மும்பை: ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியும், தலைமை துணை நிர்வாக அதிகாரியுமான அமித் அகர்வால் தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக இந்நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
அமித் அகர்வால் கடந்த 2015ஆம் ஆண்டில் தலைமை நிதி அதிகாரியாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர் பொறுப்பு தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு 9ஆம் தேதி வரையிலும் இருந்துள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், சுமார் 10ஆயிரம் கோடி ரூபாய் கடன் மற்றும் ஊழியர்கள், பைலட்களின் சம்பள பாக்கி போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி முதல் தனது விமான சேவையை முற்றிலும் நிறுத்திக்கொண்டது. இதனால் சுமார் 38000 ஊழியர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
இவர்களில் சுமார் 500 பேர்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வேலைக்கு எடுத்துக்கொண்டது. இன்னும் சில பேர் சர்வதேச விமான நிறுவனங்களுக்கு பறந்து விட்டனர். மேலும் 500 பேர்கள் வரையிலும் தாஜ் ஹோட்டல் வேலைக்கு அமர்த்திக்கொண்டது. ஏர் இந்தியாவும் சில பேர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எஸ்பிஐ தலைமையிலான 26 வங்கிகளின் கூட்டமைப்பு எடுத்து வருகிறது. ஆனாலும் யாரும் இந்நிறுவனத்தின் வாசலைக்கூட எட்டிப்பார்க்க விரும்பவில்லை.
இந்நிறுவனத்தின் 24 சதவிகித பங்குகளை தன் வசம் வைத்துள்ள எத்திகாட் ஏர்வேஸ் நிறுவனத்தை நடத்துவதற்கு ரூ.1700 கோடி கொடுக்க முன்வந்தாலும் விமான சேவையை மீண்டும் நடத்துவதற்கு குறைந்தது 15ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்பட்டது. இதனால் மாற்று திட்டத்தை செயல்படுத்துவதற்கு வங்கிகள் கூட்டமைப்பு முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்த கவுரங் ஷெட்டி தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அறிவித்தார்
தற்போது இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியும் தலைமை துணை நிர்வாக அதிகாரியுமான அமித் அகர்வால் தனிப்பட்ட காரணங்களுக்காக சொந்த விருப்பத்தின் பேரில் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமித் அகர்வால் கடந்த 2015ஆம் ஆண்டில் தலைமை நிதி அதிகாரியாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர் பொறுப்பு தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு 9ஆம் தேதி வரையிலும் இருந்துள்ளார். அதன்பின்னர் 2017ஆம் ஆண்டிலிருந்து துணை தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வந்துள்ளார்.
இது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம், மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில், இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகவும் துணை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்து வந்த அமித் அகர்வால் மே மாதம் 13ஆம் தேதியன்று தனது தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக பதவி விலகிவிட்டதாக தெரிவித்துள்ளது.