டெல்லி : டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக மொபைல் வாலட்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்திருந்தது. இந்த நிலையில் இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாம்.
மார்ச் மாதத்தில் மட்டும் இதன் மதிப்பு 12 சதவிகிதம் அதிகரித்து ரூ.15,990 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதோடு கடந்த மார்ச் மாதத்தில் 384.89 மில்லியன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு இருந்தனவாம். இதுவே பிப்ரவரி மாதத்தில் 345.03 மில்லியன் பரிவர்த்தனைகள் மட்டுமே செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு ரூ.14,279 கோடியாகவும் இருந்தது.
கடந்தாண்டு பண பரிவர்த்தனை 30% அதிகம்
இதே கடந்த 2018 - 2019ஆம் ஆண்டில் 30% சதவிகிதம் அதிகரித்து, இதன் மதிப்பு ரூ.1.83 டிரில்லியன் ஆக இருந்தது. இதே 2017 - 2018ஆம் ஆண்டு ஒப்பிடும் போது பரிவர்த்தனைகளின் வளர்ச்சி 37 சதவிகிதம் அதிகரித்து 4.13 பில்லியன்களாக அதிகரித்துள்ளது.
பண பரிவர்த்தனைகள் அக்டோபரில் தான் அதிகம்
இந்த மொபைல் பயன்பாட்டின் மூலம் பணபரிவர்த்தனை செய்வது கடந்த அக்டோபரில் அதிகளவு இருந்தது. பின்னர் இது கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 368.45 மில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 18,786 கோடி ரூபாயாக இருந்தது.
ஆர்.பி.ஐ ஊக்குவிப்பு
ஆர்.பி.ஐ இந்த மொபைல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பல விதமான மொபைல் வாலட்டுகளிடையே பணபரிவர்த்தனை செய்து கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை தற்போதுள்ளதை விட, அடுத்த 5 ஆண்டுகளில் 5 மடங்கு உயர்ந்து ஒரு லட்சம் கோடி டாலரை எட்டும் என ஏற்கனவே ஒரு அறிக்கையில் வெளியிடப்பட்டது கவனிக்கதக்கது.
அடுத்த வாலட்களுக்குள் பணம் செலுத்திக் கொள்ளலாம்
இதனை கருத்தில் கொண்டு ஒரு மொபைல் வாலட்டில் இருந்து மற்றொரு நிறுவன வாலட்டிற்கு பண பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. பேடிஎம், மொபிவிக், போன்பே போன்ற நிறுவனங்கள் விருப்பப்பட்டால் மற்ற நிறுவன வாலட்டுகளுக்கு பண பரிவர்த்தனை செய்து கொள்ள பயனாளர்களை அனுமதிக்கலாம் என இந்திய ரிசர்வ் வங்கி கூறியிருந்தது கவனிக்கதக்கது.