பெங்களூரு: ஏப்ரல் மாதத்திய பணவீக்க விகிதம் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகமாக இருக்கும் என்றும், உணவுப் பொருட்களின் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
நடப்பு ஆண்டில் கோடை மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் விவசாய விளைபொருட்களின் விலை உயர்ந்து அதன் தாக்கம் உணவுப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும் என்பதால் ஏப்ரல் மாத மொத்த பணவீக்க விகிதம் உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதால் பெட்ரோலியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கும் தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளதால் மாற்று வழியை யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இதன் காரணமாக விலை வாசியும் ஏறிக்கொண்டே செல்கிறது.
ரெப்போ வட்டி விகிதம்
பணவீக்க விகிதம் உயரக்கூடும் என்று முன்கூட்டி உத்தேசமாக கணித்தே ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழு வரும் ஜூன் மாதத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் குறைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 0.25 புள்ளிகளும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மீண்டும் 0.25 புள்ளிகளையும் ரிசர்வ் வங்கி குறைத்தது.
ஏப்ரல் மாத மொத்த பணவீக்கம்
இந்நிலையில் ஏப்ரல் மாதத்தின் மொத்த பணவீக்க விகிதம் கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் அதிகரிக்கக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால இலக்கான 4 சதவிகித அளவிலேயே பணவீக்க விகிதத்தை கட்டுக்குள் வைத்திருக்க நினைத்தாலும் அதையும் தாண்டி பணவீக்கம் உயரக்கூடும் என்றும் ராய்ட்டர்ஸ் கணித்துள்ளது.
சில்லறை பணவீக்கம்
ராய்ட்டர்ஸ் நிறுவனம் கடந்த 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையிலும் நடத்திய கருத்துக் கணிப்பில் சில்லறைப் பணவீக்க விகிதம் சுமார் 2.97 சதவிகிதமாக உயரக்கூடும் என்று தெரியவந்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தை விட 0.11 சதவிகிதம் கூடுதலாகும். மார்ச் மாதத்தில் சில்லறைப் பணவீக்க விகிதம் 2.86 சதவிகிதமாக இருந்தது.
இலக்கு நிர்ணயம்
முந்தைய மாதத்தின் விலை உயர்வு ஏப்ரல் மாதத்திலும் தொடரும் என்று நாங்கள் கணித்திருந்தோம். அதற்கேற்பவே தற்போது சில்லறைப் பணவீக்க விகிதமும் முன்னர் கணித்த அளவைக் காட்டிலும் மிதமிஞ்சி அதிகரித்துள்ளதாக சிட்டி (Citi) ஆய்வு நிறுவன பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கச்சா எண்ணெய் விலை ஏற்றம்
கடந்த ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததாலும், லோக்சபா தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும், பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தில் சற்று அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து பணவீக்க விகிதம் அதிகரித்து வந்த போதிலும், லோக்சபா தேர்தல் முடிந்து புதிய ஆட்சி பொறப்பேற்ற பின்னரே இது பற்றிய ஒரு ஸ்திரமான முடிவெடுக்க முடியும் என்றும் ஆயினும் அது சவாலானதாகவே இருக்கும் என்றம் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் (Organization of Petroleum Exporting Countries-OPEC) அமைப்பு ஈரான் மற்றும் வெனிசூலா நாடுகளின் மீது கட்டுப்பாடு விதித்தது. இதன் காரணமாக உள்நாட்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்ததால் உள்நாட்டில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க முக்கிய காரணமாகும்.
ரிசர்வ் வங்கி நடவடிக்கை
இதன் தாக்கம் பெட்ரோலியப் பொருட்களின் மீது எதிரொலித்தது. தொடர்ச்சியா உணவுப் பொருட்களின் போக்குவரத்துச் செலவும் கூடியது. இதனாலும் பணவீக்கம் அதிகரிக்க காரணமாகும் என்று ஐஎன்ஜி (ING) நிறுவனத்தின் ஆசிய பொருளாதார நிபுணர் பிரகாஷ் சக்பால் தெரிவித்தார்.
நடப்பு ஆண்டின் இரண்டாம் பருவத்தில் பணவீக்க விகிதம் உயர ஆரம்பிக்கும், அப்போது ரிசர்வ் வங்கி பணவீக்க விகிதத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கக் கூடும் என்று மிஸூகோ நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் விஷ்ணு வர்த்தன் தெரிவித்தார்.