டெல்லி: உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனமான ஐபிஎம் இந்தியாவில் சேவைகள் பிரிவில் பணியாற்றும் சுமார் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானதால் அதில் பணியாற்றும் ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திலும் இதுபோல் சுமார் 200 மூத்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்துவிட்டு அதற்கு பதிலாக கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்களை பதவி உயர்வு அளித்தது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய அளவில் தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் ஆயிரக்கணக்கானவர்களை தொடர்ச்சியாக பணியில் இருந்து நீக்குவதுதான்.
இதற்கு அந்த நிறுவனங்களின் சார்பில் சொல்லப்படும் சொத்தை காரணம் ஊழியர்களின் திறமை குறைவு அல்லது கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்களை முன்னுக்கு கொண்டு வருவதற்காக வயது மூப்பின் காரணமாக அவர்களை பணியில் இருந்து நீக்குவது. அனைத்து சர்வதேச நிறுவனங்களும் சொல்லி வைத்தது போல் இதே பல்லவியைத் தான் பாடுகின்றன.
இது போதாதென்று உலகின் பெரும்பாலான நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையின் காரணமாகவும் முன்னணி சர்வதேச நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவது தவிர்க்க முடியாமல் போவதுதான். வேலையை விட்டு நீக்குவதன் மூலம் வேலையை இழக்கும் ஊழியர்களுக்கு இழப்பீடாகவே கோடிக்கணக்கில் பணத்தை செலவழிப்பதும் வாடிக்கை.
தற்போது, தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகின் முன்னணி உள்ள ஐபிஎம் நிறுவனமும் இந்தியாவில் சேவைகள் பிரிவில் பணியாற்றும் 300 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளது.
ஐபிஎம் நிறுவனம் தன்னுடைய தகவல் தொழில்நுட்பத் துறையை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சார்ந்த செயல்பாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. கூடவே தன்னுடைய வாடிக்கையாளர்களின் மாறி வரும் விருப்பத்திற்கு புது யுக்திகளை கண்டுபிடித்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முயன்று வருகிறது.
ஐபிஎம் எடுத்துள்ள புது முயற்சியால் தற்போது பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுவும் இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களை குறிவைத்து இந்த வேலை நீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் இந்திய கிளைகளில் மென்பொருள் துறையன் சேவைகள் பிரிவில் பணியாற்றும் சுமார் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு அதற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு மற்றும் க்ளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) தொழில்நுட்பத் திறன் படைத்தவர்களை புதிதாக பணியில் அமர்த்த உள்ளதாக ஐபிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்பங்கள் வரும்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள ஊழியர்களின் வேலை இழப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆனாலும் கூட மீண்டும் அவர்களே புதிய திறமைகளோடு வரும்போது புதியவர்களோடு அவர்களையும் பணியில் அமர்ததுவது இயல்பாக நடப்பது தான்.
இன்றைக்கு சர்வதேச நிறுவனங்கள் அனைத்தும் இதே நடைமுறையைத் தான் பெரும்பாலும் பின்பற்றி வருகின்றன. இப்பொழுது ஐபிஎம் நிறுவனமும் இதே நடைமுறையை பின்பற்றி நடக்கத் தொடங்கியுள்ளது. எனவே தான் பணிநீக்கம் செய்யப்படும ஊழியர்கள் புதிய திறனுடன் மீண்டு வரும்போது அவர்கள் திரும்பவும் பணியமர்த்தவும் ஐபிஎம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திலும் இதேபோல், சுமார் 200 மூத்த ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது. தற்போது இந்த ஆண்டு சுமார் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.
பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு புதிய தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி அளிப்பதற்கான செலவுகள் அதிகமாக உள்ளது. மேலும் மனிதவளத் துறையும் இதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. இதன் காரணமாகவே புதிய ஊழியர்களை பணியில் சேர்த்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஐபிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.