பெய்ஜிங்: இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த ஆண்டில் சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்க அரசு கணிசமாக உயர்த்தியது. இதன் எதிரொலியாக, சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை உயர்த்தி அறிவித்தது.
இதில் சுமூக முடிவை எட்டுவதற்காக, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வந்ததால் உடன்பாடு எட்டப்படும் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், 10 சதவிகிதமாக இருந்துவரும் சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை, கடந்த வாரம் அமெரிக்க அரசு 25 சதவிகிதமாக உயர்த்தியது.
சீனா பதிலடி
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இருப்பினும் அசராத சீனா அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கான வரி உயர்வு
அதாவது அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை சீன அரசு உயர்த்தியுள்ளது. ரூ.42 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு சீனா இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளது. சீனாவின் நிதித்துறை அமைச்சகம் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தீர்வாகாது
அமெரிக்காவுடன் சீனா உடனே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், மேலும் வரி உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக பேசிய சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் செங் சுவாங் "வரிகளை உயர்த்திக்கொண்டே போவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சீனா வர்த்தகப்போரை விரும்பவில்லை.
அடிபணிய மாட்டோம்
அதே நேரத்தில் சீனா வர்த்தகப்போருக்கு அஞ்சவும் இல்லை. யாரேனும் எங்கள்மீது வர்த்தகப்போரை தொடுத்தால் நாங்கள் இறுதிவரை போராடுவோம். வெளியில் இருந்து வருகிற எந்தவொரு நிர்ப்பந்தத்துக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம்.
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
எங்கள் சட்டப்பூர்வமான உரிமைகளை, நலன்களை பாதுகாப்பதற்கான தீர்வும் தகுதித்திறனும் எங்களுக்கு உள்ளது" என குறிப்பிட்டார். மேலும் இதில் சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை டிரம்ப் தவறாக மதிப்பிட்டு விட வேண்டாம் என்றும் சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - சீனா இடையிலான இந்த வர்த்தகப்போர் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.