பெங்களூரு: இந்தியாவில் உள்ள மக்கள் தற்போது ஷாப்பிங், பணம் பரிமாற்றம், பயன்பாட்டு பில் பணம் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ் ஆகியவற்றோடு தங்கள் உள்நாட்டுப் பயணங்களுக்கான விமான டிக்கெட்களையும் அமேசானில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் இந்த அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான்.

இந்த சேவைக்காக ஆன்லைன் சேவை நிறுவனமான கிளியர் டிரிப் (Cleartrip)வுடன் கைகோர்த்துள்ளது அமேசான். இந்த நிலையில் அமேசான் பே நிறுவனத்தின் இயக்குனர் ஷாரிக் பிளாஸ்டிவாலா கூறுகையில், கிளியர் டிரிப் நிறுவனத்துடனான இந்த இணைப்பு எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது.
இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பயண அனுபவங்களை வழங்க முடியும் என்றும் கூறியுள்ளார் ஷாரிக்.
இதோடு விமான டிக்கெட்களை புக் செய்து கேன்சல் செய்பவர்களுக்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்ற சலுகையையும் வழங்கியுள்ளது இந்த நிறுவனம். எனினும் விமான நிறுவனங்கள் விதிக்கும் கேன்சல் சார்ஜ்ஜள் வசூலிக்கப்படும் என்றும், தனிப்பட்ட முறையில் அமேசான் எந்த கட்டணமும் விதிக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விமான டிக்கெட்களை பதிவு செய்வதற்கு அமேசான் பே பக்கத்தின் மூலமாகவும், அமேசான் மொபைல் ஆப் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் இதன் மூலம் அமேசான் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். அதோடு அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் இதன் மூலம் மிகுந்த பயன் அடைவர் என்றும் நம்புகிறோம் என்றும் ஷாரிக் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த சில்லறை வணிக நிறுவனத்தால் பல்வேறு இந்திய சிறு குறு நிறுவனங்கள் பாதிப்படைந்து வரும் நிலையில், இந்த புதிய களம் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது போக போகத்தான் தெரியும்.
எனினும் மக்கள் முழுக்க முழுக்க அமேசானை தேடி செல்லும் அளவுக்கு ஒவ்வொரு துறையாக மெதுவாக காலடி எடுத்து வைத்து வருவதும், இதனால் மேன்மேலும் இந்திய குறு நிறுவனங்கள் பாதிப்படைவதும் வாடிக்கையாக நடந்து வரும் ஒரு செயலாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications