நொய்டா: இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் இனிமேல் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப முடியாது என்று உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற இம்மாவட்ட நீதிமன்ற நீதிபதி பிரேஜேஷ் நரைன் சிங் கூறினார். இந்த அறிவிப்பு வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். இச்சட்டத்தை மீறினால் இந்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 129இன் படியும், இந்திய தண்டனைச் சட்டம் 188இன் கீழ் 6 மாதங்களை வரையிலும் சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டும்போது மற்றவர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் விதமாக வாகனத்தை அதி வேகமாக ஓட்டி சாகசச் செயல்களில் ஈடுபடுவதுண்டு. அப்படி வேகமாக ஒட்டிச் சென்று பெரிய அளவில் விபத்தில் மாட்டி உயிரையோ அல்லது உடல் உறப்புகளையோ இழப்பது தவிர்க்க முடியாதது.
இப்படி விபத்தில் மாட்டிக்கொள்ளும்போது தலையில் பெரிய அளவில் அடிபடாமல் இருக்கவே தலைக்கவசம் என்னும் ஹெல்மெட் அணியவேண்டும் என்பது அவசியமாகும். இதை அனைவரும் பின்பற்றி நடக்கவேண்டும் என்பதும் மிக அவசியமாகும்.
நாட்டிலுள்ள பெரும்பாலான மாநிலங்களும் இதற்கென சட்டங்களை இயற்றியுள்ளன. நீதிமன்றமும் இதை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதை பெரும்பாலானவர்கள் பின்பற்றி நடப்பதில்லை. சட்டத்தை மீறி நடக்கும் போது ஏற்படும் போதுதான் விபத்துகளும் ஏற்படுகின்றன.
விபத்துகள் ஏற்படும்போது மட்டுமே பெரும்பாலானவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியமும் மண்டையில் புரிகிறது. தினசரி நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையில் இரு சக்கர வாகன விபத்துக்களே சுமார் 29 சதவிகித அளவில் உள்ளன.
நாளொன்றுக்கு சராசரியாக 134 இரு சக்கர வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாக புள்ளிவிவரமும் பயமுறுத்துகிறது. மேலும் நாள்தோறும் நடக்கும் இருசக்கர வாகன விபத்துக்களில் ஹெல்மெட் அணியாததால் மட்டுமே 98 பேர் மரணமடைவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதிலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் நாள்தோறும் இரு சக்கர வாகன விபத்துக்கள் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை எல்லாம் வைத்துத் தான் நொய்டா மாவட்டத்தில் நடந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ப்ரேஜேஷ் நரைன் சிங் கூறினார்.
இந்த அறிவிப்பு வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்களில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை இயக்குவது சட்ட விரோதமாகும். ஆகவே தான், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப வருபவர்களுக்கு கண்டிப்பாக பெட்ரோல் வழங்கக் கூடாது என்றும் உத்தரவுடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது மோட்டார் வாகனச் சட்டம் 1988இன் படி பிரிவு 129இன் படி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188இன் கீழ் சுமார் 6 மாதங்கள் வரையிலும் சிறைத் தண்டனை அளிக்க முடியும்.
ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோரின் ஓட்டுநர் உரிமம் (License) சஸ்பெண்ட் செய்யப்படும் என்றும், ஹெல்மெட் அணியாமல் வந்து பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் தகராறு செய்வோர் கைது செய்யப்படுவார்கள் என்றம் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.