வாஷிங்டன் : அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமான வர்த்தக ஒப்பந்த கெடு முடிந்த போதிலும் கூட, வார்த்தை ஒப்பந்தம் போடும் பேச்சு வரையில் தொடரும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளாராம்.
இந்த நிலையில் அமெரிக்கா சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது சில நாட்கள் முன்பு முதல் அமெரிக்கா 25% வரி விதித்துள்ளது. இது முன்னர் அது 10 விழுக்காடாக இருந்தது கவனிக்கதக்கது.
இதோடு இன்னும் 325 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது அமெரிக்கா மீண்டும் வரி விதிக்கும் அபாயம் நிலவி வருகிறதாம். இது குறித்து அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி கூறுகையில் எஞ்சிய பொருட்களுக்கு வரியை உயர்த்த, டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். அவர் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களின் வரி உயர்வு, அமலுக்கு வந்துள்ளது. தற்போது, புதிய உத்தரவால், மேலும், 325 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களின் வரி உயர்த்தப்பட உள்ளது. வரி உயர்வு விபரம், ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
சுமூக தீர்வு காண பேச்சு வார்த்தை
இந்த நிலையில் இது குறித்து சீனா கூறுகையில், கூடுதல் வரிவிதிப்பு குறித்து வருத்தம் தெரிவித்த சீனா, இது குறித்து அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இதற்கான சுமூக தீர்வு காணப்படும். அதனைக் கையாளுவதற்கான நடவடிக்கைகளும் ஆழமான பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றது என்கிறதாம்.
துணைத் தலைவர் ஆதரவு
இந்த நிலையில் முதல்நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை தொடர இருப்பதாகக் கூறப்பட்ட வேளையில் இந்தக் கூடுதல் வரிவிதிப்பு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் நியாயமற்ற வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடைமுறைகளைச் சமாளிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறோம் என்று உபகரணத் தயாரிப்புச் சங்கத்துக்கான அரசாங்க விவகாரங்களின் துணைத் தலைவர் கிப் ஐடிபெர்க் ஏற்கனவே கூறியிருந்தார்.
வேலை வாய்ப்புகள் பாதிக்கும்
மேலும் கூடுதல் வரிவிதிப்பு காரணமாக ஏற்றுமதிகள் குறைவதுடன் உபகரணத் தயாரிப்புத் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 400,000 வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றும். இதனால் அமெரிக்க வர்த்தகங்கள், விவசாயிகள், சமூகங்கள், குடும்பங்கள் ஆகியவை சீனாவின் எதிர் நட வடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வரி விதிப்பால் பெரிதும் பாதிப்பு
இதோடு தளவாடங்கள், விளக்குகள், வாகன உதிரி பாகங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் போன்றவை அதிக வரிவிதிப்புக்கு உள்ளான பொருட்களின் பட்டியலில் உள்ளன. மேலும் இணையக் கட்டமைப்புக் கருவிகள், தரவு கடத்தும் கருவிகள், மின்னணுவியல் சுற்று போன்ற பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கூடுதல் வரி விதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன..
சீனா –அமெரிக்க வர்த்தக உறவு வலுவாக அமையும்
இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா உடனான சுமுக பேச்சுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். அதுபோல, சீனாவும், ‘அமெரிக்கா உடனான பேச்சு வார்த்தை முடியவில்லை எனவும் கூறியுள்ளது. இதோடு சீனா அமெரிக்கா வர்த்தக உறவு வலுவாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளதாம். என்னதான் நடக்குதுன்னு பார்ப்போமே.
இந்தியாவுக்கும் இதே நிலைதானா?
இந்த நிலையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவும் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்வியைக் கேட்டால், கொஞ்சம் வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி உயர்த்துவோம் என்று சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதமே அமெரிக்கா அறிவித்தது. இந்த நிலையில் இன்று வரை இந்தியா அதைத் தள்ளிவைத்தது மட்டுமல்லாமல் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட பொருட்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலும் பூகம்பம் இருக்கு
இந்த நிலையில் இந்த வாரம் இந்தியா வந்த அமெரிக்க வர்த்தக துறை செயலாளர், இந்தியா சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தை மீறி இலவசமாகப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இது ஏற்புடையதல்ல என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா உடனான வர்த்தகம் பற்றிப் பேசும் போதெல்லாம், அமெரிக்க ஆட்டோமொபைல் பொருட்கள் மீது இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது. அதைக் குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறியும் வருவது கவனிக்கதக்கது. அப்படின்னா இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இந்தியாவிலும் பூகம்பம் இருக்கு.