டெல்லி: தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக 5 நாட்கள் தாமதமாகவே பெய்யும் என்றும், ஜூன் 6ம் தேதி முதல் பருவமழையை எதிர்பார்க்கலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு மே 30ஆம் பருவமழை துவங்கிவிட்டது. 2018ல் மே 29ம் தேதி பருவமழை துவங்கியது. இம்முறை ஜூன் 6ல் தான் பருவமழை தொடங்கும் என்றும் கணித்துள்ளது.
இந்த வாரக் கடைசியில் அல்லது அடுத்த வார மத்தியில் அனைவரும் எதிர்நோக்கும் தென்மேற்கு பருவமழை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் துவங்கும் என்றும், பின்னர் படிப்படியாக நகர்ந்து வந்து கேரளாவில் வரும் ஜூன் முதல் வாரத்தில் மழை துவங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னிநட்சத்திரம்
கடந்த மே 4ஆம் தேதி மண்டையை பிளக்கும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் ஆரம்பித்து உக்கிரம் அடைந்து வருகிறது. வெய்யிலின் உக்கிரத்தை தாங்க முடியாமல் பெரும்பாலானவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். ஆங்காங்கே சில பகுதிகளில் கோடை மழை பெய்தாலும் வெய்யிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கோடைமழை
நடப்பு ஆண்டில் கோடை மழையும் எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. வழக்கத்தை விட 24 சதவிகிதம் குறைவாகவே பெய்துள்ளது. இதன் காரணமாக விவசாய விளைச்சலும் குறைந்துள்ளது. இதன் தாக்கம் உணவுப் பொருட்களின் மீது எதிதொலித்து பணவீக்க விகிதமும் உயர்ந்து வருகிறது.
எனவே தான் அனைவரும் தென்மேற்கு பருவ மழையாவது விரைவில் துவங்க வேண்டும் என்றும் வழக்கத்தை விட அதிகமாக பெய்யவேண்டும் என்றும் வேண்டிக்கொள்கின்றனர்.
ஸ்கைமெட் கணிப்பு
தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் (Skymet) இந்த ஆண்டில் தென்மேற்கு பருவ மழை இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. அந்தமான நிக்கோபார் தீவுகளில் துவங்கி பின்னர் படிப்படியாக நகர்ந்து கேரளாவின் கடற்கரையோரம் வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் மழை ஆரம்பித்து தீவிரமடையும் என்று ஸ்கைமெட் கணித்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கமான பருவத்தில் துவங்கினாலும், வழக்கத்தை விட சுமார் 15 சதவிகிதம் வதை குறைவாகவே பெய்யக்கூடும் என்றும் ஸ்கைமெட் கணித்துள்ளது.
பருவமழை குறையும்
ஏற்கனவே கோடை மழை கைவிட்டதால் பொருளாதார வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் விவசாய உற்பத்தியும், தொழில் துறை வளர்ச்சியும் நடப்பு ஆண்டில் குறைந்து விட்டது. இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழையாவது கை தூக்கிவிடும் என்று அனைத்து தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தனியார் வானிலை ஆய்வு மையமோ இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கமாக துவங்கினாலும் வழக்கத்தைக் காட்டிலும் குறைவாக 93 சதவிகித அளவிற்கே பெய்யும் என்று கணிப்பை வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழையானது, மாரத்வாடா (Marathwada) மற்றும் மஹாராஷ்ட்டிராவின் விதர்பா (Vidarbha) பகுதிகளில் ஜூன் முதல் செப்டம்பர் பருவத்தில் வழக்கத்தை விட 9 சதவிகிதம் குறைவாகவே பெய்யும் என்று கணித்துள்ளது. அதேபோல், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், வட கர்நாடகா மற்றும் ராயலசீமா ஆகிய பகுதிகளிலும் இந்த ஆண்டு வழக்கத்தைவிட 5 சதவிகிதம் குறைவாகவே தென்மேற்கு பருவமழை பெய்யும் என்றும் தனியார் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டிலும் இதேபோல் வழக்கத்தை விட 9 சதவிகிதம் குறைவாகவே தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. கடந்த ஆண்டில் 91 சதவிகிதமே மழை பதிவாகியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள கணிப்பின் படி, வரும் 19-21ஆம் தேதி வாக்கில் வங்கக்கடல் பகுதியில் துவங்கும் தென்மேற்கு பருவமழை வடகிழக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் பரவலாக பெய்யக்கூடும் என்றும் பின்னர் படிப்படியாக தென்னிந்தியாவின் லட்தத் தீவுகள் மற்றும் கேரளாவில் தீவிரமடைந்து நாடு முழுவதும் பரவும் என்று தெரிவித்துள்ளது.
ஜூன் 6ல் தொடங்கும்
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக 5 நாட்கள் தாமதமாகவே பெய்யும் என்றும், ஜூன் 6ம் தேதி முதல் பருவமழையை எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளது.
வருணபகவான் மனது வைக்கணும்
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் சரியான நேரத்தில் பருவமழை துவங்கும் என்றும், அது இந்த வாரத்தின் இறுதியில் இருந்து ஆரம்பமாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மக்களே வருணபகவானை வேண்டிக்கங்க... அவர் மனது வைத்தால் அதிக அளவில் மழை பெய்து அணைகள் நிரம்பும்.