திருவனந்தபுரம்: கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சரிந்த கேரள அரசின் நிதி நிலையை சீர்படுத்த கேரள அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. நிதி நிலையை மேம்படுத்த மசாலா பொருள்களின் பாண்டுகளை விற்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் கேரளாவையே புரட்டி போட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிர கோடிகள் அளவில் உடமைகள் சேதமாகின. மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது உடமைகளையும் சொத்துக்களையும் இழந்து வீதிக்கு வந்தனர்.
இவர்களுக்கு இந்தியாவே உதவிக்கரம் நீட்டியது. தமிழக மக்கள் உட்பட இந்திய மாநில மக்கள் அனைவரும் கேரள மாநிலத்திற்கு பெருமளவு உதவி செய்தனர். இருந்தாலும் கேரளாவின் நிதி நிலை இன்னமும் சரியாகவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் முடங்கிப்போன கேரள நிதி நிலையை மீட்டெடுக்க மசாலா பத்திரங்கள் விற்பனை மூலம் நிதி திரட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.2,150 கோடி மதிப்பிலான மசாலா பத்திரங்களை லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிட கேரள முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்துள்ளார்.
முடங்கி இருக்கும் கேரள அரசின் நிதி நிலையை சரி செய்ய கேரளாவின் பொருளாதார நிபுணர்களில் ஒருவரும் அமைச்சருமான தாமஸ் ஐசக் இந்த யோசனையை கேரள அரசுக்கு கூறியுள்ளார். மசாலா பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் திரட்டப்படும் நிதியை வைத்து கேரளாவின் வளர்ச்சியை முன்னெடுக்கலாம் என்பது நிதியமைச்சர் தாமஸ் ஐசக்கின் திட்டம்.
அவரது இந்த திட்டப்படி மசாலா பத்திரங்களை கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு வாரியம் வெளியிட உள்ளது. இந்த மசாலா பத்திரங்கள் விற்பனை மூலம் ரூ.2,150 கோடி நிதித் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளனர். இந்த முயற்சி வெற்றியடைந்தால், பல மாநில அரசுகள் இந்த வழியைப் பின்தொடர்ந்து நிதித் திரட்டும் நடவடிக்கைகளில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி நிலையை மேம்படுத்த ஒரு மாநில அரசு மசாலா பத்திரங்களை வெளியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.