டெல்லி: ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா விதித்திருந்த தடையை இந்தியாவிற்கு மட்டும் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதம் வரையிலும் கெடு தளர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவில மாற்றம் இருக்காது என்று சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெற்று வருவதால் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி பொறுப்பேற்கும் வரையிலும் பெரிதாக எந்த முடிவும் எடுக்க முடியாத சூழல் நிலவுவதால், அமெரிக்கா இந்த ஒத்தி வைப்பு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு கடந்த ஏப்ரல் இறுதி வரை மட்டுமே இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததை அடுத்து மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு இந்தியா முயற்சி செய்துகொண்டு இருந்த வேளையில் அமெரிக்கா இந்த தற்காலிக அனுமதியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா அமெரிக்கா
அமெரிக்கா... இந்த ஒற்றை வார்த்தையைக் கேட்டால் அனைத்து நாடுகளுக்கும் சற்று உதறல் எடுக்கத்தான் செய்யும். தான் மட்டுமே இந்த உலகத்தின் அசைக்க முடியாத சக்தியாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு அனைத்து நாடுகளையும் தன் விரல் அசைவுக்கு ஏற்ப ஆடும் பாவைக் கூத்து பொம்மையாக அநியாயத்திற்கு அனைத்து நாடுகளையும் ஆட்டி வைத்துக் கொண்டு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
அமெரிக்காவை எதிர்த்தால் என்னாகும்
தான் சொல்லும் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நாடுகளை அரவணைத்துச் செல்வதும், அதற்கு மாறாக முறுக்கிக்கொண்டு திரியும் நாடுகளை எதிரியாக நினைத்து அந்த நாடுகளை உலக வரைபடத்திலேயே இல்லாமல் செய்வது வரை அனைத்தையும் கனகச்சிதமாக செய்து முடிப்பதில் அமெரிக்காவுக்கு நிகர் அமெரிக்காவே.
கச்சா எண்ணெய் உற்பத்தி நாடகம்
கச்சா எண்ணெய் வளம் மிக்க நாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தன் விருப்பத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதும் குறைப்பதுமாக நாடகமாடிக்கொண்டு கச்சா எண்ணெய் விலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்ப ஏற்றி இறக்கிக்கொண்டு இருக்கிறது.
பொருளாதாரத் தடை
ஈரானின் கதையும் அப்படித்தான். தான் சொல்வதற்கு கட்டுப்படவில்லை என்ற ஒரே காரணத்தால் அமெரிக்கா ஈரான் மீதும் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவருக்கு முன்னர் அதிபராக பாரக் ஒபாமா இருந்தபோது ஈரானுடன் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்தார். அத்தோடு நில்லாமல் தான் தயாரித்த அணு ஆயுதங்களை தீவிரவாத குழுக்களுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் அளித்து உதவுவதாகக் கூறி ஈரான் மீது பொருளாதாரத் தடையை விதித்தார்.
மாற்று வழிதான் என்ன
ட்ரம்ப்பின் தடை உத்தரவால் ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் அதிர்ச்சியடைந்தன. அதில் இந்தியாவும் அடக்கம். ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு பதிலாக மாற்று வழியை தேடுவதற்கு இறக்குமதி நாடுகள் அவகாசம் கேட்டன.
கெடு முடிந்தது
இறக்குமதி செய்யும் நாடுகளின் கோரிக்கையை அடுத்து, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவை படிப்படியாக குறைத்துக் கொள்வதற்கு ட்ரம்ப் 6 மாதங்கள் அவகாசம் அளித்தார். கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய இந்த கால அவகாசம் நடப்பு மே மாதம் 2ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.
கச்சா எண்ணெய் பற்றாக்குறை அபாயம்
ஒரு வேளை அமெரிக்காவின் கெடுபிடிக்கு பயந்து கொண்டு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தினால், இந்தியாவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 10 சதவிகிதம் வரையிலும் ஈரான் பூர்த்தி செய்து வரும் நிலையில், அந்நாட்டின் கச்சா எண்ணெயை இழந்து விட்டால் இந்தியாவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும்.
எல்லாம் 23ஆம் தேதிக்கு அப்புறம் தான்
அமெரிக்கா விதித்திருந்த காலக்கெடு மே 2ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டாலும், காலக்கெடுவை மேலும் நீட்டிக்கும் என்று இந்தியாவும் எதிர்பார்த்தது. தற்போது நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று வருவதால், தேர்தல் முடிந்து வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதன் பின்னர் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் தான் கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து கொள்கை முடிவுகள் எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது.
கயானாவிலிருந்து இறக்குமதி
ஈரான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு பதிலாக தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானா நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது பற்றி பரிசீலித்து வருவதாகவும், இது பற்றிய பெட்ரோலியத்துறை விரிவான திட்டத்தை வைத்திருப்பதாகவும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார தெரிவித்துள்ளார்.
நெருக்கடி தரமாட்டோம்
இந்தியாவின் தற்போதைய நிலைமையை நன்கு உணர்ந்துகொண்ட அமெரிக்காவும், தற்போதைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பாக இந்தியாவுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.
புதிய ஆட்சி வரட்டும் பார்க்கலாம்
அமெரிக்காவின் திடீர் முடிவு குறித்து விளக்கிய அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்புல் ரோஸ், கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான சில முக்கிய முடிவுகளை இந்தியாவில் புதிய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் எடுப்போம் என்று கூறினார். இதனால் ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா விதித்த தடையில் இருந்து இந்தியாவுக்கு மட்டும் வரும் ஜூன் மாதம் வரையிலும் விலக்கு அளிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
வரைமுறை உண்டு தானே
இந்திய அமெரிக்க வர்த்தக ஒத்துழைப்பு குறித்து கருத்து தெரிவித்த வில்பர் ரோஸ், அமெரிக்க நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மேக் இன் இந்தியா மற்றும் பிற திட்டத்திற்கும் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. ஆனால் இங்கிருந்து எங்களுக்கு சாதகமான ஒத்துழைப்பு எதுவும் வரவில்லையே. எதற்கும் ஒரு வரைமுறை உண்டு அல்லவா என்று தத்துவம் பேசினார்.
முடியாது முடியாது
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று இது பற்றி பேசிய அமெரிக்க அரசின் செயலாளர் மைக் போம்பியோ, இனிமேல் எந்த நாட்டுக்கம் பொருளாதாரத் தடையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என அதிபர் ட்ரம்ப் ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாக தெரிவித்தார்.
வர்த்தகப் பற்றாக்குறை தான் காரணமா
அமெரிக்கா தற்போது கச்சா எண்ணெய் விசயத்தில் பின்வாங்குவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர பைக் மற்றும் இதர பொருட்களுக்கும் 50 சதவிகிதம் வரையிலும் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. அத்தோடு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக உள்ளதால் வர்ததக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.