வாஷிங்டன்: இறக்குமதி வரியை குறைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்து போடவேண்டும், இல்லாவிட்டால் அப்புறம் இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தை நடத்துவது என்பது மிக மோசமான அனுபவமாக இருக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு மிரட்டும் தொனியில் உத்தரவிட்டுள்ளார். 2020 ல் மீண்டும் அதிபரானால் சீனாவிற்கு 34.97 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி வரி விதிப்பேன் என்று டிரம்ப் எச்சரித்துள்ளதால் அவர் மீண்டும் அதிபராக வரக்கூடாது என்று சீனா யாகம் நடத்தினாலும் ஆச்சரியமில்லை.
இரு தரப்புக்கும் இடையில் இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கும்போதே, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை 10 முதல் 25 சதவிகிதம் வரையிலும உயர்த்தி உத்தரவிட்டார். இதனால் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களுக்கு கூடுதலாக வரி செலுத்தவேண்டிய கட்டாயம் சீனாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் எரிச்சலான சீனா பேச்சுவார்த்தைய முறித்துக்கொண்டு பாதியில் வெளியேறியது. இருந்தாலும் ஒப்பந்தம் போடும் வரையிலும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும் என்று சீன அதிபர் கூறினாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் இப்பொழுது ஒப்பந்தத்தை விரைவில் முடிவு செய்யுமாறு மிரட்டும் தொனியில் சுறியுள்ளார்.
ஈகோ யுத்தம்
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது கிராமங்களில் பேசப்படும் சொலவடையாகும். ஆனால் இங்கு இரண்டு வல்லரசுகளின் தலைவர்கள் ஆடும் கூத்தால் உலக நாடுகள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் சீன அதிபர் சீ ஜின்பிங்குக்கும் இடையில் நடக்கும் ஈகோ யுத்ததில் அனைத்து நாடுகளில் வர்த்தகமும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.
வெறும் பேப்பர்தான்
அமெரிக்காவின் பலமே அதன் டாலர் மதிப்பு தான். உலக நாடுகள் அனைத்துமே தங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கு டாலர் மதிப்பிலேயே பரிமாற்றம் செய்யவேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டதால் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து அப்படியே ஆகட்டும் என்று சொல்லி வர்த்தகத்தையும் நடத்திக்கொண்டு வருகின்றன. இல்லாவிட்டால் அமெரிக்க டாலர் வெறும் பேப்பர் மட்டுமே. டாலரில் உள்ள வாசகத்தை படித்து பார்ப்பவர்களுக்கு அது நன்றாக புரியக்கூடும்.
அந்நியச் செலாவணி இழப்பு
இப்பொழுது நம் விசயத்திற்கு வருவோம். பெரும்பாலான நாடுகளுக்கு அமெரிக்கா தனது பொருட்களை ஏற்றுமதி செய்வதால் அதிக அளவில் அந்நியச் செலாவணி வருவாய் வந்தாலும், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் விசயத்தில் இது தலைகீழாக மாறிவிட்டது என்று சொல்லலாம். இதுதான் ட்ரம்புக்கு கடுப்பை கிளப்பி இருக்கிறது.
1.54 லட்சம் கோடி பற்றாக்குறை
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் மதிப்பைக் காட்டிலும் இறக்குமதி செய்யும் மதிப்பு கூடுதலாக உள்ளதால் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டு அந்நியச் செலாவணி இருப்பு கையைவிட்டுப் போகிறது. கடந்த 2018ஆம் ஆண்டில் இந்தியாவுடன் மேற்கொண்ட ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் சுமார் 1.54 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இறக்குமதி வரி குறைவு
நமக்காவது பரவாயில்லை. ஆனால் சீனாவுடன் நடத்திய வர்த்தகத்தில் கிடைத்த பற்றாக்குறையானது சுமார் 34.97 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப் எதனால் இந்த பற்றாக்குறை ஏற்படுகிறது என்று ஆராய்ந்ததில் இந்தியா மற்றும் சீனா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி மிகக்குறைவாகவே விதிக்கப்படுகிறது என்றும், ஆனால் இந்தியாவிலும் சீனாவிலும் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு மட்டும் அதிக வரி விதிக்கப்படுவதை அறிந்த உடன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.
