டெல்லி: அமெரிக்கா சீனா இடையில் நடக்கும் வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் வேளையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியா தன்னுடைய ஏற்றுமதியை அதிகரித்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயம் என்று இந்திய வெளிநாட்டு வர்த்தக மையத்தின் பேராசிரியர் ராகேஷ் மோகன் ஜோஷி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இரு வல்லரசு நாடுகளுக்கு இடையில் நடக்கும் வர்த்தகப் போரினால் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே 4400 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா சீனா நாடுகளுக்கு இடையில் நடக்கும் வர்த்தகப் போர் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது. இரு நாடுகளும் மாற்றி மாற்றி இறக்குமதி பொருட்களுக்கான வரியை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இவ்விரு நாடுகளின் சண்டையால் உலக நாடுகளின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. உலகளாவிய பங்குச் சந்தைகளும் ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.
இவ்விரு நாடுகளின் சண்டையினால் மற்ற நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும் இந்தியாவுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த அரிய வாய்ப்பை இந்தியா எப்படி பயன்படுத்தப்போகிறது என்பது தான் பெரிய கேள்விக்குறியாக தொக்கி நிற்கிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியா எப்படி ஏற்றுமதியை அதிகரித்துக் கொள்ளலாம், அதற்கான வாய்ப்புகள் என்ன என்பது பற்றி இந்திய வெளிநாட்டு வர்த்தக மையத்தின் (Indian Institute of Foreign Trade-IIFT) பேராசிரியர் ராகேஷ் மோகன் ஜோஷி (Rakesh Mohan Joshi) தெளிவாக விளக்கிக் கூறினார்.
முதலில் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஆயத்த ஆடைகள், விவசாய விளை பொருளான சோயாபீன்ஸ், ஆட்டோமொபைல், இயந்திர உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவுக்கு சாதகமான வாய்ப்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. குறிப்பாக ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் ஆயத்த ஆடைகள் தயாரிப்பதற்கான அதிக வளங்களையும் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்களுக்கு தேவையான ஆயத்த ஆடைகளை இந்தியாவில் இருந்தே தயாரித்து அனைத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமுடியும் என்று ஜோஷி தெளிவாக் சுட்டிக் காட்டி விளக்கினார்.
ஜோஷி சொன்னது போல் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே ஆயத்த ஆடைகள் தயாரிப்புக்கு பெயர் பெற்ற திருப்பூர் சுமார் 4400 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏற்றுமதி ஆர்டர்களை பெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஆர்டர்கள் கிடைக்கும் என்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதேபோல் இயந்திர உதிரிபாகங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட சோயாபீன்ஸ் ஆகியவற்றை அமெரிக்கா சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது, ஆனால் சீனா இவற்றுக்கு அதிக வரி விதித்துள்ளது. இந்தியா இந்த வாய்ப்பை பயன்படுத்தி இவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளலாம் என்றும் ஜோஷி கூறினார்.
அடுத்ததாக தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் இயந்திர உதிரி பாகங்கள் ஆகிய துறைகளில் ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக இறக்குமதி வரி விதித்துள்ளது. இந்திய இவ்வகையான பொருட்களை ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த சிறப்பான வாய்ப்புகளை அடிமட்டத்தில் இருந்து கவனமாக ஆராய்ந்து ஏற்றுமதி செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் ஜோஷி கூறினார்.
இதே யோசனையைத் தான் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பும் (Federation of Indian Export Organizations-FIEO) தெரிவித்துள்ளது. இந்தியா கடந்த 2018ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு செய்த ஏற்றுமதியின் அளவு சுமார் 11.2 சதவிகிமாகும். ஆனால் சீனா 31.4 சதவிகிதம் ஏற்றுமதி செய்துள்ளது என்று FIEO தலைவர் கணேஷ் குமார் குப்தா தெரிவித்தார்.
வர்த்தகப்போரினை பயன்படுத்தி சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் தேவையான பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்வதன் மூலம் வாய்ப்பை சாதகமாக்கிக்கொள்ளலாம்.