சான் பிரான்சிஸ்கோ: வரும் ஆன்லைன் ஆர்டர்களுக்கு ஏற்ப பேக்கிங் செய்வதற்காக புதிய மெஷினை அமேசான் வாங்கி இருப்பதால், ஆயிரக்கணக்கான பேக்கிங் தொழிலாளர்களுக்கு வேலை பறிபோகப்போகிறது.
ஆட்டாமேசன் தொழில்நுட்ப உதவியுடன், அதாவது எல்லாவற்றையும் மனிதனுக்கு பதிலாக புதிய மெஷினை வைத்து செய்யும் பழக்கம் காலம் காலமாக மாறிவருகிறது. இதனால் ஒருபுறம் பல ஆயிரம் பேர் வேலைகளை இழந்து வருகிறார்.
மறுபுறம் நேர்த்தியாக வேலை இருப்பதாகவும், பணம் மிச்சமாவதாகவும் தொழிற்சாலை முதலாளிகள் மகிழ்கிறார்.
பேக்கிங் தொழில்
அந்த வகையில் அமேசான் நிறுவனம் ஆன்லைனில் வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பேக்கிங் செய்வதற்கு என்றே மிகப்பெரிய தொழிற்சாலைகளை 55 இடங்களில் நடத்தி வருகிறது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள்.
நிமிடத்தில் பாக்ஸ்
இந்நிலையில் பேக்கிங் செய்வதற்கு என்றே நவீன மெஷின் ஒன்றை அமேசான் இறக்கி உள்ளது. இந்த மெஷின் பொருட்களை ஸ்கேன் செய்து பேக்கிங் செய்து நிமிடத்திற்கு பல பாக்ஸகளை உருவாக்கி அதனை சங்கிலி தொடர்போன்ற அமைப்பின் வழியாக இறக்கி போட்டுக்கொண்டே இருக்குமாம்.
700 பேர் போதும்
முதல்கட்டமாக 12க்கும்மேற்பட்ட தொழிற்சாலைகளில் அமேசான் நிறுவனம் இரண்டு மெஷின்களை இறக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 1300 பேர் வேலைகளை இழப்பார்கள். வெறும் 700பேர் இருந்தாலே 2000 பேரின் வேலைகளை செய்ய முடியும் என்பதால் அமேசான் நிறுவனம் மெஷினை இறக்க உள்ளது. 2வருடத்தில் மிஷினுக்கு போட்ட காசை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஒருமில்லியன் டாலர் மதிப்புள்ள அந்த மிஷினை வாங்கப்போகிறது.
பலஆயிரம் வேலை இழப்பு
இதன் மூலம் தொழிலாளர்களுக்கான ஊதியம் குறைவு, நிறைய பாக்ஸ்களை விரைவாக உருவாக்கி அதிகப்படியான லாபம் பெற முடியும் என்று கணக்கு போட்டுள்ளது அமேசான். ஆனால் விரைவான டெலிவரிக்காவே மெஷின்களை இறக்குவதாகவும், புதிய வேலைகள் உருவாகும் என்றும் அமேசான் விளக்கம் தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் ஏற்கனவே அமெரிக்காவில் டெலிவரி செய்வதற்கு டிரான்களையும், தானியங்கி வாகனங்களையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாகவும் பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.