ஃப்ராங்க்பர்ட்: நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதன் பொருட்டு 2023ஆம் ஆண்டுக்குள் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக ஜெர்மன் நிறுவனமான சீமென் அறிவித்துள்ளது. காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கச்சா எண்ணெய் பிரிவுகளில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
பழையன கழிதலும் புதிய புகுதலும் என்ற பழமொழியை இப்போது பல நிறுவனங்கள் கையில் எடுத்துக்கொண்டு பழைய ஊழியர்களை வெளியேற்றி விட்டு புதிய ஊழியர்களை வேலைக்கு நியமித்து வருகின்றனர்.
நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னிட்டு ஆட்குறைப்பு செய்துவிட்டு அதற்கு பதிலாக புதிய துறைகளில் ஈடுபட்டு வளர்ச்சியை எட்டுவதற்கு சீமென் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஜெர்மனியின் புகழ்பெற்ற பல்துறை செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் நிறுனம். பொறியியல், காற்றாலை மின் உற்பத்தி, கச்சா எண்ணெய் உற்பத்தி, கட்டுமானத் துறை, வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி, மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி, ரயில்வே கோச் மற்றும் தகவல் தொழில் நுட்பம் என அனைத்து துறைகளிலும் இறங்கி வெற்றி பெற்றுள்ள நிறவனமாகும்.
சீமென் நிறுவனத்தின் உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் சுமார் 3.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்நிறுவனத்தின் சமீபகால வளர்ச்சியானது உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக எதிர்பார்த்த அளவில் இல்லாமல் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் தொடர்ச்சியாக ஆட்குறைப்பு செய்த வண்ணம் உள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டில் விஷன் 2020 என்ற பெயரில் தனது பல்வேறு கிளைகளில் நிர்வாகப் பிரிவுகளில் பணியாற்றிய சுமார் 20 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது. நடப்பு 2019ஆம் ஆண்டிலும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 10 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளதாக சீமென் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல் கடந்த 2017ஆம் ஆண்டிலும் மறுசீரமைப்பு என்று சொல்லிவிட்டு சுமார் 6 ஆயிரத்து 900 பேரை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் வருவது போல், சீமென் நிறுவனமும் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டு உள்ளது.
காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க இந்நிறுவனம் தொடர்ந்து போராடி வருகிறது. உற்பத்தியை அதிகரித்து லாபத்தை கூட்டும் வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முன்வந்துள்ளதாக தெரிகிறது. ஆட்குறைப்பு செய்தி வெளியான உடன் இந்நிறுவனத்தின் பங்குவிலை ஐரோப்பிய பங்குச் சந்தையிலும் அமெரிக்க பங்குச் சந்தையிலும் சுமார் 4.6 சதவிகிதம் உயர்ந்தது.
சீமென் நிறவனத்தின் எரிவாயு மற்றும் மின் உற்பத்தித் துறை தற்போது கடும் சரிவை சந்தித்து வருகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மின் உற்பத்திக்கு புதுப்பிக்கத்தக்க சூரிய மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை மேற்கொண்டு அதன் மூலம் தங்களின் தேவையை பூர்த்தி செய்துகொள்வதால், இந்நிறுவனத்தின் எரிவாயு மற்றும் மின் உற்பத்தித்துறை தொடர்ந்து கடும் சரிவை சந்தித்து வருகிறது.
தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கையையும் எரிவாயு மற்றும் மின் உற்பத்தித் துறையில் தான் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. சீமென் நிறுவனத்தின் போட்டியாளர்களான அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிகல் மற்றும் ஜப்பானின் மிட்சுபிஷி ஆகிய நிறுவனங்களும் இத்துறையில் உற்பத்தி சரிவை சந்தித்து வருகின்றன.
சீமென் நிறுவனம் தன்னுடைய வளர்ச்சிக்காக வரும் 2023ஆம் ஆண்டுக்குள் சுமார் 10400 ஊழியர்களை வெளியேற்றி விட்டு அதன் பின்பு, புதிதாக 20500 நபர்களை பணியில் அமர்த்துவதற்காக சுமார் 17191 கோடி ரூபாயை செலவழிக்க முடிவெடுத்துளளதாக தெரிகிறது.