suzuki) நிறுவனத்தினர் வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
ஏன் இப்படி உற்பத்தியைக் குறைத்துக் கொண்டிருக்கிறிர்கள் எனக் கேட்டால், வழக்கம் போல கார்களுக்கான தேவை குறைந்துவிட்டது, மோட்டார் இன்ஷூரன்ச் பிரீமியம் அதிகரித்தது, உயர்ந்து வரும் எரிபொருள் விலை என பஞ்சப் பாட்டு பாடுகிறார்கள் மாருதி சுஸிகி (Maruti Suzuki) நிறுவனத்தினர்.