வரி உயர்வு இப்போதைக்கு இல்லை
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் பைக் உள்ளிட்ட 29 பொருட்களுக்கு 30 முதல் 70 சதவிகிதம் வரையிலும் கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதை குறைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொண்டார். தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், வரும் 16ஆம் தேதி வரையிலும் இறக்குமதி வரியை உயர்த்தமாட்டோம் என்று இந்தியாவும் உறதி அளித்துள்ளது. இதனால் நமக்கு கவலையில்லை.
பேச்சு வார்த்தைக்கு தயார்
சீனாவும் அப்படித்தான். கம்யூனிச நாடான சீனா உலகின் உற்பத்தி சாலையாக நம்பப்படுகிறது. மேலும் தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதியையே பெரிதும் நம்பியுள்ளது. அமெரிக்கா உடனான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் பேச்சுவார்த்தையின் மூலமாகவே இறக்குமதி வரியை குறைக்க தீவிர முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பேச்சுவார்த்தை தோல்வி
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சீன துணை அதிபர் லியூ ஹீ தலைமையிலான குழு கடந்த 10ஆம் தேதி அமெரிக்கா சென்று, அங்கு அமெரிக்க வர்ததக பிரதிநிதி ராபர்ட் லைட்திசர் மற்றும் கருவூலக செயலாளர் (Treasury Secretary) ஸ்டீவன் ம்நுசின் (Steven Mnuchin) உள்ளிட்ட உயரதிகாரிகளை தலைநகர் வாஷிங்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இரண்டு நாட்கள் நடைபெற்ற பேச்சு வார்த்தை இறுதியில் தோல்வியில் முடிந்தது.
தடாலடி வரி உயர்வு
பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம், கடந்த வாரம் ட்ரம்ப் திடீரென, சீனா சொன்னபடி நடக்காததால் வேறு வழி இல்லாமல் நாங்கள் இறக்குமதி வரியை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று சொல்லி விட்டு தடாலடியாக சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய 5700 பொருட்களுக்கு வரியை 10 முதல் 25 சதவிகிதம் வரையிலும் உயர்த்தி உத்தரவிட்டார். இதனால் எரிச்சலடைந்த சீனா பேச்சுவார்த்தைய முறித்துக் கொண்டு வெளியேற வேண்டியதாகிவிட்டது.
மீண்டும் பேசலாம்
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும் இரு நாடுகளுக்குள் உறவு நல்ல விதமாகவே உள்ளதாக சீன அதிபர் சீ ஜின்பிங் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பேச்சுவார்த்தை நடத்தவு எப்போதும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் எச்சரிக்கை
சீன அதிபர் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு தருவதாக சொன்னாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இறக்குமதி வரியை குறைக்க சீனா ஒப்புக்கொண்டு விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பின்னர் வருத்தப்படிவேண்டியதிருக்கும். இப்போதே அவர்கள் பேச்சுவார்த்தையின் மூலம் வழிக்கு வந்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
நான் ஒரு தடவை சொன்னா
ஒரு வேளை வரும் 2020ஆம் ஆண்டில் அதிபர் தேர்தலில் நான் மீண்டும் வெற்றி பெற்று அதிபரானால் அவர்களுக்கு கஷ்டகாலம் தான் என்று சொல்வேன் அவர்கள் இப்பொழுது அமெரிக்க பொருட்களுக்கு 7.6 லட்சம் கோடி ரூபாய் இறக்குமதி வரி விதித்திருக்கிறார்கள். ஆனால் 2020அம் ஆண்டில் நான் மீண்டும் அதிபரானால் 34.97 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி வரி விதிப்பேன் என்று எச்சரிக்கும் விதத்தில் கூறினார்.